சன்யாஸி கீதம்

1. எழுக வலிமிகு வீரத் துறவியே
இனிய சுரத்தில் அமிழ்ந்திடு
பணித்த மலைக்குகை கருத்தவனத்திடை
யாவும் அதனில் பிறப்பது
காசும் காமமும் பேரும் புகழும் அந்த
அமைதியைக் குலைக்குமோ?
உலகின் வெகுதொலை புவனத்தளைகள்
யாதுமதனை எட்டுமோ?
அறிவு மெய் எனும் இரண்டும் சேர்ந்தொரு
ஆனந்தநதி பாய்ந்திடும்
உயர்ந்த சுரத்தினை உறுதிடத்துடன்
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்
2. நிலைத்த உறுதிகொள் வீரத்துறவி!
கீழ்மைத் தளைகளைத் தகர்த்திடு
மின்னும் பொன்னோ கரிய இரும்போ
தளைகள் தளைகளே என்றறி
நன்மை-தீமை,அன்பு-வெறுப்பு இருமை
யாவும் கட்டுக்கள்
அன்பு புரிகினும் அடித்து நொறுக்கினும்
அடிமை அடிமையே வேறிலை
தங்கத்தளையதுவாயினும் அது
பிணைக்கும் வலிவில் குறைவில்லை
உடைத்து ஏறி அதை உருதிடத்துடன் வீர
சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்
3. கொள்ளிவாய்ப் பேய் சிமிட்டி ஒளிர்ந்து
அடர்ந்த காரிருள் சேர்த்திடும்
அடைய இயலா இழக்காது அந்த அடரும்
இருளை விளக்கிடு
பிறந்து இறத்தலும் இறந்து பிறத்தலும்
ஆசையாலே விளைவது
நிறைவு அற்ற இதனை ஒழிப்பின் கொடிய
இருள் மாய்ந்தோடிடும்
தன்னை வெற்றி கொள்பவனே
அனைத்தும் வெற்றி கொள்கிறான்
இதனையறிந்து இணங்கிடாது
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்
4. வினை விதைத்தவன் அதையறுப்பான்
நன்மை விதைத்தவன் நன்மையையும்
தீது விதைத்தவன் தீதறுப்பான்
யாரும் விதிவிலக்கில்லையே
எங்கு காரணம் என்று உள்ளதோ
அங்கு காரியம் உள்ளது
உருவெடுப்பவன் தளைபுனைவான்
விதியின் லீலை நிச்சயம்
உருவும் பெயரும் கடந்து நிற்பது
என்றும் சுதந்திர ஆன்மமே
அதுவே நீயென உணர்ந்தறிந்து
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்
5. தந்தை தாயென மழலை மனைவி
நண்பன் என்றென நினைப்பவர்
வெற்று கனவுகள் காண்பவர் அவர் அறுதி
உண்மையை அறிகிலர்
பாலெனும் ஒரு பகுப்பு இல்லா ஆத்மன்
யாருக்கு தந்தை தாய்
நண்பன் யாரோ, பகைவன் யாரோ,
யாரின் குழந்தையாவது
நீக்கமறவே நிறைந்த ஆன்மா
அன்றி வேறொன்றிங்கிலை
`தத்வமசி` யென உணர்ந்தறிந்து
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்
6. யாவுமறிந்த ஆத்ம னென்பது
ஏகமாயெங்கும் நிறைந்தது
பேரிலாதது உருவிலாதது
களங்கமற்றது ஒன்றதே
ஆத்மனுள் திகழ்மாயையே
இந்த மாறுங்கனவுகள் காண்பது
காட்சியாயிந்த ஜீவனாய்
ஒரு சாட்சியாயது நிற்பது
அந்த தூய பொருளே நீயேனும்
அனுபவத்தை அடைந்திடு
அதுவே நீயென உணர்ந்தறிந்த பின்
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்
7. எங்கு எங்கோ தேடுகின்றாய்
உற்ற சுதந்திரம் தன்னையே
இந்த உலகம் ஈந்திடாது,
நண்பனே இதை கேட்டிடு !
