காவிரிப் பெருக்கு

மலையிடைப் பிறந்த ஆரமும் அகிலும், சங்கும் முத்தும், சாமரையும் தந்தமும், பொன்னும் மணியும் அலைகளால் எடுத்து வந்தது காவிரியாறு. வானரசாளும் பெருககு இந்திரனிடம் வருணன் இவற்றையெல்லாம் திறையாகச் செலுத்தச் செல்வது போன்றிருந்தது, அக் காட்சி. பெருமை சான்ற காவிரியின் வெள்ளம், இந்திரனுடைய தந்தவனத்திற் பாய்ந்தது. அம் மன்னன் மனம் போல், உணங்கி வாடி நின்ற பூஞ்சோலை, விரைந்து செழித்து ஓங்கி, அரும்பசியால் நலிந்தோர் அமிர்தம் உண்டாற் போன்று தண்மையுற்றுத் தழைத்தது; நன்றாக மலர்ந்தது. இந்திரன் மனத்தை மகிழ்வித்தது. அதன் நறுமலர் கொண்டு முன்போலவே ஈசனுக்குப் பூசனை புரிய விரும்பினான், இந்திரன், அன்று முதல் ஆதி முதல்வனாகிய பெருமானை முறைப்படி நாள்தோறும் அருச்சனை செய்து சீகாழிச் சண்பகச் சோலையில் இந்திரன் தவம் புரிந்திருந்தான்.
அப்போது சூரனுக்கு ஊழியம் செய்து உலைவுற்ற தேவர் சிலர், "இச் சிறுமை எம்மை விட்டு என்று நீங்குமோ?" என்று ஏங்கி, விண்ணுலகை விட்டு மண்ணுலகம் போந்தனர்; தெள்ளிய தமிழ் மொழியின் இருப்பிடமாகிய தென்னாட்டை அடைந்து புகழமைந்த சீகாழிப் பூங்காவனத்தை நண்ணி, இந்திரனைக் கண்டனர்; அன்று மலர்ந்த செந்தாமரை போன்ற அவன் அடிகளில் விழுந்து எழுந்து போற்றிப் பின் பேசலுற்றார்; "ஐயனே! நீலகண்டனிடம் வரம் பெற்ற சூரனுக்குச் செய்யத் தகாத வேலை யெல்லாம் செய்தோம்; நெறி இழந்தோம். நிலை யிழந்தோம்; மானமும் இழந்தோம்; அல்லற்பட்டு அலுத்தோம்; தொல்லை யுற்றுத் துயருழந்தோம்” என்று பலவாறாக முறையிட்டு வருந்தினார்கள்.
வானவர் இந்திரனிடம் முறையிடுதல்
அது கேட்ட இந்திரன் அன்னார் மனத்திலமைந்த அருந்துயரைக் கண்டான்; நெடுஞ்சிந்தனையில் ஆழ்ந்தான்; அயர்ந்தான். பெருமூச்செறிந்து, "அல்லல் விளைக்கும் அசுரர் பணியால் நாம் எல்லோரும் முறையிடுதல் பெருமை இழந்து சிறுமையுற்றோம். இனி வெள்ளி மாமலையை அடைந்து, இறைவனிடம் முறை யிட்டு நம் துயரத்தைத் தொலைப்போம்" என்று கூறி, இந்திரன் எழுந்து, வானவரை நோக்கி, "சிறிது நேரம் இங்கே இருங்கள்" எனப் பணித்துச் சித்திரப் பாவை போன்ற இந்திராணி இருந்த இடம் போந்தான். "மாதே! வானவரெல்லாம் மனம் நொந்து துன்பத்தால் துடிக்கின்றார்கள்; அன்னவரை அழைத்துக்கொண்டு நம் குறைகளை முறையிடுவதற்காக, மதுரமொழி பேசும் மங்கை பங்களாகிய இறைவன் வீற்றிருக்கும் இமயமலைக்குப் போகின்றேன். இச்செய்தியைச் சொல்ல வந்தேன்” என்றான்.
