செங்குட்டுவனைப் பாடிய இருபெரும் புலவர்கள்

bookmark

சேரன்-செங்குட்டுவன்காலத்தே, தமிழ்நாட்டிற் புலவர் பெருமக்களாக விளங்கியவர், பலர்; இவரெல்லாம் தமிழ்ப் பேரரசர்களாலும் சிற்றரசர்களாலும் பெரிதும் அபிமானித்து ஆதரிக்கப்பட்டுவந்தனர். எட்டுத்தொகை நூல்களிற் காணப்பட்ட புலவர்பெருமக்களிற் பலர், செங்குட்டுவன்காலத்தும் அவனையொட்டியும் ஒருநூற்றாண்டுக்குள் விளங்கியிருந்தவராகவே, அன்னோர்பாடிய அரசர் முதலியவரின் தொடர்புகள்கொண்டு அறியப்படுகின்றனர். இங்ஙனம் இச்சேரனை அடுத்திருந்த புலவர் வரலாறுகளையெல்லாம் விரிப்பிற்பெருகும்;ஆயினும், செங்குட்டுவனால் நேரில் அபிமானிக்கப்பட்ட புலவரிருவரை மட்டும் இங்கே குறிப்பிடல் தகும். அவராவார்:- பரணரும் சாத்தனாரும்.

[பரணர்]
இவருட் பரணரென்பவர், கடைச்சங்கமிருந்த புலவர் பெருமக்களுள் ஒருவர். இவரைப்போல அக்காலத்தே புகழ் பெற்றிருந்தவர், கபிலர் ஒருவரேயெனலாம். அந்தணர்குல திலகராகிய இப்பரணர், செங்குட்டுவனைப் பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பதிகத்தாற்பாடி, அவனது வீரங்கொடை முதலியவற்றை விளக்கியிருக்கின்றார். இவர் பாடல்களைக்கேட்ட சேரர் பெருமான் ம‌கிழ்வுற்று உம்பற்காடு என்னும் சேரநாட்டுப் பகுதியின் அரசிறைவருவாயையும், தன் மகன் குட்டுவஞ்சேரலையும் பரணர்க்குப் பரிசாகக்கொடுத்தான் என்று, அப்பத்தின் இறுதிவாக்கியங் கூறுகின்றது. தன் மகனைப் பரிசளித்தான் என்பதற்கு, பரணரிடம் அவனை மாணாக்கனாக ஒப்பித்தசெய்தியைக் குறிப்பதாகக் கொள்ளுதலே பொருந்தும். இப்பரணர் தம் பாடல்களிலே,செங்குட்டுவன் கடலிடையிருந்த தன்பகைவர்மேற் படையெடுத்து மரக்கலங்களைச் செலுத்திய பேராற்றலையே மிகுதியாகப் புகழ்கின்றனர். செங்குட்டுவன் தந்தை நெடுஞ்சேரலாதனாலும் இப்புலவர் அபிமானிக்கப்-பட்டவரென்பது, அச்சேரலாதன் சோழனுடன்புரிந்த பெரும்போரில் இறந்துகிடந்தபோது, இவர் உருகிப்பாடிய பாடலொன்றால்(புறம்-62.) உணரப்படுகின்றது. மற்றும், இவராற்பாடப்பெற்றதமிழரசர், உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியும்(இவன், காரிகாற்பெருவளத்தான் தந்தை) வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும்,வையாவிக்கோப்பெரும்பேகனும்(பேகனும் அதிகனும் கடையெழுவள்ளல்களைச் சேர்ந்தவர்.) அதிகமானஞ்சியும் வேறு சிலருமாவர். ஔவையாராலும் அருமையாகப் புகழ்ந்து கூறப்பட்டவர் இப்புலவர் பெருமானெனின் வேறு மிகுத்துச் சொல்வதென்னை?* எட்டுத்தொகைநூல்களிலே, இவர் பாடியனவாக 82-செய்யுட்கள் காணப்படுகின்றன. இப்பாடல்களால் அறியப்படும் விசேடங்களையெல்லாம், மஹாமஹோபாத்யாய-ஐயரவர்கள் பதிற்றுப்பத்துப் பதிப்பின் முகவுரையில் நன்குவிளக்கியிருத்தலால்,இங்கு அவற்றை எடுத்தெழுதுவது மிகையென விடுத்தோம்.

