கோடி நாட்கள் செல்லும் !

தாய் வீட்டிற்கு அவள் வந்திருந்தாள். ஒரு நாள் சென்றது. இரண்டு நாட்கள் சென்றன ; வாரம் சென்றதும் மாதமும் வந்தது. மாகளோ புகுந்த வீட்டிற்கு (புருஷன் வீட்டுக்கு) போவதாகக்காணோம். விருப்பமில்லாமல் மகள் வீட்டில் இருந்தாலும் பெற்றவர்களுக்கு மகளைப் போவென்று சொல்ல மனம் வருமா? பொறுத்துப் பார்த்தார்கள். எத்தனை நாள்தான் பொறுப்பார்கள்?
அவளுக்குப் பண்ணை, பாய்ச்சல் உண்டல்லவா? குடும்பம் உண்டல்லவா? இதையெல்லாம் கவனிப்பது யார்? புருஷனுக்குச் சமைத்துப் போடுவது யார்? இதையெல்லாம் அவர்கள் யோசிக்கிறார்கள். `அறியாப்பிள்ளை தெரியா விட்டாலும் நாம் சொல்லித்தானே திருத்த வேண்டும்` என்று மகளை அணுகினார். தந்தை “அம்மா நீயும் வந்து மாதத்திற்கு மேல் ஆகிறதே,பொழைப்பு என்ன ஆவது? மாப்பிள்ளைக்கு ஒத்தாசைக்குத்தான் யாராவது இருக்கிறார்களா?நம்மைப் போல்தானே அவரும் ; ஒண்டி மனுசன், ” என்று ஏதேதோ சொல்லிப் பார்க்கிறார். மகளிடத்தில் இருந்து ஒரு பதிலும் வரவில்லை. மேலும் வற்புறுத்துகிறார். மகள் இப்பொழுது வெடுக்கென்று சொல்லிவிடுகிறாள். என்னவென்று?
“அப்பா ! அவன் ஒரு குடிகாரன் கூத்திக்கள்ளன் ; அதோடு சூதாடியும் கூட. இப்படிப்பட்டவனை நீங்கள் முன்பு தெரிந்திருந்தும் கூட பணத்திற்கு ஆசைப்பட்டு யோசியாமல் திருமணம் செய்து வைத்து விட்டீர்கள். அந்தச் சிக்கலை ஒரு நாளில் அவிழ்த்துவிட முடியுமா?” என்று கேட்கிறாள். இப்படி நேரடியாகவா சொல்லுகிறாள்? இல்லை இப்படிச் சொன்னால் அதில் நயமேது? பண்பேது? பின் எப்படிச் சொல்கிறாள்? கேளுங்கள் அவள் வாயாலேயே !
(குறிப்பு: கு. சின்னப்ப பாரதி)
பருத்தி இளம் பூவு
பட்டணத்து தாழம்பூவு
பாத்து முடியாமே
படி முடிச்சு போட்டீங்க
படிமுடிச்சு சிக்கெடுக்க
பாதி நாள் செல்லுமையா
கொழுஞ்சி இளம் பூவு
கொடு முடி தாழம் பூவு
கோதி முடியாமே
கொடி முடிச்சுப் போட்டீங்க
கொடி முடிச்சு சிக்கெடுக்க
கோடி நாள் செல்லுமையா
உதவியவர் : C.செல்லம்மாள்; சேகரித்தவர் : கு.சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்
-----------