கதம்ப வனத்தில் நடந்த செய்திகள்

கதம்ப வனத்தில் மூன்றுலகம் புகழும்படி அரசு செலுத்திய வீராதிவீர குண்டோதரராய சிங்க மகாசிங்கனுடைய அரண்மனை அந்தப்புரத்தில், அவனுடைய பட்டத்து ராணியாகிய சுவர்ணாம்பா தனியே உட்கார்ந்திருந்தாள். சிங்க ஜாதிக்குள்ளே இவள் தன் போலே அழகும், கல்வியும் பராக்கிரமமும் உடையவள் வேறில்லை யென்று தன் மனதுக்குள்ளே நினைத்திருந்தாள். இவளுக்கு அந்தக்காட்டில் வசித்த மிருகங்களனைத்திலும் அதிக அந்தரங்கமான சிநேகம் யாரிடத்திலேன்றால், விருத்திமதியென்ற எருமைச்சியினிடத்திலேயாம்.
அந்த விருத்திமதி வெயர்க்க வெயர்க்க ஓடியே வந்து சிங்கச்சி சுவர்ணா தேவியின் காலில் விழுந்தாள்.
"என்ன விஷயம்?" என்று சிங்கச்சி கேட்டாள்.
அப்போது விருத்திமதி சொல்லுகிறாள்:- "மகாராணியே, கேள். இன்று காலை என் வீட்டுக்குப் பொன்னங்காட்டிலிருந்து என் தோழியாகிய நரிச்சி நல்லதங்கை வந்தாள். அவளை என் வீட்டுக்குள் புகுந்து இந்த ராஜ்யத்தின் சிப்பாய்கள் கைது பண்ணிக் கொண்டு போயினர். ஏதோ தவறுதலாகவே இந்தக் காரியம் நடந்துவிட்டதென்று நினைக்கிறேன். யாரோ அவள்மீது குண்டோதர மகாசிங்கனிடம் குற்றம் சார்த்திப் பேசியிருக்கிறார்கள். அதனால் அவளுக்கு இந்தக் கதி நேரிட்டுவிட்டது.
"ஐயோ! நான் என்ன செய்வேன்? என்னுடைய உயிர்த் தோழியாயிற்றே! நான் இந்த அரண்மனைக்கு எத்தனையோ காலமாக உண்மையுடன் உழைத்து வருகிறேனே; என் வீட்டுக்கு வந்த தோழிக்குச் செய்யப்பட்ட அவமானம் எனக்கே செய்யப்பட்டது போலாகுமன்றோ?
மேலும் அவள் பொன்னங்காட்டு வீரவர்ம ராஜனைக் குழந்தைப் பருவ முதலாக வளர்த்த செவிலித்தாய். அந்தவீரவர்மன் இவளைத் தாய்க்குச் சமானமாக ஆதரித்து வருகிறான். இவளைப் பிடித்துக் குண்டோதர சிங்கர் அடைத்து வைத்திருக்கிறார் என்ற செய்தி கேட்டால், அவன் உடனே கதம்பவனத்தின்மீது படையெடுத்து வருவான். அவன் படையெடுத்து வருவான். அவன் படையெடுத்து வந்தால் அவனை எதிர்த்துப் போர் செய்ய நமது சைந்நியத்தால் முடியாது. நமது ராஜ்யம் அழிந்து போய்விடும். ஐயோ! வீரவர்மனை எதிர்த்தபடியாலே தண்டிராஜன் பட்ட பாடும், அவன் தம்பி உத்தண்டி இப்போது படுகிற பாடும் தெரியாதா?
