செங்குட்டுவன் காலவாராய்ச்சி

bookmark

இனி, செங்குட்டுவன்காலத்தை ஆராய்வோம். இவ்வேந்தன் வாழ்ந்த காலத்தை ஆராய்வதினின்று, தமிழ்ச்சரிதத்தின் முக்கியமான பகுதியொன்றையே நாம் தெரிதல் கூடும். எவ்வாறெனின், இச்சேரனைப் பாடிய பரணரும் சாத்தனாரும் அவர்கள் காலத்துப் புலவர்கள்பலரும் கடைச் சங்கத்தவரென்பதும், அப்புலவர்களாற் பாடப்பட்ட பேரரசருஞ் சிற்றரசரும் அக்காலத்தையே சூழ்ந்திருந்தவரென்பதும் சங்க நூல்களால் நன்கறியப்படுகின்றமையால், இவ்வாராய்ச்சியிலிருந்து அப்புலவர் அரசர்களது காலநிலையும் தெளிவாகக்கூடுமன்றோ? இதுபற்றியே,தமிழறிஞர் சிலர் இவ்வேந்தன் காலத்தையாராய முற்படுவாராயினர். இன்னோருள், காலஞ்சென்ற ஸ்ரீ.கனகசபைப்பிள்ளையவர்களை இங்கே குறிப்பிடல் தகும். கடைச்சங்க காலம்பற்றி இவர்கள் எழுதிப்போந்த காரணங்களுள் முக்கியமானவை இரண்டெனலாம்.

முதற்காரணம்-செங்குட்டுவன் காலத்தவனாக இளங்கோவடிகள் கூறிய இலங்கைவேந்தன் -கயவாகுவின் காலத்தைக்கொண்டு அச்சேரன்காலத்தை அளந்ததாம்; அஃதாவது, இலங்கைச் சரித்திரத்துட்கண்ட கஜபாகு என்ற பெயருடையார் இருவருள், முன்னவன் கி.பி. இரண்டாநூற்றாண்டிலும், பின்னவன் 12-ம் நூற்றாண்டிலும் ஆண்டவர் எனப்படுகின்றனர். இவருள் இரண்டாமவன், மிகப்பிந்திய காலத்தவனாதலின், கி.பி. 113 - 135 வரை ஆட்சிபுரிந்தவனாகத் தெரியும் முதற்கயவாகுவே நம் சேரன்காலத்தவனாதல் வேண்டும் என்பதாம்.

இரண்டாங் காரணம் - செங்குட்டுவனுக்கு நட்பரசராக இளங்கோவடிகள் குறித்த நூற்றுவர்கன்னரைப் பற்றியது.நூற்றுவர்கன்னர் என்போர், மகதநாடாண்ட சாதகர்ணி என்ற ஆந்திரவரசரைக் குறிக்கும் தமிழ்வழக்கென்றும், மச்ச புராணத்தின்படி, அப்பெயர்தரித்த அரசனது காலம், கி.பி.77 - 133 வரையாகுமென்றுங் கூறப்படுகின்றன. இங்ஙனம்,நூற்றுவர் கன்னர் என்ற அரசன் காலமும், மேற்குறித்த கயவாகுவின்காலமும் மிகநெருங்கியிருத்தலால், அவ்விருவருடன் நட்புப்பூண்டிருந்த செங்குட்டுவனுக்கு மேற்படி 2 - ஆம் நூற்றாண்டையே கொள்ளுதல் பொருந்தும் என்பது.(ஸ்ரீ மாந் - S.கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரவர்கள் M.A., கயவாகுவின் காலம் 179 - 201 வரை ஆகுமென்றும், நூற்றுவர் கன்னர் எனப்பட்ட சாதகர்ணி என்பான் 172 - 202 வரை ஆட்சிபுரிந்த யஜ்ஞஸ்ரீ சாதகர்ணி ஆதல்வேண்டுமென்றும் சில மாற்றங்கள்செய்து எழுதுவர்; இவர்கள் கருத்துப்படி, செங்குட்டுவன் 2 அல்லது 3 - ம் நூற்றாண்டினனாவன் (செந்தமிழ். 4 -ம் தொகுதி.பக்.525 - 27).)

இவ்வாறு, செங்குட்டுவன்காலம், 2 -ஆம் நூற்றாண்டாக எழுதப்பட்ட கொள்கையானது, நம்மவருட் பெரும்பாலாருடைய நன்மதிப்பும் சம்மதமும் பெற்றிருத்தலை நாம் அறிவோம். ஆயினும், சமீபத்தில் நிகழ்ந்த எமதாராய்ச்சியில், அம் "முடிந்த" கொள்கையை விரோதித்து நிற்கும் முக்கியமான விஷயங்கள்சில எதிர்ப்படலாயின. இவற்றினின்று,நம் சேரன், மேற்குறித்த காலத்துக்கும் இரண்டு மூன்று நூற்றாண்டுவரை பிற்பட்டவனாகத் தோற்றுகின்றது.

இதற்குரிய காரணங்களை இங்கு விவரிப்பதால், சங்ககாலத்தைப்பற்றி ஐயுறாது சமாதானம் பெற்றிருக்கும் உள்ளங்கட்கு இடையூறாகுமோ என்றஞ்சுகின்றேம். எனினும், அபிப்பிராயங்களை மறைப்பதனாற் சரித்திரவுண்மை வெளிப்படுதல் தடைப்படுமாதலின், அறிஞர் ஆராய்ந்து ஏற்றபெற்றி கொள்ளுமாறு,அவற்றை ஈண்டு வெளியிடுவேம்.

