சீரான தாயிழந்தோம் !

தாயின் அன்பிற்கு ஈடானதோர் செல்வம் உண்டா? மழை பெய்து ஆற்றில் தண்ணீர் வந்தால் மீன் பிடித்து தம்பியின் மூலம் மகளுக்குக் கொடுத்தனுப்புவாள் தாய். இன்று தாய் இறந்துவிட்டாள். இனி தம்பி மீன் கொண்டு வருவானோ? தாய் இறந்துபோன பி்ன்பு அண்ணன் தம்பி என்ற உறவு நிலைக்குமோ?
வடக்கே மழை பேயும்
வண்ணாறு தண்ணி வரும்
வண்ணாத்துத் தண்ணியிலே
வாழை மீனுத் துள்ளி வரும்
வாழை மீனு அரிச்செடுக்க
வண்ணப் பொறப்பிழந்தேன்
வரிசையுள்ள தாயிழந்தேன்
தெற்கே மழை பேயும்
சின்னாறு தண்ணி வரும்
சித்தாத்துத் தண்ணியிலே
சிறு மீனு துள்ளி வரும்
சிறு மீனு அரிச்செடுக்க
சின்னப் பொறப் பெழந்தேன்
சீரான தாயிழந்தேன்
வட்டார வழக்கு: பொறப்பு-சகோதரன்.
உதவியவர் : ஜானகி சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: சேலம் மாவட்டம்.
------------