சிறந்த ஆயுதம்

ஒரு குருவும் அவருடைய சீடர்களும் ஆற்றங்கரையோரத்தில் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர். ஒரு சீடன் கேட்டான், குருவே, பூர்வ ஜென்மத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள் நிஜம்தானா?உண்மைதான்.
இப்போது நான் ஆயுதம் ஏந்திப் போருக்கு செல்வதை கைவிட்டுவிட்டேன் என்றார் குரு.
ஏன் குருவே? போர் தவறா? ஆயுதங்களை கையில் எடுப்பது தவறா? என்று சீடர்கள் கேட்டனர். அதற்கு குரு சரி தவறு என்பதல்ல என் கருத்து. ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையும், அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று எனக்குப் புரிந்து விட்டதால் கைவிட்டுவிட்டேன்.
குருவின் வார்த்தைகளில் நம்பிக்கை ஏற்படாத சீடர்கள் அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து, ஒரு திட்டம் போட்டனர். நாளை குரு தியானத்தில் இருக்கும்போது, நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம்.
அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம் என்று முடிவு செய்தனர்.
மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், குரு வழக்கம்போல தியானத்தில் ஆழ்ந்துவிட, இந்த இரு சீடர்கள் மட்டும் ஆசிரமத்திற்கு பின்புறத்தில் மறைந்து கொண்டனர்.
சில நிமிடங்கள் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது ஏக காலத்தில் இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர்.
குரு முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு, கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்து கொண்டார்.
சீடர்கள் இருவரும் பாய்ந்த வேகத்தில் இருவரும் ஒருவர்மீது ஒருவர் மோதிக் கொண்டு கீழே விழுந்தனர். குரு தியானத்தைத் தொடர்ந்தார்.