கூடா ஒழுக்கம்

bookmark

2067
கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களஒழிந் தாரே. 1
2068
செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழச் செய்வான்
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே. 2
2069
பத்துவிற் றுண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே. 3
2070
வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானமி ல்லாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே. 4
2071
காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே. 5
2072
கண்காணி யாகவே கையகத் தேயெழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் தானே. 6
2073
கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை
மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை
தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை
என்னிது ஈசன் இயல்புஅறி யாரே. 7
2074
காணாத கண்ணில் படலமே கண்ணொளி
காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே. 8
2075
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியும் தன் கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
சித்தம் தெளிந்தோன் செயல் ஒழிந்தேனே. 9
2076
பிரான்பல மாகப் பெயர்ந்தன எட்டும்
பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார்
சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர்
நிராமய மாக நினைப் பொழிந் தாரே. 10
2077
ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்கு
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெலாம்
ஒன்றுஇரண் டாய் நிற்கும் ஒன்றோடுஒன் றானதே. 11
2078
உயிரது நின்றால் உணர்வுஎங்கு நிற்கும்
அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உணலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிரும் கிடந்துள்ளப் பாங்கு அறி யாரே. 12
2079
உயிரது வேறாய் உணர்வுஎங்கும் ஆகும்
உயிரை அறியில் உணர்வுஅறி வாகும்
உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே. 13
2080
உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நிலவாணி ஐந்தினுள் தேருற நிற்கும்
சிலவாணி யாகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை அறிவதே. 14
2081
தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர்
ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஒழி
கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே. 15
2082
உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
நல்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே. 16
2083
இந்தியம் அந்தக் கரணம் இவைஉயிர்
வந்தன சூக்க உடலன்று மானது
தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்
முந்துளம் மன்னும் ஆறாறு முடிவிலே. 17