கழியை விட்டதால் இறந்த ஆமை

bookmark

ஓர் அழகிய குளம் ஒன்றில் இரண்டு அன்னப் பறவைகள் வாழ்ந்து வந்தன. ஒன்றின் பெயர் விகடம். மற்றொன்றின் பெயர் சங்கடம். அதே குளத்தில் கம்புக்கிரீவன் என்ற ஆமையும் வாழ்ந்து வந்தது. 

விகடம், சங்கடம், கம்புக்கிரீவன் ஆகிய மூவரும் நல்ல நண்பர்கள். காலப்போக்கில் மழைப்பொழிவு குறைந்ததால், குளத்தின் நீரளவு குறையத் தொடங்கியது.  இதனைக் கவனித்த அன்னப் பறவைகள், இனியும் இந்தக் குளத்தை நம்பி வாழ்வது பயனற்றது. இனி நாம் வேறொரு குளத்திற்குச் செல்வோம் என்று முடிவு செய்தன. தங்களின் இந்த முடிவைத் தங்கள் நண்பனான ஆமையிடமும் கூறின. 

நண்பர்களே! நீங்கள் பறந்துசென்று வேறு ஒரு குளத்தினை அடைந்துவிடுவீர்கள். நான் எப்படி வேறு குளத்திற்குச் செல்வது? எனக்கும் ஏதாவது வழி சொல்லுங்களேன்! என்றது ஆமை. 

அன்னப் பறவை விகடன், ஆமையிடம் நண்பா! 
நாங்கள் ஒரு நீண்ட கழியினைக் கொண்டு வருகிறோம். அதன் ஒரு முனைப் பகுதியை நானும் மற்றொரு முனைப் பகுதியை சங்கடகனும் வாயால் கவ்விப் பிடித்துக் கொள்வோம். நீ அந்தக் கழியின் நடுப்பகுதியில் உன் வாயால் கவ்விக் கொள்ள வேண்டும். நாங்கள் இருவரும் கழியால் உன்னைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்று வேறு ஒரு குளத்தினை அடைவோம் என்று தங்கள் திட்டத்தினைக் கூறியது. 

நண்பா! இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பறந்து செல்லும் போது நீ எதுவும் பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் நீ கீழே விழுந்துவிடுவாய். பிறகு உன்னை எங்களால் காப்பாற்ற முடியாது என்று சங்கடகன் கூறியது. 
நண்பர்களே! கவலை வேண்டாம். நான் பேசவே மாட்டேன் என்று உறுதியளித்தது ஆமை.
விகடன் கூறியது போலவே கழியில் ஆமையைத் தூக்கிக் கொண்டு அன்னப் பறவைகள் பறக்கத் தொடங்கின. 

ஓர் ஊரின் வழியாகப் பறந்து செல்லும் போது, ஊர் மக்கள் இந்த அதிசயமான காட்சியைப் பார்த்து வியந்தனர். அவர்கள் கூவி ஒலியெழுப்பினர். எங்கிருந்து இந்த சப்தம் வருகின்றது? என்று நினைத்த ஆமை, அன்னப் பறவைகளிடம் கேட்க நினைத்துத் தன் வாயைத் திறந்தது. உடனே, ஆமையின் பிடி கழியிலிருந்து நழுவியது. ஆமை கீழே விழுந்து இறந்தது. 

நீதி :நமக்கு நன்மை செய்கின்றவர்களின் பேச்சை நாம் மதிக்கவேண்டும் என்று பெண் பறவை, ஆண் பறவைக்குக் கூறியது.