சிங்கை - காங்கேயம்

பாடல் 937
தந்ததன தந்த தந்ததன தந்த
தந்ததன தந்த ...... தனதான
சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்ற
தண்குவளை யுந்து ...... குழலாலுந்
தண்டரள தங்க மங்கமணி கின்ற
சண்டவித கும்ப ...... கிரியாலும்
நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்து
நம்பிவிட நங்கை ...... யுடனாசை
நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்று
நன்றுமயில் துன்றி ...... வரவேணும்
கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி
கந்திகமழ் கின்ற ...... கதிர்வேலா
கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள்
கண்டுபொரு கின்ற ...... கதிர்வேலா
செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை
திண்குயம ணைந்த ...... திருமார்பா
செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த
சிங்கையில மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 938
தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான ...... தனதான
சந்திதொறு நாண மின்றியகம் வாடி
உந்திபொரு ளாக ...... அலைவேனோ
சங்கைபெற நாளு மங்கமுள மாதர்
தங்கள்வச மாகி ...... அலையாமற்
சுந்தரம தாக எந்தன்வினை யேக
சிந்தைகளி கூர ...... அருள்வாயே
தொங்குசடை மீது திங்களணி நாதர்
மங்கைரண காளி ...... தலைசாயத்
தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி
என்றுநட மாடு ...... மவர்பாலா
துங்கமுள வேடர் தங்கள்குல மாதை
மங்களம தாக ...... அணைவோனே
கந்தமுரு கேச மிண்டசுரர் மாள
அந்தமுனை வேல்கொ ...... டெறிவோனே
கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல
சிங்கைநகர் மேவு ...... பெருமாளே.