மகாராணியே நீயும் நானும் இணைபிரியாமல் இரண்டு பக்ஷிகள் ஒரு கூட்டில் வாழும் முறைமையாலே, இருவரும் அன்பாகிய கூட்டில் வாழ்ந்து பல வருஷங்களாக ஒன்றுகூடி இருக்கிறோம். சூரியனுக்கும் குளப்பூவுக்கும் சிநேகமுண்டாகும்போது அவ்விரண்டுக்கும் சமானத் தன்மை உண்டாகிறது. மேலும் கீழும் அன்பினால் சமத்துவத்தை அடைகின்றன. உன்னைப் போல குலத்திலும், நலத்திலும், மகிமையிலும் சிறந்த சிங்கச்சிமார் எத்தனையோ பேர் உலகத்தில் இருக்கக்கூடும். உனக்கு அவர்கள் எல்லோரையும்விட என் மேலே அதிக அன்பு உண்டாயிருக்கிறது. நான் கீழ்க் குலத்திலே பிறந்தாலும். எப்போதும் என் கண்களில் பதுமை போலே உன்னை வைத்துக் கொண்டு போற்றுவதனால் நான் மகிமை பெற்று உன்னுடைய அன்புக்குப் பாத்திரமானேன்.
எனக்கு மகத்தான கஷ்டம் நேரிட்டிருக்கும்போது. நீ சகித்திருப்பது நியாயமன்று. எனக்கு நீயே துணை, நீயே தோழி, நீயே தாய், தந்தை, நீயே தெய்வம், எனக்கு உன்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு கதி கிடையாது. நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று சொல்லிக் கோவென்றலறி அழுதாள்.
அப்போது சிங்கச்சி சுவர்ணாதேவி அவளைச் சமாதானப்படுத்திவிட்டு உடனே பக்கத்திலிருந்த பாங்கி ஒருத்தியைக் கூவி:- `பெண்ணே, நீ போய் ராயசிங்கரை நான் அழைத்துவரச் சொன்னதாகச் சொல்லு. உடனே கூட்டிவா" என்றது.
சாயங்காலம் பொழுது புகுந்துவிட்டது. சிங்க குண்டொதரன் தனது ராஜதானியாகிய கதம்ப நகரத்திற்கு சமீபத்தில் ஓடும் நர்மதா நதியில் சாயங்கால ஸ்நானம் செய்து முடித்துவிட்டு சந்தியா வந்தனம் பண்ணிக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் பாங்கி போய் காலிலே விழுந்தாள்.
"என்ன சங்கதி?" என்று கேட்டான்.
"பெரிய ஆபத்தாம், இன்னதென்று எனக்குத் தெரியாது. சுவர்ணாதேவி தேவரீரை உடனே அழைத்து வரும்படி கட்டளையிட்டார்" என்றது.
பயந்து, நடுங்கிப் போய் குண்டோதர சிங்க மகாசிங்கன் சந்தியாவந்தனத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, அப்படியே ஓடி அந்தப்புரத்துக்குள் வந்தது. அங்கு வந்து பார்த்தால் விஷயம் ஒன்றையும் காணவில்லை. மூன்று ஆசனங்கள் போட்டிருந்தன. எருமைச்சி விருத்திமதி ஒன்றின் மேலே வீற்றிருந்தாள். மகாராணி சுவர்ணாதேவி ஒன்றில் வீற்றிருந்தாள். மற்றொன்று வெறுமே இருந்தது.
"என்ன விஷயம்?" என்று கேட்டுக் கொண்டே குண்டொதரன் அந்தப்புரத்திற்குள் புகுந்தான். இவனைக் கண்டவுடன் விருத்திமதியும் சுவர்ணாவும் தம் ஆசனங்களிலிருந்தெழுந்து நின்றனர். "என்ன விஷயம், என்ன விஷயம்?" என்று குண்டோதரன் நெரித்துக் கேட்டான்.
"விருத்திமதியிடம் கேளுங்கள். அவள் சொல்லுவாள்" என்று சுவர்ணா சொன்னாள்.
"ஓஹோ பெரிய விபத்து ஒன்றும் இல்லை, அந்த நரிச்சி விஷயம்தான். அவளை விடுவிக்கச் சொல்லி இந்த எருமைச்சி கேட்க வந்திருக்கிறாள். நாம் மடத்தனமாக அளவுக்கு மிஞ்சி மனம் பதற இடம் கொடுத்துவிட்டோம். இருந்தாலும் நம்முடைய பயத்தை வெளியே காண்பிக்கக்கூடாது" என்று மனதில் நினைத்துக் கொண்டு மீசைகளைத் திருகி விட்டு, லேசான ராஜநடை நடந்துபோய் மூன்றாம் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு குண்டொதரன் தொண்டையைக் கனைத்து நேராக்கிக் கொண்டு விருத்திமதியை நோக்கி "என்ன விஷயம்?" என்றான்.
