கூனல் முதுகழகன்

bookmark

சொந்த நிலம் கொஞ்சம் உண்டு. அதனால் தன்னைக் குபேரன் என்று எண்ணிக் கொள்ளுவான். தோற்றத்தில் குரூபி. பாட்டு அவனை எப்படி வருணிக்கிறது என்று பாருங்கள்.

சிவப்பிக்குக் காதலன் சிவத்தையாவென்று கூனனுக்குத் தெரியும். அவள் அவனையேதான் மணம் கொள்ள உறுதியோடிருக்கிறாள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆயினும் அவளுடைய பெற்றோர்களைத் தன் பக்கம் இழுக்கச் சொந்த நிலம் என்ற தூண்டில் இருக்கிறதல்லவா?சிவத்தையாவுக்குச் சொந்தம் என்று சொல்ல கையும் காலும்தானே உண்டு. எனவே துணிந்து அவளிடமே தன்னை மணந்து கொள்ளச் சம்மதம் கேட்கிறான். அவளோ தமிழில் புதிய புதிய வசவுச் சொற்களைப் படைத்து, அரம்பாடும் கவிகளையும் தோற்கடிக்கும் வகையில் அர்ச்சனை செய்கிறாள்.

மாமன் மகனிருக்க
மாலையிடும் சாமிருக்க
ஒத்தக் கண்ணுப் பயலும் தான்
உறுதி யாண்ணும் கேட்டானே
பாதை பெரும் பாதை
பய வயிறு குழி தாழி
குழி தாழி வயிற்றுப் பய
கூத்தியாளும் கேக்கானே
உறக்கம் பிடிச்ச பய
ஒட்டுத்திண்ணை காத்த பய
கண்ணுப் பட்டை செத்த பய
காட்டமென்ன என் மேலே?
கூன முதுகழகா
குழி விழுந்த நெஞ்சுக்காரா
ஓலைப் பெட்டி வாயோட
உனக்கெதுக்கு இந்த ஆசை
அஞ்சரிசி பொறுக்கிப் பய
ஆளைக்கண்டா மினுக்கிப் பய
தேகம் குளிராட்டிப் பய
தேத்துராண்டி எம்மனசை
பரட்டைத் தலை முடியாம்
பரிசை கெட்ட திருநீரும்
வயக்காட்டு கூவை கூட
வன்மங் கூறி என்ன செய்ய?
முன்னத்தி ஒருக்காரா
மிளகுபொடி லேஞ்சிக்காரா
கழுதை உதட்டுக்காரா
காரமென்ன என் மேலே
சாணைக் கிழங்கெடுத்து
சள்ளைப் பட்டு நான் வாரேன்
எண்ணங் கெட்ட சின்னப்பய
எட்டி எட்டிப் பாக்கானே
எருமை உதட்டுக்காரா
ஏழெருமைத் தண்டிக்காரா
கழுதை உதட்டுக்காரா
காட்டமென்ன என் மேலே
மச்சு வீட்டுத் திண்ணையிலே
மத்தியான வேளையிலே
கேப்பை திரிக்கையிலே
கேட்டானே வாப்பெறப்பு
கட்டக் கட்ட உச்சி நேரம்
கரடி புலி வார நேரம்
சுடுகாட்டுப் பேய் போல
சுத்துரானே மத்தியானம்

வட்டார வழக்கு : கூத்தியாள்-வைப்பாட்டி ; வாப்பெறப்பு-வாய்ப்பிறப்பு (சம்மதம்) ; சாணைக்கிழங்கு-கரிசல் நிலத்தில் வளரும் கிழங்கு. கூழாக்கிக் குடிக்கலாம்.
கூனனை, அவள் திட்டுவதற்குப் பயன்படுத்தும் வகைச் சொற்களை கவனியுங்கள்.
சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம் : விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
--------