அம் மொழி கேட்ட அயிராணி மயங்கி விழுந்தாள். "அந்தோர் இன்னுயிர்த் தலைவா! பொன்னாட்டை விட்டும், இப் புனித வனத்திருந்தும். உன் அருளே தஞ்சமாக இன்றளவும் வாழ்ந்திருந்தேன். என்னை நீ பிரிந்தால் பின்னை யாரே துணையாவர்? பேதையேன் பிழைக்குமாறுண்டோ? உன் அன்புடைய மகனும் இங்கில்லை. வானவரும் இல்லை. வெள்ளை யானையும் இல்லை. மாதர் யாரும் இல்லை. தன்னந் தனியாளாக இங்கிருக்க அஞ்சு கின்றேன். மன்னனே! நின்னைப் பிரிந்து என்னுயிர் நில்லாது. ஆதலால், ஒன்று கூறுகின்றேன். முன்னவன் இருந்தருளும் வெள்ளி மாமலைக்கு உன் பின்னே நானும் வருகின்றேன்; எழுக” என்றாள்.
அப்போது இந்திரன் தன் தேவியை நோக்கி, "மாதே! நீ மனம் வருந்தாதே! வானவரோடு நான் கயிலைக்குச் சென்று வருமளவும் உன்னைக் காப்பவர் இல்லை யென்றால் அன்றோ நீ என் பின்னே வர வேண்டும்? ஆற்றல் மிகப்பெற்ற ஐயனார் என்னும் அரிகர புத்திரனே நின்னைக் காத்தருள்வார்;ஆதலால், கவலையற்றிரு” என்று தலைவன் கூறுதலும், "அவ்வையனார் யாவர்?” என்று அயிராணி வினவினாள்.
இந்திரன் ஈசனிடம் செல்லுதல்
அப்போது, அவர் பிறப்பையும் சிறப்பையும் இந்திரன் எடுத்துரைத்தான். ஐயனார் காவலில் இருக்க இசைந்தாள், அயராணி. அது கண்ட இந்திரன், அரிகா புத்திரனை நினைத்துத் துதித்தான். அவர் செல்லுதல் அதை யறிந்து எழுந்தருளிக் காட்சியளித்தார். "ஐயனே யான், இறைவன் அமர்ந்தருளும் கயிலையங்கிரிக்குச் செல்கின்றேன்; மீண்டு வருமளவும் இவ்விந்திராணியைக் காத்தருள்வீராக” என்று வேண்டினான், இந்திரன்.
அப்போது, கையில் செண்டேந்திய ஐயனார். "வாசவனே! இம் மங்கை இங்குத் தனியே இருக்கிறாள் என்று மனக் கவலை கொள்ள வேண்டா. யாதும் தீது வந்தடையாமல் யான் காப்பேன்" என்றார். உடனே வாட்போரில் வல்ல வீரனாகிய மாகாளனை அழைத்து, அருளொடு நோக்கி, "காளா கேள்; பொன்னகரின் மன்னனாகிய இந்திரன், மூவர்க்கும் முதல்வனாகிய இறைவனைக் காணக் கயிலை மலைக்குச் செல்கின்றான்; இவன் வருமளவும் இதோ இருக்கின்ற இந்திராணிக்கு எவ்வகைத் தீங்கும் நேராமல் காத்திடுக” என்று கட்டளையிட்டான். அந் நிலையில் இந்திரன் மாகாளன் காவலில் மங்கையை வைத்து, வானவரிடம் போந்து, அவரை அழைத்துக் கொண்டு வெள்ளி மாமலையை நோக்கி விரைந்து சென்றான்.
திருக்கயிலாயத்தின் தலைவாயிலில் நின்ற இந்திரனைக் கண்டார், நந்தி தேவர்; "நீ வந்த காரியம் யாது?" என்று வினவினார். விளைந்த தீமையெல்லாம் எடுத்துரைத்தான், வானவர் கோமான், அடிமுதல் நிகழ்ந்ததை அறிந்து, "இன்னும் நின் துயரம் தீர்ந்திலதோ? இப்போது ஈசனார் சனகாதி முனிவர் நால்வர்க்கும் ஞானயோகத்தின் தன்மையை உணர்த்தி யருள்கின்றார். ஆதலால், எவரும் அவரிடம் செல்வதற்கு இது ஏற்ற காலமன்று” என்று எடுத்துரைத்தார், நந்தி.
