குகையுடன் பேசிய நரி

bookmark

ஒரு காட்டில் கிரகிரன் என்ற சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் இரை தேடி காட்டின் பல பகுதிகளிலும் அலைந்து 

திரிந்தும் அதற்கு ஒரு சிறிய இரைகூடக் கிடைக்கவில்லை. வழியில் ஒரு பெரிய குகையினைக் கண்டது. உடனே, 

சிங்கத்திற்கு ஒரு யோசனை பேசாமல் நாம் இந்தக் குகைக்குள் ஒளிந்து கொண்டால், இந்த குகையில் இருக்கும் 

விலங்குகள் இரை தேடிவிட்டுத் திரும்பி மீண்டும் இங்கேதானே வரும். அப்படி வரும் விலங்குகளை பிடித்து 

உண்டுவிடலாம் என்று நினைத்து அந்தக் குகைக்குள் சென்று படுத்துக் கொண்டது. 

அந்தக் குகையில் அவிபுச்சன் என்கிற ஒரு புத்திசாலியான நரி வசித்து வந்தது. தன் குகைக்குத் திரும்பி வந்து தன் 

குகைக்குள் நுழைய முனைந்தப்போது குகையின் வாசலில் சிங்கத்தின் காலடித் தடங்கள் இருப்பதனைப் பார்த்து 

குகைக்குச் சிங்கம் ஒன்று வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டது. ஆனால் நரிக்கு ஒரு சந்தேகம்?. சிங்கம் உள்ளே 

இருக்கிறதா? அல்லது சென்று விட்டதா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக குகைக்கு வெளியே நின்று கொண்ட நரி, 

ஏய், குகையே! ஏய், குகையே! என்று அழைத்தது. சிங்கம் எழுந்தது. வெளியே ஒரு நரி இருப்பதனை அறிந்து கொண்டது. 

அது யாரிடம் பேசுகிறது என்று கவனித்தது. 

நரி, மீண்டும், ஏய், குகையே ஏன் மௌனமாக இருக்கிறாய்? என்றது. சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இந்த நரி 

குகையிடம் பேசுகிறது? என்று யோசித்தது. நரி, குகையே என் மீது ஏதும் கோபமா? நீ தினமும் என்னிடம் பேசுவாயே? 

இன்று ஏன் என்னுடன் பேசாமல் அமைதியாக இருக்கிறாய்? என்று கேட்டது. அப்போதுதான் சிங்கத்திற்குப் புரிந்தது. 

அடடா! இந்தக் குகை தினமும் நரியுடன் பேசக்கூடியது போலும். ஆனால், இன்று ஏனோ இது பேசவில்லை என்று 

நினைத்தது. நரி, ஏய், குகையே! நீ பேசிய பின்னர்தானே நான் உன்னுள் நுழைவேன். இன்று நீ பேசாமல் இருந்தால் நான் எப்படி உன்னுள் நுழைவேன்? என்றது. 

சிங்கம் பதறிப் போனது. அடடா! குகை பேசினால்தான் நரி குகைக்குள் வருமாமே! நரி குகைக்குள் வராவிட்டால் நமக்கு 

இரை கிடைக்காதே! என்று நினைத்த சிங்கம் குகைபோலப் பேசினால், அந்த நரி குகைக்குள் வந்துவிடும். நாமும் அதை 

அடித்துச் சாப்பிட்டு விடலாம்! என்று நினைத்து, ஏ நரியே! நான் வேறு சிந்தனையில் இருந்ததால் உன்னிடம் பேசவில்லை. 

தவறாக நினைக்காதே. வா உள்ளே! என்று குகை பேசுவது போல பேசி குரல் எழுப்பியது. அவ்வளவுதான், குகைக்குள் 

இருந்து சிங்கத்தின் குரல் வெளிவந்ததும் சுதாரித்துக் கொண்ட நரி, தப்பித்தோம் பிழைத்தோம் எனத் தலைதெறிக்க ஓடிப் போனது. 

நீதி : எதனையும் செய்வதற்கு முன்பு ஆலோசித்துச் செய்யவேண்டும்.