காத்திருந்து வீணாச்சு!

அவர்கள் உறவு சிறு வயது சேர்க்கையில் பிணைக்கப்பட்டது. இருந்தாலும், அவள் இன்று வேறொருவனுக்கு மனைவி, குடும்பத்தின் நிர்ப்பந்தத்தால் அவள் உரிமை இன்னொருவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும் அவள் உள்ளம் மட்டும் தனது காதலனிடமே குடிகொண்டிருந்தது.
தேங்காய் மூடியின் உள்பரப்புப் போன்ற பள்ளமான இடம். காதலர் களித்து மகிழ ஏற்ற இடம். வாய்க்கால் ஓடுகிறது. தண்ணீர் எடுக்க அவன் காதலி அங்கு தினம் வருவது வழக்கம். ஒருநாள் அவளை அவன் சந்திக்கிறான். அவன் பேரில் அவளுக்கு ஒரே ஆசை. மாற்றான் மனைவி என்னும் உரிமை அவனைத் தடுக்கிறது. இருந்தாலும் பழைய உறவு அவனை உசுப்புகிறது.
`தாகமாயிருக்கிறது. தண்ணீர் கிடைக்குமா?`என்று அவளைக் கேட்கிறான்.
அவனைப் போன்றே அவள் உள்ளத்திலும் போராட்டம். அவன் என்ன கேட்கிறான் என்பதை பார்வையின் மூலம் புரிந்து கொள்கிறாள். "நீருண்டு,வீட்டுக்கு வந்தால் நல்ல தண்ணீர் கிடைக்கும்" என்று வீட்டின் அடையாளத்தைக் காட்டிவிட்டு சென்று விடுகிறாள். இரவு நேரம். அடையாளம் குறிப்பிட்ட தென்னை மரத்தடியில் அவன் வந்து அமர்ந்திருக்கின்றான். தனது வருகையை ஏதோ குறிப்பு மூலம் அவளுக்குத் தெரியப்படுத்துகிறான்.
அவளுக்கு என்ன செய்வதென்று புலப்படவில்லை. ஒரு பக்கம் தனது கள்ளக் காதலனை திருப்திப்படுத்த வேண்டும். மறுபுறம் அழும் குழந்தையையும், அடுப்பில் காயும் பாலையும் கவனிக்க வேண்டும். போதாக் குறைக்கு பாலகனைப் பெற்ற பாட்டனார் வேறு தூங்காமல் படுத்திருக்கிறார். தனது காதலனைச் சந்திக்க முடியுமென்ற நம்பிக்கையை இழக்கிறாள். குழந்தைக்குத் தாலாட்டுச் சொல்வது போல தான் வர முடியாத நிலையை உணர்த்துகிறாள்.
அவனுக்கு இதெல்லாம் காதில் விழவில்லை போலும் அவள் வரவை எதிர்பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்கிறான். கிழக்கு வெளுத்தது. அவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. விரகதாபம் அவனை ஏது சொல்வதென்றே தெரியாமல் சொல்ல வைக்கிறது. என்னவென்று?
காதலன்:
ஓடற ஒட்டத்திலே
ஒட்டாங் குச்சிப் பள்ளத்திலே
கஞ்சாக் குடிக்கையிலே
கையூனி நிக்கையிலே
தங்கக் குடம் கொண்டு
தண்ணிக்குப் போற பொண்ணே!
தங்கக் கையினாலே
தண்ணி குடுத்தா ஆகாதோ?
காதலி:
வாய்க்காலுந் தண்ணியிலே
வண்டு வரும் தூசு வரும்
குப்பத்துக்கு வந்திருந்தா
குளுந் தண்ணி நாத் தருவேன்
காதலன்:
வீடுந் தெரியாது வாசலுந் தெரியாது
காதலி:
ஒரு பத்தாஞ் செட்டி வீட்டோரம்
ரெண்டு தென்னம்புள்ளை அடையாளம்
அதுக் கடியில் உட்கார்ந்திரு நாவாரே
வந்தபின்னர்
காதலி:
பாலும் அடுப்பிலே தான்
பாலகனும் தொட்டிலிலே
பாலகனைப் பெத்தெடுத்த
பாட்டனாரும் கட்டிலிலே
போவச் சொன்னா பொல்லாப்பு
நிக்கச் சொன்னா நிட்டூரம்
காதலன்:
கிழக்கு வெளுத்துப் போச்சு
கீழ் வானம் கூடிப் போச்சு
கண்ணாத்தா வாசலிலே
காத்திருந்து வீணாச்சு!
வட்டார வழக்கு: நாவாரே-நான் வாரேன்.
குறிப்பு: "பாலகனைப் பெத்தெடுத்த பாட்டனாரும் கட்டிலிலே, இந்த அடியில் ஒரு சமூக உண்மை பொதிந்திருக்கிறது. கொங்கு நாட்டில் கடந்த இரண்டு தலைமுறைக்கு முன்னர் வரையிலும் தன் வீட்டுக்கு வரக்கூடிய மருமகளுக்கு மாமனார் தான் கணவனாக இருப்பான். கோவில் குளங்களுக்கோ, ஊர் சேதிகளுக்கே போவதானாலும், மாமனாரும்,மருமகளும்தான் சேர்ந்து போவார்கள். இது சமூகத்தின் முன்னால் இழிவாகக் கருதப்பட்டதில்லை. ஒரு கெளரவமாகவே கருதப்பட்டு வந்தது. பொதுவாக கொங்கு வேளாளர் குடும்பங்களில் தந்தையை அண்ணன் என்றும், பாட்டனாரை அப்பன் என்றும் இந்தத் தலைமுறையில் கூட கூப்பிட்டு வருவது இதற்கு ஒரு சான்றாக அமையலாம். மருமகளை மாமனார் ஆண்டு வருவதை பின்தங்கிய கிராமங்களில் இன்னும் கூடப் பார்க்கலாம்.`
(குறிப்புரை - கு. சின்னப்பபாரதி)
உதவியவர்: பொன்னுசாமி
இடம்: ஓலப்பாளையம்.
-------------------