அயிராணியும் அசமுகியும்
பிரமதேவனும் திருமாலும் அறியவொண்ணாப் பிரணவப் பொருளாகிய இறைவன் அமர்ந்தருளும் திருக்கயிலாய மலையை நோக்கி இந்திரன் சென்ற பின்னர், சீகாழிப் பூங்காவனத்தில் தேவமாதர் போற்ற இந்திராணி தவம் புரிந்திருந்தாள். அப்பொழுது வெற்றி வெறி யுற்று மயங்கி வாழ்ந்த சூரன் குலத்தை வேரோடு அழிக்கவந்த ஊழ்வினை போன்ற அவன் தங்கையாகிய அசமுகி யென்பாள், துன்முகி யென்னும் தோழியோடு, சூலம் ஏந்திய கையும், ஆலகாலம் , போன்ற மேனியும் உடையவளாய் அங்கு வந்தாள்; தனித்திருந்த தேவியைக் கண்டு வியப்புற்று, "அழகிய நறுமலர் சூடிய அயிராணியைக் கண்டேன் நான்; இவளிடம் கொண்ட ஆசையால் உழலும் அசுர வேந்தன் கவலையொழிந்து களிப் புறுமாறு இவளை அவன் முன்னே எடுத்துச் செல்வேன்" என்று துணிந்தாள்.
இந்திராணியின் முன்னே போந்து, "மாதவம் புரியும் மாதே! உன்னை யொப்பவர் இவ் வுலகில் உண்டோ? மாயவன் மார்பில் உறையும் திருமகளும் உனக்கு நிகராகாள். வல்லாளனாகிய சூரன் நின்னையடையத் தவம் புரிகின்றான். நீ எதற்காக இங்கே கரந்திருந்து கடுந்தவம் செய்கின்றாய்? அவன் அழிவற்றவன்; உன் கணவனாகிய இந்திரன் அழிவுள்ளவன். அவன் நிகரற்ற இன்ப வாழ்வு வாழ்பவன்; இவன் துன்பத்தில் உழல்பவன். அவன் பிறரை வணங்காப் பெற்றி வாய்ந்தவன்; இவன் பலரையும் தொழுது நிற்பவன். திருமகளினும் சிறந்த அழகுடைய பதும கோமளையையும் இனிச் சூரன் வெறுத்திடுவான்; மற்றைய மாதரையும் அப்படியே. எல்லையற்ற காதலோடும் உன்னுடன் இருந்து வாழ்வான். இஃது உண்மை. ஆதலால், என்னோடு புறப்படு” என்றாள், அறத்தினைக் கொன்ற அசமுகி.
அயிராணியின் துயரம்
அன்னாள் கூறிய கடுஞ்சொற்களைக் கேட்ட அயிராணி, பழுக்கக் காய்ச்சிய வேற்படையைக் காதிற் பாய்ச்சினாற் போலத் துயருற்றுத் துடிததாள். "அந்தோ! நீ பழியும் பார்த்திலை; பாவமும் பார்த்திலை, வையகம் கூறும் வசையும் பார்த்திலை; முறையும் பார்த்திலை; நெறியும் பார்த்திலை; இவ் விழிந்த கொடுஞ் சொல்லை நீ இயம்ப லாகுமோ? என்றாள்.
அசமுகியின் சீற்றம்
அப்போது அசமுகி, தீப்பொறி பறக்கப் பற்களைக் கடித்தாள்; கறுத்த உதடுகளை மடித்தாள்; பெருமூச்செறிந்தாள் இடி இடித்தாற்போலக் கைகளைக் கொட்டினாள்; சீற்றம் நன்று, நன்று என்று நகைத்தாள்; சீறினாள்; "முற்றிய ஆற்றல் வாய்ந்த மூவர் தடுப்பினும், மற்று யாவர் தடுப்பினும், போர் தொடுப்பினும், உன்னை யான் விடுவதில்லை. விரைந்து எடுத்துச் சென்றே தீர்வேன். அதனை இன்னே பார்” என்று அயிராணியைப் பிடித்தாள்.
அந் நிலையில் இவள் அரற்றினாள்; ஆவி யிழந்தாற்போல் அவசமுற்றாள்; உணர்வு தீர்ந்தாள்; நீல மலர் போன்ற கண்களால் நெடுங்கண்ணி வடித்தாள். இப்படி வாடி வருந்திய தேவியை இரக்கமற்ற அசமுகி பற்றி யிழுத்துச் சென்றாள்; மனங்கலங்கிய மாது மெய் சோர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்; காப்பவர் யாரையும் காணாளாய் வாய்விட்டுக் கதறினாள்.