கடைசங்ககாலத்தில் விளங்கிய புலவருள்ளே,கபிலர், பரணர், நக்கீரர், மாமூலர், சாத்தனார் முதலியோர் சிறந்தவர்களென்பது, யாவரும் நன்கறிவர். இவருள், மாமூலனார் - சோழன் கரிகாலன், சேரலாதன்,கள்வர்கோமான் புல்லி முதலிய அரசர்காலத்தவர் என்பதும், தமிழ் நாட்டின் பலபாகங்களிலும் வடநாடுகளிலும் இவர் சஞ்சரித்து வந்தவரென்பதும், அகநானூற்றிற்கண்ட இவர் பாடல்களால் அறியப்படுகின்றன. இப்புலவர், செங்குட்டுவனாற் போரில் வெல்லப்பட்ட பழையன்மாறனுக்கும் மோரியருக்கும் நிகழ்ந்த போரொன்றையும் குறிப்பிடுதலால் (அகநானூறு. 251.) அச்செங்குட்டுவன் காலத்தவராகவும் தெளியப்படுகின்றார்.இனி, இம்மாமூலனார் வாக்காகவுள்ள,அகநானூற்றின் 265 -ம் பாட்டிற்கண்ட அரிய செய்தியொன்று ஈண்டு ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளத்தக்கது: அஃதாவது -
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ."
என்பது. இவ்வடிகளிலே, நந்தருடைய புராதன ராஜஸ்தலமாகிய பாடலீபுரத்துள் கங்காநதி பிரவேசித்து அதன் வளங்களை அழித்துப்போந்த செய்தி குறிக்கப்படுதல் காணலாம். இவ்வாறு கங்காப்பிரவாகத்தால் பாடலீபுரம் தன் வளங்களையிழந்து வறுமையுற்ற விசேடம் எக்காலத்து நிகழ்ந்தது? என்பதை இனி நோக்குவோம்.

 

பாடலீபுரமானது, நந்தர் மௌரியர் ஆந்திரர் முதலிய பிரபல சக்கரவர்த்திகளது ஆட்சித்தலமாய், இப்பரதகண்டத்துக்கே ஒரு சிரோரத்தினம்போல் மிகுந்த பிரசித்தம்பெற்று விளங்கியதாகும். இதன் வரலாறு, தக்க சாஸனங்கள் மூலமாகப் பல நூற்றாண்டுகள்வரை தெரியக்கூடிய நிலையில் உள்ளது.(பழைய பாடலீபுரமானது,சோணைநதியின் (Son) வடகரையிலும், கங்கைக்குச் சிறிது தூரத்தும் அமைந்திருந்ததென்றும், 9-மைல் நீளமும் 1 1/2 - மைல் அகலமும் உடையதென்றும், 64-வாயில்களும், 574 கோபுரங்களும்,சோணைநதியின் ஜலத்தால் நிரம்பிய அகழும் உடைத்தா யிருந்ததென்றும் பூர்வீகர்பலர் எழுதிய குறிப்புக்களால் தெரிகின்றன.(V.A. Smith"s Early History of India. p.119-120.))மௌரியவரசருள் முதல்வனாகிய சந்திரகுப்தனும், அவன்பெயரன் அசோகசக்கரவர்த்தியும் வீற்றிருந்து ஆட்சிபுரிந்த அரண்மனை, கி.பி. 4-ம் நூற்றாண்டுவரை அதன் பழைய நிலைப்படியே இருந்து வந்ததென்பது, பா-ஹியான் (Fa-Hian)என்ற சீனவித்வான் அம்மஹாநகரத்தை நேரிற் கண்டு புகழ்ந்திருத்தலால் தெளிவாகின்றது. இதனால்,அசோகன் காலந்தொட்டு பாஹியான் வரவுநிகழ்ந்த 4-ம் நூற்றாண்டிறுதிவரை எவ்வகைச் சிதைவுமின்றித் தன் பழைய நிலையில் அந்நகரம் இருந்துவந்ததென்பது நன்கு விளங்கும்.

இனி, அந்நகரம், மேற்குறித்தபடி, இன்னகாலத்தில் அழிவுற்றது என்பதை விளக்கற்கு நேரான பிரமாணம் இப்போது காணப்படவில்லை. ஆயினும், கி.பி.7-ம் நூற்றாண்டில் சீனதேசத்தினின்று வந்து நம் நாடெங்கும் சஞ்சரித்த பிரசித்த யாத்திரிகரான ஹ்யூந்-த்ஸாங் (Hiuen-Tsung) என்பவர் இந்நகரத்தை நேரிற் பார்த்து வருதற்பொருட்டுச் சென்றபோது, அது தன் பூர்வநிலையை முற்றுமிழந்து, கங்கைக்கரையில் 200, 300-வீடுகளுடையதாய் 1000-ஜனங்கள் வசித்துவந்த ஒரு சிறு கிராமமாக மாறிவிட்ட நிலையை அவர் குறித்திருக்கின்றார். இதனால், கி.பி. 400-ல் தன் பழைய பெருமையோடு விளங்கிய பாடலீபுரம், ஹ்யூந்-த்ஸாங் வந்த காலமான கி.பி.650-க்கு முன் கங்கையால் அழிவுற்றிருத்தல் வேண்டுமென்பது ஐயமின்றிப் பெறப்படும். சந்திரகுப்தன் காலத்தவரான மெகஸ்தனிஸ் என்ற யவனதூதரால் குறிக்கப்பட்டதும், பாடலியைச் சூழ்ந்திருந்ததுமான பெரிய மர‌க்கோட்டை சமீபத்திற் கண்டெடுக்கப்பட்ட விவரத்தை எழுதுமிடத்தில், ஸ்ரீ.ரோமேசசந்திர தத்தர் தம் நூலிற் காட்டியுள்ள கீழ்க்குறிப்பு ஈண்டுக் கவனிக்கத்தக்கது.

