கூலிசெய்யக் காலமாச்சே!

கிராமப்புறத்தில் சீரும் சிறப்புமாய் வாழ்ந்த விவசாயிகள், பருவ மழையின்மையாலும்,வரிப்பளுவினாலும் கடன்பட்டு நிலத்தை இழந்து விடுகிறார்கள், விவசாயக் கூலிகளாக வேலை செய்து பிழைக்கிறார்கள். கொஞ்சம் காணியுள்ள வீட்டில் பிறந்த ஒரு பெண்ணுக்கு கூலி வேலை செய்யும் இளைஞனொருவன், மணமகனாக வாய்க்கிறான். திருமணமான மறுநாள் கூழ் குடிக்க வேண்டுமானால், மணமகனும் மணமகளும் கூலி வேலை செய்தாக வேண்டும். புது மண உறவின் இன்பத்தை நுகர விடுமுறை கிடைக்கவில்லை. `கொட்டவந்த மேளக்காரன் ஊர் எல்லை தாண்டுவதற்கு முன்னால் மண் எடுத்துக் கூலி வேலை செய்யக் காலமாகி விட்டதே`, என்று ஏங்கிப் பாடுகிறாள் மணமகள்.
அரைச்ச மஞ்சா ஏழுருண்டை
கண்ணான நாதா-என்
மன்னவனே சாமி
அரைக்காத மஞ்சா ஏழு மஞ்சா
கண்ணான நாதா
கட்டான வெத்திலை ஏழு வெத்திலை
கண்ணான நாதா-என்
மன்னவனே சாமி
கட்டான வெத்திலை ஏழு வெத்திலை
கண்ணான நாதா
எடுத்து வையும் சீரு மேலே
கண்ணான நாதா-என்
மன்னவனே சாமி
எண்ணிப் பாத்துச் சொல்லுகிறோம்
கண்ணான நாதா
ஊத வந்த மக்களாம்
கண்ணான நாதா
கொட்ட வந்த கோயில் மேளம்
கண்ணான நாதா-என்
கொல்லன் மேடு தாண்டலியே
கண்ணான நாதா
மன்னவன் சாமி
மாலையிட்ட நாள் மொதலா
கண்ணான நாதா-என்
மன்னவனே சாமி
மண்ணெடுக்க காலமாச்சே
கண்ணான நாதா
கூரையிட்ட நாள் மொதலா
கண்ணான நாதா
மன்னவனே சாமி
கூலி செய்யக் காலமாச்சே
கண்ணான நாதா
வட்டார வழக்கு:கூரை-திருமணச்சோலை.
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம்:சேலம் மாவட்டம்.
------------