கவலைக்கு ஆளானேன்

bookmark

தாய் இறந்துவிட்டாள்; மகள் விதவை. அண்ணனுக்கு மணமாகிவிட்டது. மதினி, மணமாகக் காத்திருக்கும் இப் பெண்ணை அன்பாக நடத்துவதில்லை. கலியாணமானால், தாயார் கப்பல் கப்பலாகச் சீர் அனுப்புவாள். அக்காலமெல்லாம் போய்விட்டது. இனி உணவு, உடைக்குக் கூடப் பஞ்சம் வந்துவிடும். தாய் மறைந்தபின் தனது வாழ்வில் ஏற்படப் போகும் மாறுதல்கள் அவளை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. அவள் ஒப்பாரி சொல்லி அழுகிறாள்.

வால் மிளகும் சீரகமும் 
வரிசை வரும் கப்பலிலே

வனத்துக்கு அனுப்பி வைத்தேன் 
சிறுமிளகும் சீரகமும் 
சீருவரும் கப்பலிலே 
சீரு விடும் தாயாரை நான் 
சீமைக்கே அனுப்பி வைத்தேன் 
கப்பல் வருமென்று 
கடற்கரையே காத்திருந்தேன் 
கப்பல் கவுந்தவுடன் எனக்குக் 
கடற்கரையும் ஆசையில்லை 
தோணி வருகுதுண்ணு 
துறைமுகமே காத்திருந்தேன் 
தோணி கவுந்தவுடன் 
துறைமுகமும் ஆசையில்லை 
பத்தூர் தாயும் 
பக்க உதவி செய்தாலும் 
பாசமுள்ள தாய் உன்னைப் 
பாடு வந்தால் தேடிடுவேன் 
எட்டுர் தாயும் 
எனக்குதவி செய்தாலும் 
இன்பமுள்ள தாய் உன்னை 
இடைஞ்சல் வந்தால் தேடிடுவேன் 
சங்கம் புதர் நன்னாடு 
சனம் பெருத்த ராச்சியங்கள் 
இனங்களெல்லாம் ஒண்ணாக நான் 
ஈசுவரியாள் துண்டு பட்டேன் 
இஷ்டமுள்ள நன்னாடு 
இனம் பெருத்த ராச்சியங்கள் 
இனங்களெல்லாம் ஒண்ணாக நான் 
ஈஸ்வரியாள் துண்டுபட்டேன் 
தங்கமலையேறி எனக்குச் 
சாதகங்கள் பார்க்கையிலே 
தங்கமலை ராசாக்கள் என்னோட 
தலை கண்டாத் தீருமினாக 
பொன்னு மலையேறி எனக்கும் 
பொருத்தங்கள் பார்க்கையிலே 
பொன்னுமலை ராசாக்கள் என்னோட 
புகை கண்டாத் தீருமின்னாக

சிற்றாடை கட்டும் பொன்னு, 
சிறு சலங்கை கட்டும்பொன்னு: 
சிறுசிலே அறுப்பேன் என்று 
சிவன் இட்ட கட்டளையோ 
பாவாடை கட்டும் பொன்னு, 
பாதரசம் போடும் பொன்னு 
பாதியிலே அறுப்பேன் என்று எனக்குப் 
பகவான் இட்ட கட்டளையோ 
கத்திரிக்காய் பச்சை நிறம் நான் 
கர்ணன் உடன் பிறந்தாள் 
கர்ணனுட தேவியாலே நான் 
கவலைக்கு ஆளானேன் 
வெள்ளரிக்காய் பச்சை நிறம் நான் 
வீமனுடப் பிறந்தாள் 
வீமனுட தேவியால நான் 
வேசடைக்கு ஆளானேன் 
அல்லியும் பிலாவும் என்னப் பெத்த அம்மா 
அலுங்கப் பழுத்தாலும் 
அஞ்சாமல் கால் வைக்க 
அரண்மனையர் காவலுண்டு 
கொய்யாவும் பிலாவும் 
குலுங்கப்பழுத்தாலும் 
கூசாமல் கால் வைக்க 
கூட்டத்தார் காவலுண்டு 
சீரகம்பூக்க சிறுமுருங்கை பிஞ்சுவிட 
சீருவிடும் தாயாரை நான் 
சீமைக்கே அனுப்பி வைத்தேன் 
கடுகு பூப்பூக்க – கர்ணனெல்லாம் எம் பிறவி 
கர்ணனுக்கு வாச்சவக என்னைக் 
காசா மிதிக்கவில்லை

வட்டார வழக்கு: அரண்மனையர், கூட்டத்தார்-மதினியின் உறவினர்.
சேகரித்தவர்: குமாரி பி. சொரணம்
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
------------