"சீனதேச யாத்திரிகரான பாஹியான் வந்து பார்த்தபோது, கி.பி.5-ம் நூற்றாண்டில் அம்மரச்சுவர்கள் அழியாதிருந்தன. பாஹியான் எழுதுவதாவது-"அந்நகரத்துள்ள அரண்மனைகள்(இப்பழைய அரண்மனை, பாங்கிபூர் (Bankipore) பாட்னா (Patna) நகரங்கட்கு இடைப்பட்ட ரயில்வேயின் தென்பாரிசத்து,குமாராஹார் (Kumarahar) கிராமத்தின் வீடுவயல்களின்கீழ்ப் புதைவுண்டிருந்ததாகத் தெரிகிறது. (V.A. Smith"s Early History of India. p. 120. note.)) பூதகணங்கள் கொணர்ந்துசேர்த்த கற்களால் நிருமிக்கப்பட்ட சுவர்களுடையனவாகும். அக்கட்டிடத்துச் சாளரங்களை அலங்கரித்து நிற்கும் சித்திரங்களும் பிரதிமைகளும், இக்காலத்தவராற் செய்யமுடியாத அவ்வளவு வேலைத்திறம் வாய்ந்தவை.

அவைகள், முன்பிருந்தவாறே இன்றும் உள்ளன"-என்பது. பாடலிபுரத்தின் அழிவானது,பாஹியான் காலத்துக்குப்பின் மிகவும் அடுத்து நிகழ்ந்ததாம். ஏனெனின்,7-ம் நூற்றாண்டில் ஹ்யூந்-த்ஸாங் என்ற மற்றொரு சீனயாத்திரிகர் ஆங்கு வந்து பார்த்தபோது,அந்நகரத்தின் அழிவுபாட்டையும், 200,300-
வீடுகளுடைய ஒருசிறு கிராமத்தையுந்தவிர,வேறொன்றையும் அவர் அங்குப் பார்க்கவில்ல்லை"-எனக் காண்க.*

மேற்கூறியவற்றால்,பாடலீபுரம் கி.பி.5,7ஆம் நூற்றாண்டுகட்கிடையில் அழிவுற்ற செய்தி தெளிவாகின்றது. பழைய பாடலிக்குச் சிறிது தூரத்தோடிய கங்கையானது
இப்போது அதன்பக்கத்துச் செல்வதால், அம்மஹா நதியின் திடும் பிரவேசத்தாலுண்டான நிலைமாற்றமே அவ்விராஜ ஸ்தலத்தின் பேரழிவுக்குக் காரணமாகியதெனெக் கருதலாம். ஆகவே செங்குட்டுவன் காலத்தவராகிய மாமூலனார்,"சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை, நீர்முதற் கரந்த நிதியம்" என்று பாடியிருப்பது, முற்கூறிய பாடலியழிவுச் செய்தியையே குறிப்பதென்பதில் தடையென்னை? ஹ்யூந்-த்ஸாங் வந்து பார்த்தபோது பாடலீபுரம் ஒரு குக்கிராமமாக மாறியதென்று அவர் எழுதினராயினும், அவ்வழிவு தமக்கு முன் இன்னகாலத்து நிகழ்ந்ததென்று அவருங் குறித்திலர்; தமது காலத்தையடுத்து அது நிகழ்ந்திருந்ததாயின் அச் செய்தியையும் அவர் கூறாமற் போகார்; அங்ஙனமின்மையால், அவர் வருகைக்கு இரண்டொரு நூற்றாண்டுகளுக்கு
முன்பே அவ்வழிவு நேர்ந்திருத்தல் வேண்டும்;
----------------------
*Civilization in ancient India. P. 217

அஃதாவது ஹ்யூந்-த்ஸாங்க்கு முன் வந்தவரான பாஹியான் காலத்தை யொட்டி (கி.பி. 5-ம் நூற்றாண்டில்) அது நிகழ்ந்த தென்பதாம். * தத்தரவர்களும் இவ்வபிப்-பிராயப்படுதல், முன் குறித்த அவர்குறிப்பைக் கொண்டு அறியத்தக்கது. இவற்றால்,பாடலியழிவைப் பாடிய மாமூலனாரும் அவர்காலத்து விளங்கிய செங்குட்டுவனும் ஏறக்குறைய அவ்வைந்தாம் நூற்றாண்டில் இருந்தவராதல் பெறப்படுகின்றது.