[சாத்தனார்]
இனிச் சாத்தனார் என்பவரும், கடைச்சங்கப் புலவருள் ஒருவரே; இவர் மதுரையில் நெல்லுப்புல்லு முதலிய கூல** வியாபாரஞ் செய்துவந்தமையால், மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் எனப் பெயர்பெற்றனர். சங்கத்தில் அரங்கேற்றற் பொருட்டுப் பிறர் பாடிவரும்நூல்களிற் குற்றங்காணுந்தோறும், அவற்றுக்கு மனம்பொறாது தம்விதியைநொந்து தலையிற் குத்திக்கொண்டு வந்தவர் இவரென்றும், அதுபற்றிச் சீத்தலைச்சாத்தனார் என வழங்கப்பெற்றார் என்றுங் கூறுவர்.இவரது தலைக்குத்துத் திருவள்ளுவரது முப்பாலைக் கேட்டபோது முற்றும் நீங்கியதென்பது:-
"சீந்திநீர்க் கண்டந் தெறிசுக்குத் தேனளாய்
மோந்தபின் யார்க்குந் தலைக்குத்தில்-காந்தும்
மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலாற்
றலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு"
----
* புறம்-99
**கூலம் என்பன - நெல்லுப் புல்லு வரகு தினை சாமை இறுங்கு தோரை இராகி என்பன.