கற்ற நூலிலும் இறைவன் மனையிலும்
தேடுதல் அது வீண் செயல்
உன்னை மாய்க்கும் பாசக்கயிறை
பற்றியுள்ளது உன்கரம்
பிடியை உதறித் தள்ளிடு
நீ புலம்பும் துயரை ஒழித்திடு
பற்றை நீக்கி உறுதிடத்துடன்
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்
8. மங்களம் இனி எங்கும் என்று
யாண்டும் நீ பறைசாற்றிடு
`தீமை என்னால் உயிருக்கில்லை`
என்று உலகிற்குணர்த்திடு
உயர்ந்தவிடத்தும் தாழ்ந்தவிடத்தும்
மேவி உள்ள ஆத்மன் நான்
இம்மை-மறுமை, சொர்க்கம்-நரகம்,
ஆர்வம்- அச்சம் அனைத்தையும்
உழலும் உலகம் விடுத்து யாவும்
துறந்து பாரில் நின்றிடு
பந்த பாசத்தை வெட்டியெறிந்து
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்
9. வீழினும் உடல் வாழினும்
அதை மதித்திடாதிரு துறவியே
தேகப்பணியும் முடிந்தது அதை
கர்ம வெள்ளம் இயக்கட்டும்
ஒருவர் மாலை சூட்டட்டும்
இன்னொருவர் உடலை உதைக்கட்டும்
புகழ்பவர் – புகழப்படுபவர்
இகழ்பவர் – இகழப்படுபவர்
அனைத்தும் ஒன்றே, உன்னை
அவை தீண்டிடாது என்றறி
மனதில் பூரண அமைதி கொண்டு
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்
10. எங்கு காமமும் பெயரும் புகழும்
ஆசை நினைவுகள் உள்ளதோ
உண்மை ஞான ஒளியின் கிரணம்
அங்கு விழுவது இல்லையே
பெண்ணை மனைவியென்னும்
எண்ணம் பூரணத்தைக் குலைத்திடும்
சொற்ப பொருளும் அற்ப கோபமும்
மாயக்கதவை மூடிடும்
மாயக் கதவை உடைத்திடு
நீ நேய ஆத்மனை அடைந்திடு
தூய மனத்துடன் உறுதிடத்துடன்
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்
11. வீடு உனக்கு இல்லை நண்ப
எந்த வீடுனை தாங்கிடும்
வானமே உன் கூரையாகும்
கோரைப்புல்லே மெத்தையாம்
நன்று தீதென ருசித்திடாமல்
கிடைத்த உணவை உண்டிடு
தன்னைத் தானே அறியும் ஆத்மனை
அன்ன பானம் என் செய்யும்
உருண்டு ஓடும் தூயநதிபோல்
திரண்டு விடுதலை பெற்றிடு
வெற்றி நமதே என்று எங்கும்
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்
12. உண்மை பொருளை சிலரேயறிவர்
மற்றவர்கள் தூற்றுவர்
எள்ளி நகைப்பர். ஆயினும் அதை
செவி மடுத்தாதிருந்திடு
என்றும் சுதந்திரனாய் இரு பலர்
மாயைத் திரையை அறுத்திடு
துன்பம் கண்டு அஞ்சிடாமலும்
இன்பந்தன்னைத் தேடிடாமலும்
இருமையிவைகளை விடுத்து நீயும்
கடந்து மேலே சென்றிடு
உறுதிடத்துடன் ஆன்ம பலத்தை
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்
13. கருமத்தளைகள் முழுமையாக
நீங்கும் வரையில் உழைத்திடு
முயற்சி மூலம் ஆத்மனுக்கு
சுதந்திரத்தை அளித்திடு
பிறவியில்லை மனிதமில்லை
தெய்வமென்றொன்றில்லையே
நீயுமில்லை நானுமில்லை ஆத்மன்
ஒன்றே நிலைப்பது
எங்கும் நானே, நானே எங்கும் என்ற
உண்மையை உணர்ந்திடு
அந்த ஆனந்த நிலையை அடைந்து
முழங்கு சன்யாஸி —- ஓம் தத்சத் ஓம்