அப்போது விருத்திமதி சொல்லுகிறாள்:- "ராஜேச்வரா, தங்களுடைய ராஜ்யத்திற்குப் பெரிய விபத்து நேரிட்டிருக்கிறது. தங்கள்மீது வீரவர்மன் படையெடுத்து வரப்போகிறான். இவ்வளவு காலம் இந்த ராஜ்யத்தில் சமாதானமிருந்தது. இப்போது பாழ்த்த யுத்தம் இங்கு வந்து பிரவேசிக்கப் போகிறது. ஐயோ, நாங்கள் என்ன செய்வோம்? குடிகளை எல்லாம் சுவர்ணாதேவி தன்னுடைய பெற்ற குழந்தைகளுக்குச் சமானமாக நினைப்பவளாயிற்றே! அவளுடைய பழக்கத்தால் எனக்கு இந்த ராஜ்யத்தினிடம் அருமையான பக்தி உண்டாய்விட்டதே! என் உயிருக்கு மாத்திரம் தீங்கு வருவதாக இருந்தால் நான் அதைப் பொருட்டாக நினைக்கமாட்டேனே! ராஜ்ய முழுமைக்கும் ஹானி வருகிறதே!
ஆஹா! என் செய்வேன்? எத்தனை சுமங்கலிகள் தாலி யறுப்பார்கள்! எத்தனை
தாய்மார் பிள்ளையற்றுப் போவார்கள்! எத்தனை குழந்தைகள் தந்தையற்றுப் போகும்! எத்தனை தாய்மார் பிள்ளைகளைச் சாகக் கொடுத்து எங்கும் தீராத துக்கத்துக்காளாய், பரத்திலும் புத் என்ற நரகத்திலும் விழும்படியாகும்!
ஐயோ, புத்திரர்களில்லாத பிதாக்கள், புத் என்ற நரகத்துக்குப் போவார்களென்று சாஸ்திரங்கள் திண்ணம் கூறுகின்றனவே! உமது புத்திரர்களே போரில் மடியும்படி நேர்ந்தாலும் நேரிடக்கூடுமே! அப்போது நீர் எப்படியெல்லாம் கஷ்டப்படுவீரோ, அறிகிலேன். தேவரீருடைய பிராணனுக்கே ஆபத்தல்லவா? நாங்கள் என்ன செய்வோம்? இனி நான் சுவர்ணாதேவியின் முகத்தில் எப்படி விழிப்பேன்?" என்று சொல்லிக் `கோ` வென்று விம்மி விம்மி அழுதாள்.
குண்டோதர ராயன்:- "ஏன் அந்த வீரவர்மன் நம்மீது படையெடுத்து வரப்போகிறான்? அதை முதலாவது சொல்லு" என்று உறுமினான்.
அப்போது விருத்திமதி;- "தங்களுடைய சிப்பாய்கள் வீரவர்மனுடைய தாய்க்குச் சமானமான செவிலித்தாயைப் பிடித்துச் சிறைப்படுத்தி விட்டார்கள்! இந்த விஷயம் அவன் கேட்டால், க்ஷணம் கூட பொறுக்கமாட்டான். யுத்தம் வருவது நிச்சயம்" என்று சொன்னாள்.
இது கேட்ட குண்டோதர சிங்க மகா சிங்கராயன் "எனது சிப்பாய்களால் கைதி செய்யப்பட்ட வீரவர்மனுடைய செவிலித்தாயின் நாமம் யாது?" என்று வினவினான்.
"நரிச்சி நல்ல தங்கையம்மன்" என்று விருத்திமதி சொன்னாள்.
இதைக் கேட்ட குண்டோதர சிங்கராய மகாசிங்கன் கடகட கட கடகட கட வென்று சிரிக்க ஆரம்பித்தான்.