என்னும் மருத்துவன்-தாமோதரனார் வாக்கால் (திருவள்ளுவமாலை. 11.) அறியப்படுகின்றது. இச் சாத்தனார் பௌத்தமதச் சார்புடையவரென்பது,மணிமேகலையில், அம் மதவிஷயங்களை உணர்ச்சியுடனும் உருக்கத்துடனும் மிகவழகாக இவர் பாடுதலினின்றும் ஏனைய மதங்களை அங்ஙனம் கூறாமையினின்றும் உய்த்தறியலாம். முற்காலத்து வழங்கிய சமயநூல்களிலும் தருக்கமுதலியவற்றினும் மிகுந்த ஆராய்ச்சியுடையார் இவரென்பதும்,வடநூற்பயிற்சி பெரிதுடையவரென்பதும் மணிமேகலையால் தெளிவாகின்றன. கோவலன் கொலையையும், கண்ணகியின் சீற்றத்தால் விளைந்த மதுரைக் கேட்டையும், கோவலன் மகள் மணிமேகலை துறவையும் இப்புலவர் நேரில் அறிந்தவர். செங்குட்டுவன் தன் சகோதரருடன் பெரியாற்றங்கரையில் தங்கியிருந்தபோது, இப் புலவர்பெருமானும் அவனுடன் சென்றிருந்தார். அப்போது மலைவாணர்பலர் வந்து, தங்கள்மலையில் கண்ணகி சுவர்க்கம்புக்க செய்தியைச் செங்குட்டுவனுக்குத் தெரிவிக்க, இச் சாத்தனார், தாம் மதுரையில் நேரிலறிந்த அவள்வரலாறுகளை அரசனுக்கு விரித்துரைத்தனர். இவர் தெரிவித்த செய்திகளைக்கொண்டே, இளங்கோவடிகள், கண்ணகியின் சரித்திரத்தைச் சிலப்பதிகாரமென்னுஞ் சிறந்த காப்பியமாகப் பாடுவாராயினர். இவ்வடிகள் சிலப்பதிகாரத்தைப் பாடிமுடிப்பதற்கு முன்பே, சாத்தனார் கோவலன்மகள் மணிமேகலையின் துறவைப்பாடி முடித்திருந்தனரென்பது, "மணிமேகலைமே லுரைப்பொருண் முற்றிய சிலப்பதிகாரமுற்றும்" என்ற இளங்கோவடிகள் கூற்றே அறிவிக்கின்றது. கண்ணகி மணிமேகலையிருவர் சரிதங்களையும் செங்குட்டுவன் சகோதரரான அவ்வடிகளே பாடக் கருதியிருந்தனரென்றும், சாத்தனார் மணிமேகலை துறவைப் பாடி முடித்துவிட்டமை தெரிந்து சிலப்பதிகாரத்தை மட்டும் அவரியற்றினரென்றும் அடியார்க்குநல்லார் பதிகவுரையிற் குறிப்பிடுவர். சாத்தனார் தாம்பாடிய மணிமேகலையை இளங்கோவடிகளைத் தலைமையாகக்கொண்ட அவைக்கண்ணே அரங்கேற்றினரென்பதும், இளங்கோவடிகளும் தம் சிலப்பதிகாரத்தைச் சாத்தனார் முன்பு அரங்கேற்றினரென்பதும் அவ்விருவரும் பாடிய பதிகங்களால் தெரிகின்றன. சாத்தனார் செங்குட்டுவனாற் பெரிதும் அபிமானிக்கப்பட்டதோடு அவன் சபையை அலங்கரித்த புலவர்பெருமானாகவும் விளங்கினர்.(சிலப். பதிகம்.10; சிலப் 25: 106.) மலைவளங் காணவேண்டிச் செங்குட்டுவன் பேரியாற்றங்கரையில் தங்கியிருந்தபோது, இவரும் அவனுடன் சென்றிருந்து, சேரனது செல்வப்பொலிவைக் கண்டுவியந்தனர் என்பது "கண்களி மயக்கத்துக் காதலோடிருந்த-தண்டமி ழாசான் சாத்தன்"என அடிகள் கூறுதலால்(சிலப்25:65-66) அறியலாம். தம் நகரத்தரசனாக விளங்கிய ஆரியப்படைதந்த -- நெடுஞ்செழியன் கோவலன் கொலைகாரணமாக இறந்ததும், சாத்தனார் வஞ்சிசென்று செங்குட்டுவனால் ஆதரிக்கப்பட்டார் என்பதும், பின் பாண்டிநாட்டை அந்நெடுஞ்செழியன் தம்பி வெற்றிவேற்செழியன் என்ற நன்மாறன் ஆட்சிபுரியத் தொடங்கியதும், இவர், தம் ஊராகிய மதுரைசென்று அப்பாண்டியனால் அபிமானிக்கப் பட்டனரென்பதும் உய்த்தறியப்படுகின்றன. சாத்தனார் இந் நன்மாறனைப் பாடிய பாடலொன்று புறநானூற்றுள் (59) காணப்படுதல் அறியத்தக்கது
---------
*(சிலப். பதிகம்.10; சிலப் 25: 106.) †(சிலப்25:65-66)
இம்மாறன்,"சித்திரமாடத்துத் துஞ்சிய" என்னும் அடையுடன் பிற்காலத்தில் வழங்கப்பட்டான். நக்கீரர் முதலியோராற் பாடப்பட்டவனாக அந்நூலிற்கண்ட "இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாற"னின் இவன் வேறானவன். நற்றிணை முதலிய தொகை நூல்களிலே இச்சாத்தனராற் பாடப்பட்டனவாகக் காணப்படும் செய்யுள்கள் சிலவுண்டு. இப் புலவர்பெருமானது வாக்கினிமையும் பெருமையும் பிறசிறப்புக்களும், மஹாமஹோபாத்யாய-ஐயரவர்கள் வெளியிட்ட மணிமேகலைமூலம் அறிஞரெல்லாம் அறிந்து மகிழ்ந்தவையாதலால், இங்கு விரித்திலேம்.