சமணசமயத்தில் மகளிர்நிலை

bookmark

பெண் பிறவி தாழ்ந்த பிறவி என்பதும், பாவம் செய்தவர் பெண்ணாகப் பிறக்கிறார் என்பதும் சமணசமயக் கொள்கை. பெண்ணாகப் பிறந்தவர் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியாது என்பதும் சமணமதத் துணிபு ஆகும். அவர்களுள், சுவேதாம்பர சமணர் பெண் பிறவிக்குச் சற்று உரிமை கொடுக்கின்றனர். இல்லறத்தை நீக்கித் துறவுபூண்டு மனத்தை அடக்கி உடம்பை வருத்தித் துன்பங்களைப் பொறுக்கும் ஆற்றல் பெண் மகளிர்க்கு இல்லாத படியினால், அவர்கள் பெண் பிறப்பில் வீடுபேறடைய முடியாதென்றும், ஆனால், அவரும் துறவுபூண்டு மனவுறுதியோடு முயல்வார்களாயின் வீடுபேறடையக் கூடும் என்றும் சுவேதாம்பரச் சமணர் கூறுகின்றனர். ஆனால், திகம்பரச் சமணர் பெண் பிறவியில் வீடுபேறடைய முடியாதென்றும்,பெண்கள் ஆணாகப் பிறந்து, துறவுபூண்டு நோற்றால்தான் வீடுபேறடைய முடியும் என்றும் கூறுகின்றனர்.

ஒருவன் யாரையேனும் வஞ்சனை செய்தால், அவன் அடுத்த பிறப்பில் பெண்ணாகப் பிறப்பான் என்பது சமணசமயக் கொள்கை.

தமிழ்நாட்டில் முற்காலத்தில் இருந்தவரும் இப்போது இருப்பவரும் திகம்பரச் சமணர் ஆவர். ஆகவே, திகம்பரச் சமணரால் இயற்றப்பட்ட சமணசமயத் தமிழ் நூல்களிலும் பெண்மக்களுக்கு மோட்சம் இல்லை என்று எழுதி வைத்தனர். பெண்கள் மோட்சம் அடைய விரும்பினால்,முதலில் அவர்கள் ஆணாகப் பிறக்கவேண்டும்; ஆணாகப் பிறந்தாலும் துறவுபூண்டு கடுமையாக நோன்பிருக்க வேண்டும்; அப்பொழுதுதான் அவர்கள் மோட்சம் அடையமுடியும் என்பது சமணசமயக் கொள்கை.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் முதல் சூத்திரம்.

‘‘எழுத்தெனப் படுப
அகரமுத நனகர விறுவாய் முப்ப்ஃ தென்ப”

என்று கூறுகிறது. இதற்கு உரையெழுதிய சமணராகிய இளம்பூரண அடிகள், திகம்பர சமணசமயத்தவர் ஆகலின், இவ்வாறு விளக்கம் கூறுகிறார்: ‘‘அகரம் தானும் இயங்கித் தனி மெய்களை இயக்குதற் சிறப்பான், முன் வைக்கப்பட்டது. னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது.’’

இவ்வாறு, ஆண்பாலார்க்கன்றிப் பெண்பாலர்க்கு வீடுபேறு கிடையாது என்னும் தமது சமயக் கொள்கையை இலக்கண நூலிலும் வற்புறத்துகிறார் இளம்பூரண அடிகள்.

‘‘இந்திரன் தேவிமார்க்கும் இறைமைசெய் முறைமை இல்லை
பைந்தொடி மகளிராவார் பாவத்தால் பெரியநீரார்.’’

என்று கூறுகிறது, மேருமந்தர புராணம் (738 ஆம் செய்யுள்.)

‘‘அண்ணை[242] அலிகுரு டாதி யவர்களை
மண்ணுயர் ஞாலத்து மானுட ராகவைத்
தெண்ணுநர் யாருளர்? எல்லா மமையினும்
பெண்ணின் பிறவியும் பீடுடைத் தன்றே.’’

என்று கூறுகிறது சூளாமணிக்காவியம். (துறவு: 145 ஆம் செய்யுள்.)

‘‘விதியினால் கதிகள் நான்கில் மேவிநின் றார்கள் தம்முள்
மதியினால் பெரிய நீரார் மக்களாய் வந்து தோன்றி
விதியினால் தானம் பூசை மெய்த்தவம் செய்து வீட்டைக்
கதிகளைக் கடந்துசெல்வார். காரிகை யார்கள் செல்லார்.’’

என்பது மேருமந்தர புராணம்.
--------
[242]. அண்ணை - பேடி
--------
பெண்ணாகப் பிறந்தவர், இந்தப் பிறப்பிலே அவர்களுக்குக் கூறப்பட்ட முறைப்படி நடந்தால்,மறுபிறப்பிலே தெய்வலோகத்திலே (ஆண்) தேவராகப் பிறந்து இன்பம் துய்த்துப் பிறகு மீண்டும் மண்ணுலகத்திலே மனிதப் பிறப்பிலே ஆண்மகனாகப் பிறப்பார்கள் என்றும் அந்த ஆண்பிறப்பிலே துறவுபூண்டு தவம் செய்வார்களாயின் வீடுபேறு அடைவார்கள் என்றும் மேருமந்தர புராணம் கூறுகின்றது.

‘‘விரதசீ லத்த ராகித் தானமெய்த் தவர்க்குச் செய்து
அருகனைச் சரண மூழ்கி யான்றவர்ச் சிறப்பு செய்து
கருதிநற் கணவற் பேணும் கற்புடை மகளிர் இந்த
உருவத்தின் நீங்கிக் கற்பத் துத்தம தேவர் ஆவார்.’’
‘‘மாதவந் தாங்கி வையத்து ஐயராய் வந்து தோன்றி
ஏதமொன் றின்றி வீடும் எய்துவர் தைய லார்கள்.’’

இதே, கருத்தைச் சீவகசிந்தாமணியும் கூறுகிறது. சீவகன் துறவுபூண்டபோது அவனுடன் துறவுபூண்ட அவனுடைய தேவிமார், வீடுபேறடைவதற்காகத் தவம் செய்யவில்லை. பெண் பிறப்பு நீங்கும்படியாகத் தவம் இருந்தனர். அந்தத் தவத்தின் பயனாக அவர்கள் மறுபிறப்பிலே தேவலோகத்தில் இந்திரர்களாக (ஆண்பிறவியாகப்) பிறந்தார்கள் என்று கூறப்படுகிறது.

அச் செய்யுள் இது:

‘‘ஆசை யார்வமோ டைய மின்றியே
ஓசை போய்உல குண்ண நோற்றபின்
ஏசு பெண்ணொழித் திந்தி ரர்களாய்த்
தூய ஞானமாய்த் துறக்கம் எய்தினார்.’’