கமலை-1

வறண்ட பிரதேசங்களில் பூமிக்குள் இருக்கும் தண்ணீரைக் கிணறு வெட்டி கடின உழைப்பால் கமலையின் மூலம் வெளிக்கொணர்ந்து தோட்டப்பயிர் செய்வார்கள். கமலையென்ற தகரத்தாலான பாத்திரத்தில் தோலாலான வால் என்ற பையைக் கட்டிக் கயிற்று வடங்களை இணைத்து மர உருளைகளைப் பொருத்தி மாடுகளைப் பிணைத்து முன்னும் பின்னுமாக ஓட்டி நீர் இறைக்க வேண்டும். இதற்கு அனுபவம் வேண்டும். அனுபவமில்லாத அவளது மச்சான் கமலை இறைக்கத் தெரியாமல் திண்டாடுவதைக் கண்டு கேலியும், அனுதாபமும் கலந்து பாடுகிறாள்.
பொட்டலிலே வீடுகட்டி
பொழுதிருக்கத் தாலிகட்டி
கருத்தக் காளை ரெண்டும் கட்டி
கமலெறைக்கப் போகும் கருத்த துரை
பொட்டலிலே கிணறு வெட்டி
போர்க்காளை ரெண்டும் கட்டி
காப்புப் போட்ட கருத்த மச்சான்
கமலை கட்டத் தெரியலையே
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி.
-----------
சில நாட்களில் கமலை இறைப்பதில் தேர்ச்சிபெற்று விட்டான். அது கண்ட அவள் உளம் மகிழ்ந்து அவனைப் புகழ்கிறாள்.
கமலை யலங்காரம்
கமலை மாடு சிங்காரம்
கமலை யடிக்கும் மன்னருக்கு
கருத்தப் பொட்டலங்காரம்
சாலை யோரம் கிணறு வெட்டி
சாஞ்ச கமலை போட்டு
இழுத்து விடும் கருத்தத்துரை
இனிக்குதையா கிணத்துத் தண்ணி
மந்தையிலே கிணறு வெட்டி
மயிலைக் காளை ரெண்டு பூட்டி
சீதனம் கொடுத்தானே
சிமிட்டி பாயும் கமலைத் தண்ணி
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: கோவில்பட்டி.
----------
சில ஊர்களில் கண்மாய்ப் பாசனம், ஆற்றுப் பாசனம் உள்ள இடங்களில் மண்வெட்டியால் தண்ணீரை விலக்கி விட்டால் போதும் வேலை முடிந்தது. அவன் மடை திறந்து விட்ட நீரில் குளிப்பதில் அவளுக்குப் பெருமை, அவனுக்கும் தான்.
மண் வெட்டி கொண்டு
மடை திறக்கப் போறசாமி
மடையைத் திறந்து விடு
மஞ்ச நீராடி வாரேன்
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: கோவில்பட்டி.
----------