அப்போது ஐயனாரின் படைத்தலைவனாகிய மாகாளன் வெளிப்பட்டான்; நில், நில் என்று சொல்லி உடைவாளை உருவினான்; ஒரு கரத்தால் அசமுகியின் தலையைப் பற்றி இழுத்து, அயிராணியைத் தொட்ட கையை அறுத்திட்டான். வானவர் துள்ளி மகிழ்ந்தனர். அசமுகியின் கை விழுந்தவுடன் அருகே வந்து நின்ற துன்முகியை நோக்கி, "நீயும் தேவியின் மேனியைத் தீண்டினா யன்றோ” என்று கூறி, அவள் கரத்திலும் ஒன்றை மாகாளன் துணித்திட்டான். குருதி பொங்கிப் பெருகிற்று
அசமுகியின் வஞ்சினம்
அப்போது, கையற்ற அசமுகி, உள்ளம் கறுத்து, "இதோ! பார் உலகமெல்லாம் சூரனே ஆள்கின்றான். அவன் ஆழியும் ஆணையும் செல்லாத இடமில்லை. ஆதலால், இங்கே இருப்பினும், மற்று எங்கே சென்று ஒளிப்பினும் இனி நீர் பிழைத்தல் அரிது. உம்மைச் சிறைப்படுத்தாவிடில் நான் சூரன் தங்கையல்லேன்; பேடி என்று என்னை இகழ்க" என்று கூறிச் சென்றாள்.
சிறிது விலகி நின்ற வீர மாகாளன் அயிராணியை நோக்கி, "அன்னையே! அசுரரைக் குறித்து நீர் சிறிதும் அஞ்ச வேண்டா, உம் கணவன் வருமளவும் நானே காப்பேன். இச் சோலையிலே இருப்பீராக” என்று சொல்லிச் சென்றான்.
நாரதர் வாயிலாகப் பூஞ்சோலையில் நிகழ்ந்தனவெல்லாம் அறிந்த இந்திரன் தன் தேவியிருந்த இடம் போந்தான். அங்கிருந் தால் ஆபத்து வரும் என்று அவளையும் அழைத்துக்கொண்டு வானவரோடும் மரமேரு மலையிற் சென்று மறைந்திருந்தான்.
சூரன் திறம்
பரந்த உலகங்களிலுள்ள சூரியர்களையெல்லாம் ஒருங்கே திரட்டி, ஊழித் தீயில் இட்டு உருக்கி ஒன்றாக்கி ஆசனமாகச் செயுது, அதில் நன்மணிகளாகப் பதித்து, முற்றிய கலைகளோடு விளங்கும் சந்திரரைச் சிங்கங்களாக அமைத்தாற் போன்று வீர மகேந்திர நகரின் விழுமிய அரண்மனையில் அசுரர் கோமானது அரியாசனம் விளங்கிற்று. அத்தகைய அரியாசனத்தில் அழியாத் தன்மை வாய்ந்த சூரன் கூற்றுவரெல்லாம் ஓர் உருக்கொண்டு, விண்ணுற நிமிர்ந்து விளங்கினாற் போன்று, அசுரர்கள் போற்ற அரசு வீற்றிருந்தான். அழகிய கூந்தலையுடைய அரம்பை, ஊர்வசி, திலோத் தமை, மேனகை முதலாய தேவ மாதரும், இயக்க மாதரும், வலிமை வாய்ந்த அரக்க மாதரும், அசுர மாதரும், விஞ்சையர்,சாரணர், சித்தர் என்னும் முக்குல மாதரும், மற்றைய மாதரும் வெவ்வேறாக முறைப்படி நடனம் செய்தனர். சூர மன்னன் செயற்கரிய வேள்வி செய்து வரம் பெற்ற திறத்தையும், எட்டுத் திக்கும் சென்று குபேரன் முதலாகிய யாவரையும் வென்ற வலிமையையும், அண்டங்களையெல்லாம் கண்டு சிறப்புற அரசு புரிந்த ஆண்மையையும், அருகே நின்ற அரசுர் பலர் முறை முறையாகப் புகழ்ந்து ஏத்தினர்.