இனி, சேரன் செங்குட்டுவன் மாமூலனார் இவர்கட்கு, பாஹியான், ஹ்யூந்-த்ஸாங்-இருவர்க்கும் இடைப்பட்ட 6, 7-ம் நூற்றாண்டுகளையே,பாடலியழிவைக் கொண்டு, கூறுதல் கூடாதோ என்று ஒரு கேள்வி இங்குநிகழ்தல் கூடியதே. அவ்வாறு கொள்வற்கு,ஒரு முக்கியமானகாரணந் தடையாகின்றது. அஃதாவது,6 அல்லது 7 -ஆம் நூற்றாண்டே சங்கத்தரசர் புலவர்க்கு உரியதாயின், அது, பல்லவ சக்கரவர்த்திகளது ஆதிக்கம் தென்னாட்டில் நிகழ்ந்த ஒரு கால விசேடமாகும்; ஆம்போது,தமிழ்ச்சிற்றரசர் பேரரசர்க்குள்ளும்,அந்நியவரசர்க்குள்ளும் நிகழ்ந்த எத்தனையோ போர்களைக்
குறித்துவரும் அகநானூறு புறநானூறு முதலிய பண்டை நூல்கள், பெருவலி படைத்தவரும், யுத்தப்பிரியரும், தமிழ் நாடு முழுதும் தம்மடிப்படுத்து ஆண்டு வந்தவருமான பல்லவரது பெயரையேனும்,அவர் வரலாறுகளுள் ஒன்றையேனும் சிறிதுங்கூறாமலே செல்வற்குத் தக்க காரணம் வேண்டுமன்றோ? நம் நாட்டிற் காணப்படும் பல்லவ சாஸனங்களிலாயினும், சங்ககாலத்தரசர் செய்தி அறியப்படுவதுண்டா?அதுவுமில்லை.
-----------
*சமுத்திரகுப்தனுக்குப் பிந்திய அரசர்,பாடலீபுரத்தைத் தங்கள் ராஜஸ்தலமாக்காது நெகிழவிட்டதாகத் தெரிதலாலும்,அந்நகரம் அக்காலத்தே நிலைமாறிய செய்தி ஊகிக்கப்படுகிறது. V.A.Smith’s Early History of India p.278.)

அதனால், பல்லவர்கள் தென்னாட்டில் தங்கள் பெருமையை நிலை நாட்டுவதற்கு முன்னதான காலமொன்றில்தான்,செங்குட்டுவன்போன்ற சங்ககாலத்தவரான அரசர் திகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது, ஒருபோதும் தவறான ஊகமாகாது. அக்காலமாவது 4,5-ம் நூற்றாண்டே என்க. பல்லவர் இக்காலத்தே தமிழ்நாட்டிற் பிரவேசித்திருத்தல் கூடுமேனும்,6 அல்லது 7-ம் நூற்றாண்டிற்போலப் பிரபலம் பெற்றவரல்லர் என்பது,சரித்திரமூலம் அறியப்பட்டது.

முற்குறித்த நூற்றாண்டுகளே சங்ககாலமாகக் கொள்ளல் பொருந்துமென்பதற்கு மற்றொரு சிறுசான்றுமுண்டு;திகம்பரதரிசனமென்னும் சைநநூலில்,விக்கிரமாப்தம் 526 (கி.பி.470)-ல் வச்சிரநந்தி என்பவரால் தென்மதுரையில் ஒரு திராவிடசங்கம் கூட்டப்பட்டதாகச் சொல்லப் படுகின்றது.* சிலர்கருத்துப்படி,இத்திராவிட சங்கத்தையே கடைச்சங்கமென்று கொள்வற்குத் தகுந்த ஆதாரமில்லை. ஆனால், எக்காரணத்தாலோ கடைச்சங்கம் குலைந்ததை உத்தேசித்து,அதனையடுத்துத் தமிழ்வளர்ச்சி சமய வளர்ச்சி செய்வதற்கு ஒரு சங்கம் ஸ்தாபிக்கச் சைநர் இம்முயற்சி செய்திருக்கலாம். இச்சைநதிராவிட சங்கத்தினின்றே நாலடியார் முதலிய தமிழ்நூல்கள் எழுந்தனபோலும். இச்சங்கத்தின் நோக்கம்,குலைந்த கடைச்சங்கத்தைப் புனருத்தாரணஞ் செய்வதேயாயின், அக்கடைச்சங்கம் இச்சைந சங்கத்துக்குச்
சிறிது முற்பட்டதாதல் வேண்டும். அஃதாவது 5-ம் நூற்றான்டின் முற்பகுதி அல்லது 4-ம் நூற்றாண்டு ஆகும்; எங்ஙனமாயினும்,இத்திராவிட சங்கத்தின் எழுச்சியானது, கடைச்சங்கம் 5-ம் நூற்றாண்டுக்கும் முந்தியதென்பதைக் குறிப்பதுமட்டில் நிச்சயமெனலாம்.
-------------
*Bombay Royal Asiatic society’s journal.Vol.XVII. No.XLIV.pp.74

