கும்மினியாள் அழுது வந்தாள் - 1

bookmark

ஒப்பாரிகளில், மனைவி கணவனோடு வாழ்ந்த பெருமையை நினைத்தும், அது அழிந்தது குறித்து வருந்தியும் பாடுவாள். கணவனை ராமன் என்றும், தன்னை சீதை என்றும் பெருமை பாராட்டிப் பேசுவது மரபு. தமிழ் நாட்டில் நாயக்க மன்னர் ஆட்சி ஒழிந்து, நவாப் ஆட்சி சிறிது காலம் நடைபெற்றது. அதன் பின்னர் கும்பினியார் ஆட்சி தோன்றியது. அரசர் பெயரையே கேள்விப்பட்டிருந்த பாமர மக்கள் கும்பினியார் என்றால், அயல் நாட்டிலிருந்து தம்மை ஆளும் ஒரு அரசர் என்றே எண்ணினார்கள். இப்பெண் கும்பினியார் என்ற அரசனுக்கு ஒரு மனைவியைக் கற்பனை செய்கிறாள். தனக்குத் தெரிந்த ஜமீன்தாரர்களை எல்லாம் ஜெயித்து ஆட்சியைக் கைப்பற்றிய கும்பினியாரின் மனைவி மிகப் பெரிய ராணியாக இருக்க வேண்டுமல்லவா? ஆகவே தன்னை கும்பினியாள் என்றே சொல்லிக் கொள்கிறாள். கும்பினியாள் என்றாள் சக்கரவர்த்தினி என்று பொருள்,சக்கரவர்த்தினிபோலச் சிறப்பாக வாழ்ந்த அவளுடைய பெருமை எல்லாம் அவள் கணவன் இறந்ததும் மறைந்துவிட்டது. தமிழ் நாட்டில் படை எடுத்து வந்து மறவர் படையைத் தோற்கடித்த பட்டாணியரை அவள் அறிவாள். கும்பினியார் வருமுன்பு அவர்கள்தான் தமிழ் நாட்டுப் பாளையங்களுக்குப் படையெடுத்து வந்தார்கள். அத்தகைய பட்டாணி ஒருவன்தான், தன் கணவனைக் கொன்றுவிட்டானோ என்று அவள் கேட்கிறாள். காலதூதர்களை பட்டாணிக்கு உவமித்துப் பேசுகிறாள்.

பட்டி லையும் பட்டு-நான்
ஒசந்த விலைப் பட்டு
ஒசந்த விலைப் பட்டிலே
ஓடி விழுந்த மாயமென்ன
மலையிலே மாதுலை
மாதம் ஒரு பூ பூக்கும்
இடையிலே ஒரு பெண் பிறந்தேன்-தான்
எடை குறைச்சல் ஆனதென்ன
சந்தனச் சடுக்கா வண்டி-நான்
தனிமைப் பட்டாள் ஏறும் வண்டி
சண்டாளி வாய்திறந்தா
தலைவாசலுமே கூட்டமாகும்
தனிமைகளைப் பார்த்திருந்து
தலை வாசலுமே பிரண்டெழும்
குங்குமச் சடுக்கா வண்டி
குயிலாளே ஏறும் வண்டி
கும்பினியாள் அழுது வந்தாள்.
கொல்லை எல்லாம் கூட்டமாகும்
கொடுமைகளைப் பார்த்திருந்தால்
கொல்லையுமே பிரண்டெழும்
குங்கும நெல்லி மரம்
கூட்டத்தார் வச்ச மரம்
கொடுமைகளைச் சொல்லி அழுதா
கோர்ட்டார் கச்சேரியும்
கூடப் பிரண்டழும்
பத்துத்தலை வாசலும்
பதினெட்டு ஆசாரமும்
ஆசார வாசலிலே
ராஜாக்கள் வந்திறங்க
அடிக்க வருவாரோ
ஆளெண்ணிப் பாப்பாரோ