கையற்ற காட்சி
அப்போது அவன் தங்கையாகிய அசமுகி துன்முகியோடு மகேந்திர நகரின் மருங்கே வந்தாள். நகர வீதியிலே அவள் வரும்பொழுது இந்திரன் செய்த வேலையோ இது என்பர் சிலர்"ஒளித்துத் திரிகின்ற அவன் இது செய்ய வல்லனோ என்று மறுத்துரைப்பார், சிலர். "மற்றைத் தேவர்கள் செய்திருப்பார்களோ என்று ஐயற்றார், சிலர்; நம் ஆணைக்கு அடங்கி ஏவல் புரியும் அவர் இத்தகைய செய்கையை நினைக்கவும் துணிவரோ என மாற்றம் உரைப்பவர், சிலர். வீரமகேந்திரத்து மகளிரும் ஆடவரும் இவ்வாறு நெருங்கிச் சூழ்ந்து வருந்தித் தளர்ந்து நிற்க, அவரைக் கடந்து அசமுகி துன்முகியுடனே அக நகரம் போந்து, மன்ன்ர் மன்னனாகிய சூரன் வீற்றிருந்த மாளிகையை நோக்கி நடந்தாள்.
அசமுகி முறையிடல்
மாயையில் வல்ல தன் தாயையும், மற்றுமுள்ள சுற்றத் தாரையும், மருகரையும், உடன்பிறந்தாரையும் மனத்தில் நினைத்துக் கதறிக்கொண்டு அவள் முறையிடல் மணிமாட மாளிகையின் அருகே சென்றாள். தொழுகுரல் நிறைந்த மாளிகையில் அப்போது அழுகுரல் எழுந்தது. உற்றாரை யெல்லாம் தனித்தனியே அழைத்து அசமுகி ஓலமிட்டாள்; "ஐயோ அசுரகுல வீரரே! வானுலகின் வளங்குறைத்தோம்; வலி குறைத்தோம்; வரம் குறைத்தோம்; புகழ் குறைத்தோம்; வானவரை ஏவல் கொண்டோம் என்று மனப்பால் குடித்தீரே! அவர்களுள் ஒருவன் வந்து என் கரத்தை அறுத்து, உமது மூக்கறுத்துவிட்டானே! அதை அறியீர் போலும் குழந்தைப் பருவத்திலே செங்கதிரோனைச் சினந்து பற்றிச் சிறைசெய்த மருகனே! பானு கோபனே! என் கையை ஒருவன் குறை செய்து சென்றானே! நீ ஏன் என்று கேளாது இருந்தனையே! இஃது என்ன கொடுமை! அந் நாளில் ஒரடியால் உலகளந்த திருமாலின் நேமிப்படையைப் பொன்னாரமெனப் பூண்ட தாரகனே! இந் நாளில் ஒப்பற்ற பழி பூண்டயே மாற்றார் வந்து என் கரத்தை அறுத்தார் தமையனாகிய நீ அரசு வீற்றிருந்தாய் முன் நிறைந்து பின் குறையும் நீர்மை வாய்ந்ததோ நின் ஆற்றல்! சிங்கமுக வீரனே! வெள்ளை யானையோடு இந்திரனை ஒரு கையால் வானத்தில் நீ வீசி யெறிந்தாய் என்றும், அவன் கீழே வந்து விழுந்தபோது உன் காலால் உதைத்தாய் என்றும் சொன்னார்களே! அதை மெய்யென்று நம்பி வியந்திருந்தேனே! அது புனைந் துரைதானோ? இந்திரன் துரதன் இன்று என் கரத்தைத் துணித்தானே! அரிமுகவீரா! நீ அதனை அறியாயோ? வானவர் சூழ்ச்சியால் ஒரு முனிவன் என் இரு மைந்தரது உயிரைக் கவர்ந்தான்; அம் மட்டோ? இன்றும் ஒருவன் வந்து என் கரத்தை அறுத்திட்டான். இங்ஙனம் தங்கை தயங்க நீ தனியரசு புரிதல் தவறன்றோ?
"மன்னர் மன்னா! நான் அடைத்த மானத்தை நீ மனங் கொள்ளாயோ? அரசாளும் அண்ணா! அண்ணா! கரமிழந்தேன்! ஆதலால் உறவிழந்தேன்! ஊனமுற்றோர் உயிர் வைத்திருத்தல் ஈனமன்றோ? அந்தோ! இவ் வுயிரை விடு முன்னே மானம் அடுகின்றதே! பாவி நான் பெண்ணாகப் பிறந்து பெற்ற பயன் இதுதானே! விதிக்கு என்மீது பகையுண்டோ?” என்று பலவாறாக அரற்றிக்கொண்டு, துன்முகியோடு சென்ற அசமுகி அரச மன்றத்தில் அமர்ந்திருந்த சூரன் அடிகளில் விழுந்து புரண்டாள்.