சேரன்-செங்குட்டுவன்காலம் 4, 5-ம் நூற்றாண்டுகளே எனக்குறிப்பிடும் மேற்கூறிய பிரமாணங்களை, மற்றோர் அரியசெய்தியும் ஆதரியாநின்றது. வடநாட்டில் மகதநாடாண்ட ஆந்திரசக்கரவர்த்திகளது வீழ்ச்சிக்குப்பின்,பிரபலம்பெற்று விளங்கிய குப்தவமிச சக்கரவர்த்திகளுள்ளே,சமுத்திரகுப்தன் என்பான் திக்விஜயஞ்செய்து,இப்பரதகண்ட முழுமையும் தன் வெற்றிப்புகழைப் பரப்பியவனென்பது,சாஸனமூலம் அறியப்படுகின்றது. இம்மன்னர்பெருமான் கி.பி. 326.ல் பட்டமெய்தியவன். இவனது தென்னாட்டுப் படையெழுச்சியில் ஜயிக்கப்பட்ட வேந்தருள்ளே கேரள தேசத்து மாந்தராஜா ஒருவனென்று கூறப்படுகின்றது.(Gupta Inscriptions. p. 12-13; Dr. Fleet"s Dynasties of the Kanarese Districts. p. 280; Indian Antiquary, Vol.XIV, p. 1891.} இம்மாந்தராஜா என்பவன் சங்கநூல்களிற் கூறப்படும் மாந்தர‌ன் என்பவனாகவே தோற்றுகின்றான். ஆனால் இப்பெயர் கொண்டவரிருவர் இருந்தனரென்பதும், அவருள் ஒருவன் செங்குட்டுவனுக்குச் சிறிதுமுன்னும், மற்றொருவன் அவனுக்குச் சிறிதுபின்னும் இருந்தவரென்பதும் முன்னமே குறிப்பிட்டோம்.+ (+ இந்நூல் பக். 18. ) இவருள் முன்னவனே, சமுத்திர குப்தனால் வெல்லப்பட்டவனாகக் கருதினும், அச்சேரன் 4-ம் நூற்றாண்டின் பிறபகுதியிலிருந்தவனாதல் வேண்டும். அம்மாந்தரஞ்சேரலைப் பாடிய பர‌ணரே செங்குட்டுவனையும் பாடியிருத்தலால், நம் சேரன் அம்மாந்தரனுக்குச் சிறிது பிற்பட்டவனென்பது பெறப்படும்;("மாந்தரஞ் சேரல்" என்ற பெயரைச் சேரனொருவனுக்கு இளங்கோவடிகள் கூறியிருப்பதாலும், அவன், செங்குட்டுவனுக்கு முற்பட்டவனாதல் புலப்படுகின்றது. (சிலப். 23. 84)) அஃதாவது, 5-ம் நூற்றாண்டின் முற்பாகமென்க. இது நிற்க. சமுத்திரகுப்தனது சாஸனத்துக் கண்ட மாந்தராஜா என்னும் பெயர் தமிழ் நூல்களிற் பயிலுதலறியாமையால், அவனை வேற்று நாட்டரசனாகச் சரித்திரநூலோர் சிலர் கருதுவாராயினர்.

இனி, சமுத்திரகுப்தன் சங்ககாலத்தவனான மாந்தரஞ்சேரலை வென்றவன் என்றதற்கேற்ப, மற்றோர் அரிய செய்தியும் சங்கநூல்களில் குறிப்பிடப்படுதல் கவனிக்கத்தக்கது.மேற்கூறியபடி பாடலியழிவைப்பற்றிப் பாடிய மாமூலனாரே,தம் காலத்தில், வடவாரிய வேந்தனொருவன் தென்னாடுநோக்கிப் படையெடுத்துப்போந்த பெருத்த திக்விஜய விஷயம் ஒன்றையும் இருமுறை குறிப்பிடுகின்றார். அவர் கூறுவன:-
"முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு
விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத்
தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த ...வரை" (அகம். 281).

"வெல்கொடித்-
துனைகா லன்ன புனைதேர்க் கோசர்
தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில்
இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியா மையிற் பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி யுருளிய குறைத்த...அறைவாய்"
எனக் காண்க.இவ்வடிகளிலே, மோரியர் திக்விஜயஞ் செய்துகொண்டு தென்னாடு நோக்கிப் படையெடுத்து வந்த காலத்தே,அவர்க்குப் பணியாமல் எதிர்த்துநின்ற மோகூர் அரசனுடன் அவர்கள் பொதியமலைப்பக்கத்தில் போர் புரிந்தனர் என்ற அரிய செய்தி கூறப்படுதல் காணலாம். இதனுட்கண்ட மோகூர் அரசனாவான்,பாண்டியன் சேனாபதியான பழையன்மாறன் என்பவன்; இவனே மோகூர் என வழங்கப்பட்டவன் என்பதும்,செங்குட்டுவனால் இவன் அழிக்கப்பட்ட செய்தியும் முன்னரே குறித்தோம்.* இதனால், மௌரியவரசரது தென்னாட்டு விஜயம், செங்குட்டுவனாற் போரில் வெல்லப்பட்ட பழையன் மாறன் காலத்து நிகழ்ந்ததென்பது தெளிவாகின்றது.இப்பெரு வேந்தர் வருகையே நம் சேரனைப்பாடிய பரணரால்--

"விண்பொரு நெடுவரை யியறேர் மோரியர்
பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த....வரை" எனவும்
(அகம்.69.)

கள்ளில் ஆத்திரையனார் என்ற புலவரால்--
"விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக விடைகழி" எனவும் (புறம்.175.)
------
இந்நூல். பக்-32, 33
பாராட்டப்பட்டிருத்தலும் அறியத்தக்கது. (மோரியரது தென்னாட்டுப் படையெழுச்சியில், அவரது சேனையுடன் தேர் செல்லுதற்குத் தடையாயிருந்த மலையொன்றைக் குடைந்து வழிசெய்துகொண்டு அவர் தெற்கே வந்தனரென்பது, மேற்கூறிய,மாமூலர், பரணர், ஆத்திரையனார் வாக்குக்களால் அறியலாம்.ஆயின், அங்ஙனம் வழியுண்டாக்கப்பட்ட மலை இன்னதென்பது இப்போது விளங்கவில்லை. இப்புலவர்பாடல்களால், புறநானூற்றுரைகாரர் கொண்ட "ஓரியர்"என்றபாடம் பொருத்தமாகாமை காண்க.) இனி, இம் மோரியர் என்பவர் யாவர்? என்பதே கேள்வியாம்.

