சிவகாசிக் கலகம்-2

அய்யாத்துரை தேவர்
சித்திரை மாத்தையிலே
சிறந்த செவ்வாய்க் கிழமையிலே
ஒன்பதாம் தேதியிலே-அய்யாத்துரை
உசுரு கொடுக்கப் போனாரே
நாலு மூணும் ஏழு-இந்த
இருளாண்டித் தேவரைக் கேளு
சாப்பிட்டுக்கை கழுவி
சகுனம் பார்த்து வெடியெடுத்து
போரானாம் அய்யாத்துரை
பொன்னுசுரப் போக்கழிக்க
நாலு மூணும் ஏழு-அந்த
நாச்சியரெ கேளு
ஏறினார் வில்லுவண்டி
இறங்குனார் வேங்கப் புடை
சாராய போதையினால்
சாஞ்சு விட்டார் அய்யாத்துரை
கூடப் பிறந்தவனாம்
குடிகாரச் சங்கரனாம்
குடிக்கத் தண்ணி கேட்டதுக்கு
குதித்து விழுந்து ஓடினானாம்
பணத்தைச் செலவழிச்சு
படைகளல்லாம் முன்னே விட்டு
பின்னால் போகச் சொல்லி
பின்னடித்தான் கருணாலபாண்டி
பழிப்பாட்டம் குத்தகையார்
பாண்டிய மன்னன் அய்யாத்துரை
பங்கு வாங்கப் போகப் போயி
பழிவிழுந்து மாண்டாரய்யா
ஜாதியில் மறக்குலமாம்
சாந்த குண அய்யாத்துரை
பண்டாரச் செட்டியல்ல
பட்டு மடிந்தாரய்யா
பழனியாண்டி தேவர் மகன்
பாண்டிய மன்னன் அய்யாத்துரை
பங்கு வாங்கப் போகப் போயி
பழிவிழுந்தே மாண்டாரய்யா
ஆளிலேயும் நல்லாளு
அதிகப் பூஞ் செகப்பு
தங்கமுடி அய்யாத்துரை
தரகுக் கடை வாரதெப்போ?
நெல்லளந்து சேரக்கட்டி
நெடும்பரும்ப யானைகட்டி
பொன்னளக்க மாட்டாம
போய் மாண்டார் அய்யாத்துரை
வேட்டி ரெண்டு வெள்ளவேட்டி
வீடு ரெண்டும் காரவீடு
பூஞ் செகப்பு அய்யாத்துரை
பொன்னுயிரப் போக்கழிக்க
பொண்டாட்டியைத் தவிக்க விட்டு
புள்ளைகள மருக விட்டு
போய் விழுந்தான் நாய்ச்சியார் தோட்டம்
பொருதியுள்ள அய்யாத்துரை
குறிப்பு: மறவர் கட்சியைச் சேர்ந்தவர் பாடல்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி.
-------
இடம் பெற்றுள்ள `சிவகாசிக் கலகம்-2`, `அய்யாத்துரை தேவர்`என்ற பாடல் சிவகாசிக் கலகம் பற்றித் தோன்றியதன்று.`பழிப்பாட்டம்` (மலைபடு பொருட்களைச் சேகரிக்கும் உரிமை) குத்தகை தொடர்பான பிரச்சனையில் அய்யாத்துரை தேவர் என்பவர் இறந்த நிகழ்ச்சியை இப்பாடல் குறிக்கிறது.
-------------