சூரன் சீற்றமுறுதல்
அது கண்ட சூரன் "தங்கையே! அசமுகி! ஏன் இங்ஙனம் வருந்துகின்றாய்? உன்னை உணராமலும் என்னைக் கருதாமலும், உன் கரத்தையும், தோழியின் கரத்தையும் துணித்தவர் யார்? அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா?" என்று இடிபோல் வினவினான்.
"ஐயனே! இந்திரன் மனைவியாகிய அயிராணி நிலவுலகின் ஒருபுறத்தில் இருந்து நோன்பு செய்கின்றாள். அவளை உன்னிடம் சேர்க்கக் கருதி அங்குச் சென்றோம்; அவளை எடுத்தோம். அவ் வேளையில் வானவன் ஒருவன் விரைந்து வந்து எங்கள் கைகளை அறுத்திட்டான், அயிராணியையும் அழைத்துச் சென்றுவிட்டான்" என்று கையற்றவள் சொல்லி முடிக்கு முன்னமே சூரன் கண் களிலிருந்து தீப்பொறி பறந்தது; வாயினின்று தீப்புகை பிறந்தது; மூக்கினின்று சுடுமூச்சு எழுந்தது; அது கண்டு மண்ணுலகம் நடுங் கிற்று; விண்ணுலகும் நடுங்கிற்று. பெருங்கடல் நடுங்கிற்று : பிரமபதம் நடுங்கிற்று மாயவன் நகரம் நடுங்கிற்று; அசுரரும் நடுங்கினர் என்றால் இவ் வுலகத்தில் நடுங்காதார் யாவர்? சூரனது கோபம் சாலப் பெரிதன்றோ?
அந் நிலையில் சுற்றி நின்றவரை நோக்கிச் சூரன் பேசலுற்றான்; "அசுர வீரர்களாகிய நீர் இருந்தும்,மைந்தர் இருந்தும், நிகரற்ற தேர் இருந்தும், நேமி இருந்தும், என் பேர் இருந்தும், என் உயிர் இருந்தும், வேறு யார் இருந்தும், எது இருந்தும் என்ன பயன்? அந்தோ! எல்லாம் இருந்தும், அசமுகி படும் பாடு இதுவோ? என் அரசியல் நன்று நன்று" என்று நகைத்தான்.
பானுகோபன் பழிக்குப்பழி வாங்க முற்படுதல்
அப்பொழுது சூரன் மைந்தருள் வலியவனாகிய பானுகோபன் சீற்றமுற்று எழுந்து, வீரக்கழல் முழங்க நடந்து சென்று, வேந்தன் அடிபணிந்து, "ஐயனே! நமக்குக் குற்றேவல் செய்து உடைந்த மனத்தின னாய் ஒளித்திருக்கின்றான், இந்திரன், ஏனைய வானவர் வலிமை யற்றவர்; இப்படிச் செய்ய அவர் மனத்திலும் நினையார் நிலைமை இவ்வாறிருக்க உன் தங்கை கை இழந்தது என்ன மாயமோ அறியேன், அதனை அறிய மாட்டாது வருந்துகின்றேன். ஆயினும், இன்றே சென்று இவர் கைகளை யறுத்த ஆடவனையும் நின் மனத்தில் ஆசையை விளைத்த அயிராணியையும், மறைந்து திரியும் இந்திரனையும், தம் உயிரில் ஆசையற்ற தேவரையும் பற்றி வருவேன். அடியேனுக்கு விடை தருக" என்று வேண்டி நின்றான். அப்போது சீற்றம் தணிந்த சூரன், "நின் சேனையொடு செல்” எனப் பணித்தான். அப் பணியை மகிழ்ந்து ஏற்றான், பானுகோபன்.
பானுகோபன் படையெடுத்துச் செல்லுதல்
வீரமகேந்திர நகரத்தை விட்டுப் புறப்பட்டுக் கடலாகிய அகழியைக் கடந்து, நில வுலகத்தின் எல்லையிற் சென்றவுடன் அருகே வந்த துன்முகியை நோக்கி, ”உமது கை அறுபட்ட இடம் எது? கூறுக”என்றான், பானுகோபன். "இளங்கோவே! எமது கரம் துணித்த வீரன் ஒரு பூஞ்சோலையில் உள்ளான். அயிராணியும் அங்கே இருக்கின்றாள். அச் சோலை இதுதான்” என்று சுட்டிக் காட்டினாள், அசமுகி.