மகதவேந்தராய்ப் பாடலீபுரத்திருந்தாண்ட மௌரிய சக்கரவர்த்திகளுள் ஆதி முதல்வனானவன், கி.மு. 321-ல் பட்டமெய்திய சந்திரகுப்தன் என்பான். இவன் காலத்து உற்பத்தியாகிய மௌரியவமிசம்,சுங்கவமிசத்தவனாய் கி.மு.184-ல் பட்டமெய்திய புஷ்யமித்திரனால் முடிவடைந்ததென்பது புராணங்களாலும் சரித்திரவாராய்ச்சியாலுந் தெளியப்பட்டது.இதற்குபின், மௌரியர் பிரஸ்தாபம் வடதேச வரலாறுகளிற் காண்டல் அருமையாம். ஆனால், தக்ஷிணத்திற் கொங்கணமுதலிய சில பிரதேசங்களில், மௌரியவமிசத்தவர் சிலர் கி.பி.6,7-ஆம் நூற்றாண்டுகளில் இருந்தனர் எனப்படுகின்றது. (V.A. Smith"s Early History of India. p.183) இவர்களைப்பற்றிய பெருமையாவது பிற வரலாறுகளாவது சரித்திர நூல்களால் விளங்கக்கூடிய நிலையில் இல்லை. இவ்விருவகை மௌரியருள்ளே,முன்னவர் மிகவும் முற்பட்டவராகவும், பின்னவர் மிகவும் பிற்காலத்தவராதலோடு பிரபலமற்றவராகவும் காணப்படுதலால்,அவ் விருவகையினருள் ஒருவரைப்பற்றியும் மாமூலனார் முதலியோர் கூறினரென்று கருதக்கூடவில்லை. ஆயினும்,மௌரியர் பிரஸ்தாபத்துக்கு இடமே கிடையாததும், ஆந்திர வமிசத்தரசர் பிரபலங் குன்றியதுமான கி.பி 4-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்,மௌரியமுதல்வனான சந்திரகுப்தனது பெயர்பூண்டு, அவன் தலைநகரான பாடலீபுரத்தில் பிரசித்த வேந்தனொருவன் தோன்றினனென்று சொல்லப்படுகின்றது. இவனையடுத்து மஹாவீரர்களாக சமுத்திர குப்தனும், அவன் மகன் சந்திரகுப்த-விக்ரமாதித்தனும் விளங்கினர். இவர்களைக் "குப்தவமிசத்தவர்" என்று பொதுவாகவே சாஸனம் குறிக்கின்றதாயினும், இன்ன மரபினரென்பதைத் தெளிவாக அறியவிடமில்லை. மேற்குறித்த புதிய சந்திரகுப்தனைத் தலைமையாகக் கொண்டு பாடலியையாண்ட குப்த மரபினரையே மாமூலனார் மோரியரென்று குறித்தனர்போலும். இதற்கேற்ப, அப்புலவர், இவர்களை "வம்ப மோரியர்" என்கின்றார். இதற்குப் "புதிய மோரியர்" என்பது பொருளாதலால், பழைய மோரியரை விலக்கற்கே இவ்வடை கொடுக்கப்பட்டதாகலாம். எங்ஙனமாயினும்,பிற்பட்ட சந்திரகுப்தன் மகன் சமுத்திரகுப்தன் என்பான், பரத கண்டமுழுதுந் திக்விஜயஞ்செய்து தன் வீரப்புகழை எங்கும் பரப்பிய சக்கரவர்த்தியாதலோடு, (இவன், சேரநாட்டை யடுத்திருந்த கடம்பவேந்தனான காகுஸ்தன் மகளை மனம்புரிந்தவனென்றுந் தெரிகிறது. (Mysore and Coorg. p. 23).) அவன் சேரவேந்தனான மாந்தரனை வென்றவனென்றுஞ் சிறப்பிக்கப்படுகின்றான். (இதனை முன்னரே விளக்கினேம்). ஆதலால், இச்சக்கரவர்த்தியின் தென்னாட்டு வருகையையே - "வடுகர் முன்னுற மோரியர் - தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு" என்னும் மாமூலனார் வாக்குக் குறித்ததாகல் வேண்டும். இக்குப்த சக்கரவர்த்திகட்கு வடுகர்சேனை கூறப்-பட்டிருப்பதும் பொருந்தும்;

என்னெனின்,சமுத்திரகுப்தனும் அவன் தந்தையும், ஆந்திரர் மகதநாட்டிற் றம்பழையநிலை தவறியபின்,அவர் ஸ்தானத்திற்றோன்றியவராதலால்,போர்வலிமை பெற்ற அவ்வாந்திரரை இவ் "வம்பமோரியர்" தம் படையாளரிற் சிறந்தவராகக் கொண்டிருத்தல் கூடியதேயாம்.வெல்லப்பட்ட குடிகளை இங்ஙனமமர்த்திக் கொள்ளுதல், இக்காலத்தரசர்க்கும் இயல்பேயன்றோ? இக்குப்தர் வருகையன்றி, பிற்காலத்துக் கொங்கண-மௌரியரைப் பற்றியதே மாமூலனார் விஷயமாயின், சேரநாட்டையடுத்துப் பிரபலமற்றிருந்த சிற்றரசரும்,சளுக்கியரால்* அடக்கப்பட்டவருமான அன்னோரை "வடுகர் முன்னுற மோரியர், தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு" என்றிங்ஙனம் திக்குவிசயப் பெருமைக்கேற்ற சொற்களாற் சிறப்பியார் என்க."தென்றிசை மாதிர முன்னிய வரவு"என்பதனால், அங்ஙனம்வந்த மோரியர், தென்னாட்டையடுத்த கொங்கணத்தவரன்றி,வடவாரியரே என்பதும் பெறப்படுதல் காணலாம்.
-----
*கீர்த்திவர்மன் என்ற சாளுக்கிய வேந்தன் இம்மௌரியரை வென்று தன்கீழ்க் கொண்டான் என்பர். (Mysore and coorg from the Inscriptions.p.62.)

