குல்லா வியாபாரி

ஒரு குல்லாய் வியாபாரி, குல்லாய் விற்பதற்காக ஒரு கிராமத்திற்கு நடந்து சென்றார். அப்போது அவருக்கு மிகவும்
களைப்பாக இருந்தது. ஆகையால் குல்லாய் மூட்டையை மரத்திற்கு அடியில் வைத்து விட்டு அவர் உறங்கினார்.
அவர் அமர்ந்திருந்த மரத்தின் மேல் நிறைய குரங்குகள் விளையாடிக் கொண்டு இருந்தன. குரங்குகள் மரத்திலிருந்து
கீழே இறங்கி குல்லாய் மூட்டைகளிலிருந்த குல்லாய்களை எடுத்துக் கொண்டன. குல்லாய்களை அணிந்து கொண்டு
அவைகள் மரத்தின் மீது ஏறிக் கொண்டன. சத்தம் கேட்டு குல்லாய் வியாபாரி விழித்துக் கொண்டார். குரங்குகள்
குல்லாய் அணிந்திருப்பதை அவர் கண்டார். குல்லாய்களைத் திரும்பப் பெற ஒரு தந்திரம் செய்தார்.
தன்னுடைய குல்லாயைத் தரையில் விட்டெறிந்தார். குரங்குகள் அவருடைய செயலைக் கடைபிடித்தன. குல்லாய்
வியாபாரி குல்லாய்களைச் சேகரித்து மூட்டை கட்டினார். மூட்டையைத் தலையில் வைத்துக் கொண்டு அவர்
அவ்விடத்தை விட்டுச் சென்றார்.