அந் நிலையில் பன்னிரு பெயர் பெற்ற சீகாழிப் பதியில் அமைந்த பழமரச் சோலையிற் பானுகோபன் புகுந்தான். அவனது சேனையின் முன்னணிப் படை விரைந்து சென்று, சோலையை அழித்து, வெட்ட வெளியாக்கிற்று; அவ் விடம் முற்றும் தேடிப் பார்த்தான், பானுகோபன், அயிராணியையும் காணவில்லை; கையறுத்த வீரனையும் காணவில்லை. அன்னார் இருவரையும் உலக முழுமையும் தேடிக் காணாமையால் அவன் வானுலகத் திற்குச் சென்றான். செம்மலர் மாலையணிந்த பானுகோபன் படையெடுத்து வந்தான் என்று பதறிய வானவர் விதிர்விதிர்த்துப் பொறி கலங்கி, இந்திரன் மைந்தனாகிய சயந்தனிடம் ஓடிச் சென்று இச் செய்தியை உரைத்தார்கள்.
சயந்தன் பானுகோபனை எதிர்த்தல்
அது கேட்ட சயந்தன், "எம் குருவாகிய வியாழனும் இங்கில்லை; வானவர் இனத்திற் பலரில்லை; சயத்தன் தந்தையும் தாயும் இல்லை; நான் உம்மோடு பானுகோபனை தனித்திருக்கின்றேன். அந்த அசுரன் அல்லல் எதிர்த்தல் புரியவே வந்தான் போலும்; பண்டை வினையின் பயன் என்னாகுமோ அறியேன்; ஆயினும், யான் இனி அவர்க்கு அஞ்சப் போவதில்லை; உயிரைப் பொருளாகக் கருதாதவர் நஞ்சு போன்ற தீங்குற்றாலும் நடுக்கமடையார், துயரத்தில் மூழ்க மாட்டார்; கடமையில் வழுவமாட்டார். அவ்வாறே யானும் பானுகோபனது கொடிய சேனையைச் சென்று எதிர்ப்பேன்; வெல்வேன்; பலரைக் கொல்வேன்” என்று கூறினான், சயந்தன், அப்பொழுது வானவர் வருத்த மெய்தி, "ஐயனே? உன் கருத்து இதுவாயின் நாங்கள் சொல்வதொன்று உண்டோ? வெற்றி பெற்ற அசுரருக்குக் குற்றேவல் செய்து அழியாத் துன்பத்தில் உழல்வதினும் இறந்தொழிதல் இனிதே ஆகும். ஆதலால், விரைவில் போருக்கு எழுக” என்றார்.
சயந்தனும் வானவரும் சிறைப்படுதல்
அமரர் சேனையும் அசுரர் சேனையும் பெரும்படை கொண்டு கடும்போர் புரிந்தன. அமரர் வலிமையற்றுப் போர் முனையை விட்டு ஓடினர். கொடிய அசுரர் அவரைப் பின்
தொடர்ந்து பற்றி அடித்தார்கள். அப்போது பானுகோபன் ஒரு தேரின் மேல் விரைந்து ஏறிச் சயந்தனைச் சூழ்ந்திருந்த அசுரரை நோக்கி, "யான் விட்ட அம்புகள் பட்டதனால் இவன் மயங்கி உடல் தளர்ந்தான்; பேசவும் இயலாதவன் ஆயினான்; பகைவன் என்று இவனை வருத்தாதீர்! வானவர் குழாத்தொடு இவனைச் சிறை செய்திடுக” எனப் பணித்தான்.
அப் பணி தலைமேற்கொண்ட அசுரர் அழகிய வானுலகம் எங்கும் சுற்றி நாடினர்; ஒருவரையும் விடாமல் வானவரையும் அவர்தம் மனைவியரையும் ஒருங்கே கட்டிக் கொணர்ந்து பானுகோபன் முன்னே இட்டனர்; பின்பு, திருமகளின் இருப்பிடம் போல அழகுற்று இலங்கிய பொன்னகர மெங்கும் தீவைத்துக் கொளுத்தினர். அப்போது ஈசனது புன்னகையால் எரிந்து அழிந்த திரிபுரம் போன்று பொன்னகரம் கரிந்து பொடியாயிற்று. ஊழிக் காலத்திலே யன்றி மற்று எக்காலத்திலும் அழியாத வானுலகம் அழிந்தது; வானவர் கோமான் வறியனாய்ப் போயினான்; சிறந்த தேவர் சிறைப்பட்டார்; எனவே, செல்வத்தை நிலையான பொருளாக மதித்தல் ஆகுமோ?