இனிப்பாண்டியன் சேனாபதியான பழையன்மாறனுக்கும் மோரியர்க்கும் நிகழ்ந்ததாக மாமூலனார்கூறிய பொதியப்போர், சமுத்திரகுப்தனது தென்னாட்டுப் படையெழுச்சியில் அவன் பாண்டிநாட்டைத் தாக்கிய செய்தியைக் குறிக்கின்றது.முற்கூறியபடி, மாந்தரனை இக்குப்தவரசன் வென்றவனாதலின், அங்ஙனஞ் சேரனை அடக்கியவன் பாண்டிநாட்டையும் வெல்லக் கருதினன் போலும்.

இக்குப்தனால் வெல்லப்பட்ட தக்ஷிணதேசத்து ராஜாக்களுக்குள்ளே கேரளனைமட்டும் இவன் சாஸனங்குறித்து மற்றச்சோழபாண்டியரைக் குறிக்காமையால், அத்தமிழ்வேந்தர் இவனுடன் எதிர்த்துநின்று அடாங்காதிருந்தவாராதல் வேண்டும். பாண்டியன் சேனாவீரனான பழையன்மாறன் அங்ஙனமே அடங்கவில்லை யென்பது மாமூலனார் வாக்கே காட்டுதல் காணலாம். சமுத்திரகுப்தன் காலத்துச் சோழபாண்டியர் முறையே கரிகாலனும்,நெடுஞ்செழியன் அல்லது மாறன்வழுதி போன்றவருமாதல் வேண்டும். இவர்களுட் கரிகாலன் வச்சிரம்அவந்திமகத நாட்டரசரை வென்றவன் எனப்படுதலும்* நெடுஞ்செழியன் "ஆரியப்படைதந்த"வன் என்றும்† மாறன்வழுதி "வடபுல மன்னர் வாட அடல்குறித்த"வனென்றும்‡ கூறப்பட்டிருத்தலும் இச்சமுத்திரகுப்தன் போன்ற வடவரசர் விடுத்த சேனையை அக்காலத்துத் தமிழ்வேந்தர் அஞ்சாதெதிர்த்து நின்ற செய்தியைக் குறிப்பிக்கும்.
----------
* சிலப்பதிகாரம். 5-ம் காதை.99--104
† மதுரைக்காண்டத்தினிறுதிக் கட்டுரை. ‡ புறம்.52.

இச்சமுத்திரகுப்தன் கி.பி.375-வரை ஆட்சிபுரிந்தவன் எனப்படுகின்றான். எனவே, இவனால் வெல்லப்பட்ட மாந்தரன், முற்கூறியபடி செங்குட்டுவனுக்குச் சிறிது முற்
பட்டவனாகவும், பழையன்மாறன் அக்குட்டுவனுக்குச் சமகாலத்தவனாகவும் தெரிதலின்,நம் சரித்திரநாயகனான சேரன் காலமும் 4-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 5-ம் நூற்றாண்டின் முற்பகுதியாகக்கொள்ளல் பொருத்தமாம்.ஆயின், சமுத்திரகுப்தன் மகனான சந்திரகுப்த-விக்கிரமாதித்தன் (கி.பி. 375-418) அல்லது அவன் மகனான குமாரகுப்தன் (413-455) காலங்களும், நம் சேரர்பெருமான் காலமும் ஒன்றாகச் சொல்லலாம்.

இனித் தமிழ்ச்செய்திகளைக்கொண்டு,செங்குட்டுவன் வாழ்ந்த சங்ககாலத்தை நோக்குவோம். நக்கீரனாரைப் பற்றித் தமிழ்மக்களெல்லாம் நன்கறிவரன்றோ? இவர் கடைச்சங்கத்தை அலங்கரித்த பெரும்புலவெரெனக் கருதப்படுதலின்,அச்சங்கத்தைச் சார்ந்தவராய்ச் செங்குட்டுவனைப் பாடிய பரணர்சாத்தனார் முதலியோருக்கு, ஏறக்குறைய சமகாலத்தவரென்பது சொல்லாதே அமையும். (நம் சேரனுடன் பொருத பழையன்மாறன்,கிள்ளிவளவன் என்ற சோழனை (இந்நூல்.*வேறு பக்கம்) வெற்றிகொண்ட செய்தியை நக்கீரனார் பாடுதல் (அகம்-346) அப்புலவரும்நம் சேரனும் சமகாலத்தவெரன்பதைக் காட்டுகின்றது.) இந்நக்கீரர் இறையனார் களவியலுக்குப் பொருள் கண்டவராகக் கூறப்படுகின்றார். இப்போது வெளிவந்துள்ள அக்களவியலுரை இந்நக்கீரர் செய்ததாகவே வழக்குளதேனும்,அவரால் நேராக எழுதப்பட்டதன்றி அவரதாசிரியபரம்பரையின் கீழ் வழங்கியதென்பது அந்நூலின் உரைப்பாயிரத்தை ஆராய்ச்சி செய்யும்போது உணரப்படுகின்றது. அவ்வுரைப்பாயிரத்தில், நக்கீரனார் முதலாக, மாணாக்கர் பதின்மர்தலைமுறைகள் கூறப்பட்டு "இங்ஙனம் வருகின்றதுரை" என்று முடிந்திருத்தலால், நக்கீரனார்முதல் வாய்ப்பாடமாகச் சொல்லப்பட்டு வந்த அவ்வுரை,அவர்க்குப் பத்தாந் தலைமுறைக் காலத்தேதான் நூலாக எழுதப்பட்டதென்பது விளக்கமாமன்றோ? (இவ்வுரை வரலாற்றைப்பற்றி"இளம்பூரணவடிகள்" என்ற ஆராய்ச்சியினும் விரித்தெழுதியுள்ளேம்.(செந்தமிழ்.தொகுதி-4,பகுதி.7.)

