சந்தனத் தேவன்

bookmark

சந்தனத்தேவன் பிரபலமான திருடன். இவனைப் பிடிக்கப் போலீசாரால் முடியவில்லை. பிடித்துத் தருபவர்களுக்கு ரூ,1000 வெகுமதி அளிப்பதாகப் பறைசாற்றப் பட்டது. பிடிக்க முன்வர யாருக்கும் தைரியமில்லை. கூட இருந்த ஒருவன் காட்டிக் கொடுத்துவிட்டான். பின்னர் சந்தனம் தூக்கிலிடப்பட்டான். அவன் மனைவி, அவனுடைய தாயாரிடம் அழுது சொல்லுவது போல கடைசிப் பாடல்கள் அமைந்துள்ளன. ஆயினும் பொருள் தெளிவாக விளங்கவில்லை.
விளம்பரம்

ஆயிரம் ரூபா தாரேன்
ஐக்கோட்டு வேலை தாரேன்
சந்தனத்தை பிடித்தவருக்கு
சருக்காரு வேலை தாரேன்

மக்களின் அச்சம்
ஆயிரம் ரூபா வேண்டாம்
ஐக்கோட்டு வேலை வேண்டாம்
சந்தனத்தை பிடிக்க வேண்டாம்
சருக்காரு வேலை வேண்டாம்

சந்தனத்தின் வீரம்
ஏட்டை இழுத்து வச்சு
இன்ஸ்பட்டரை கட்டி வச்சு
துவரங்காயைத் தின்னச் சொல்லி
மாட்டுரானே சந்தனமும்

மகனுக்குப் பரிசு
மகனுக்கு மல்லு வேட்டி
தாயாருக்கு சாயச் சீலை
பெண்டாட்டிக்குப் பொட்டுச் சீலை
போய் எடுத்தான் சந்தனமும்

மாயாண்டி துரோகம்
சந்தனமும் மருதமுத்தும்
சமுச்சாரம் பேசையிலே
நத்தக்கண்ணு மாயாண்டி
நாக்குத் தள்ளப் போட்டாண்டி

நீதிபதி தவிப்பு
பேரான சந்தனத்தை
பெரிய குளம் தள்ளி விட்டு
முடிவு சொல்ல மாட்டாமே
முளிக்கிறானே மாஸ்திரேட்டு

மூக்கம்மாள் தவிப்பு
சந்தனம் பெண்டாட்டி
சபை நிறைஞ்ச மூக்கம்மாளாம்
சந்தனத்தைத் தூக்கும்போது-உன்
சதுரம் கொஞ்சம் வாடுதடி

தாயிக்கு போலீசார் கூறுவது
அடிக்காலத்தா
அநியாயம் செய்யாலாத்தா
தலைக்காலை எடுத்துக்கிட்டு
நிறுத்துக்கடி உன்மகனை

வட்டார வழக்கு: சமுச்சாரம்-சமாச்சாரம் ; நாக்குத்தள்ள-தூக்கிலேற்றப் பிடித்துக் கொடுத்தான் ; சதுரம்-சரீரம்.
குறிப்பு: கடைசி இரண்டடி-தலையும் காலும் இல்லாமல் உன் மகனை எடுத்துக்கொள் என்னும் கருத்துப்பட அமைந்துள்ளது.
சேகரித்தவர் : S.M.கார்க்கி
இடம் : சிவகிரி.
-------------