பானுகோபன் வீர மகேந்திரத்தை அடைந்தான்; அரண்மனையின் முன்னே தன் தேரை நிறுத்திக் கீழே இறங்கினான்; சேனைகளை அவ்விடத்தில் நிறுத்திச் சிறைப்பட்ட வானவரை இட்டுக்கொண்டு சூரன் முன்னே சென்று, முறையாக வணக்கம் செய்தான்; பின்பு எழுந்து நின்று, "ஐயனே? அயிராணியைக் காணவில்லை; இந்திரனையும் காணவில்லை; வானுலகத்தில் உள்ள தேவரையும் சயந்தனையும் பிறரையும் கொண்டுவந்தேன்! அந் நாட்டைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டேன்” என்று கூறினான்.
அப்போது அங்கு நின்ற வானவரைக் கண்டான், சூரன் சீற்றங் கொண்டான்; "இருள் சூழ்ந்த நரகம் போன்ற பெருஞ் சிறையில் இவரை அடைத்திடுமின்” என்று அசுரரை நோக்கிக் கூறினான். அவர்கள் தேவரையும் சயந்தனையும் பிடர் பிடித்துத் தள்ளிச் சிறைக்கோட்டத்திற் சேர்த்தார்கள், சயந்தனும் வானவரும் சூரன் நகரிலே சிறையிருந்தார்கள்.
முருகவேள் வீரவாகுவைத் தூதனுப்புதல்
திருமால் முதலிய தேவராலும் வெல்லுதற்கரிய வீரனாகி, வானவரை வெஞ் சிறையில் இட்ட அரசர் கோமானாகிய சூரனது உயிரை வாங்கும் வண்ணம் பரஞ்சுடர் உருவாகி வந்த வடிவேல் முருகன், தன் அருகே இருந்த இந்திரன் ஆகிய தேவர்களை நோக்கி, "நாம் அசுரர் குலத்தை அழித்திட நாளையே போவோம்; அதற்கு முன்னர் ஒரு தூதனை விடுத்துக் கொடிய சூரனது கருத்தினை அறிதல் வேண்டும்” என்று அருளினார். சிவகுமாரன் இவ்வாறு செப்பியபோது, "ஐயனே? சூரனுடன் வீரப்போர் தொடங்கு முன்னே ஆற்றல் சான்ற தூதன் ஒருவனை அனுப்புதலே அறநெறியாகும்” என்று மலரவனும் மாய்வனும் கூறினர்.
அது கேட்ட முருகன் கருணை கூர்ந்து, அருகே நின்ற வீரவாகுவை நோக்கி, "வீரனே! நீ மகேந்திர நகர்க்கு விரைந்து சென்று இந்திரஞாலத் தேருடைய சூரனைக் கண்டு, இந்திரன் மைந்தனையும் வானவரையும் அவன் இன்றே சிறையினின்று விடுவித்தல் வேண்டும் என்றும், அறநெறி தவறாமல் அரசாளுதல் வேண்டும் என்றும் அறிவித்திடுக. அசுரர்கோன் அதற்கு இசையானாயின் அவன் இனத்தைக் எடுத்து நாளையே நாம் அமர்க்களம் புகுவோம்; இஃது உண்மை என்று கூறி வருக” எனப் பணித்தார்.
அப்போது வீரவாகு, "ஐயனே அசுரர் நிறைந்த வீர மகேந்திரத்தில் அரும்பெருஞ் செல்வத்தினிடையே அமர்ந்துள்ள சூரன் முன்னே சென்று, தேவரீர் அருளிய செய்தியெல்லாம் சொல்லி, அவனுள்ளக் கருத்தை உணர்ந்து வருகின்றேன்” என்று வணங்கித் தொழுது சென்றார். அப்போது, குலிசப் படையை புடைய இந்திரன் முருக தூதனாகிய வீரவாகுவின் பின்னே சென்று, "வீரனே! நீ வலிமை சான்ற சூரனது நகரத்தையடைந்து, அங்குச் சிறைப்பட்டுள்ள சயந்தனையும் தேவரையும் கண்டு தேற்றிப் பின்பு எடுத்த பணியை முடித்திடுக” என்று வேண்டினான்.