இக்களவியலுரை எழுத்துருவடைந்தது எக்காலத்து? என்பது இனி ஆராயற்பாலது. அவ்வுரையெழுதியோராற் காட்டப்பட்ட உதாரணச் செய்யுள்களில் அரிகேசரி, பராங்குசன், நெடுமாறன் முதலிய பெயர்கள் தரித்த பாண்டியனொருவன்,சங்கமங்கை நெல்வேலி முதலிய இடங்களிற் போர் வென்றவனென்று விசேடமாகப் புகழப்படுகின்றான். சமீபத்துக்கண்ட சின்னமனூர் வேள்விக்குடித் (Epigraphical Annual Report. 1907-8. P.62. 68) தாமிரசாஸசனங்களிற் குறிக்கப்பட்ட பாண்டிய வமிசாவளியால், அப்போர்களிலே வெற்றிபெற்ற அரிகேசரி-பராங்குசன் என்பான்2 (இவன், கி.பி.760-ல் இருந்த நந்திபோதபல்லவமல்லனுடன் மேற்படி இடங்களிற் போர் நிகழ்த்தியவனென்பர்.) கி.பி.770-ல் விளங்கிய (இவன் காலம் கி.பி.770 என்பது யானைமலைச்சாஸனத்தால் அறிந்தது.(செந்தமிழ்.தொகுதி-4.பக்336.))ஜடிலவர்மன்-பராந்தகனுடைய தந்தையென்பது தெளிவாகின்றது.இதனால் தந்தை அரிகேசரியின் காலம் கி.பி.770-க்கு முற்பட்டதென்பது பெறப்படும். படவே,களவியுலரை இயற்றப்பட்ட காலம் அவ் எட்டா நூற்றாண்டுக்கும் பிற்பட்டதாகுமென்பது விளங்குகின்றது. அன்றி,உரையெழுதியவர்,தாம் காட்டும் உதாரணச்செய்யுளிற் கண்ட பாண்டியனது காலம் அவ் எட்டாநூற்றாண்டுக்கும் பிற்பட்டதாகுமென்பது விளங்குகின்றது.அன்றி,உரையெழுதியவர், தாம் காட்டும் உதாரணச்செய்யுளிற் கண்ட பாண்டியனது காலத்தவரே (கி.பி.760) என்றாலும், அவரிலிருந்து 10-தலைமுறை முற்பட்ட நக்கீரனார்க்கு ஐந்தா நூற்றாண்டே உரியகாலமாதல் வேண்டும். எவ்வாறெனின், பரம்பரை வமிசங்களைத் தலைமுறை ஒன்றுக்கு 30-வருஷங் கொண்டளக்கும் முறைப்படி, (பதிற்றுப்பத்திற் கண்ட சேரவரசர் எண்மருக்கு, அவரவர் பதிகங்கூறும் காலத்தைக்கொண்டு நோக்குமிடத்தும், தலைமுறையொன்றுக்கு 30-வருஷங்கொள்ளுதல், பழையதமிழ்மக்களுக்கு அதிகமாகாதென்பது விளங்குகின்றது.)

அக்களவியலுரைக்காலமாகிய 8-ம் நூற்றாண்டைவைத்து அதனிலிருந்து10-தலைமுறை முற்பட்ட நக்கீரர்காலத்தைக் காணுமிடத்து,அப்புலவர்பெருமான் உத்தேசம் 5-ம் நூற்றாண்டிலிருந்தவராதல் பெறப்படும்.அஃதாவது,--(கி.பி. 470-ல் வாழ்ந்தவர் என்பதாம். ஆகவே, அந்நக்கீரனார் காலத்தை ஏறக்குறைய ஒட்டியிருந்தவனாகத் தெரியும் செங்குட்டுவன்முதலியோர்க்கும் அந்நூற்றாண்டின் முற்பகுதியைக் கொள்ளத்தடையில்லை என்க.இவ்வரையறை, களவியலுரையெழுதியவர் தாங்காட்டிய பாண்டியனுக்குச் சமகாலத்தவாராயிற் பொருந்துமல்லது,பிற்பட்டவராயின் நக்கீரர் காலம் இன்னும் குறைவுபடுமென உணர்க. எங்ஙனமாயினும்,5-ம் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்தை நக்கீரனார்க்குக் கூறுதல் ஏற்புடைத்தன்றென்பதை இச்செய்தி விளக்குமென்பது ஒருதலையாகும்.

சேரன்-செங்குட்டுவனது வடயாத்திரையில் அவனுக்குப்பேருதவி புரிந்தவர் கன்னர் என்போர்; இளங்கோவடிகள் இவரைக் கூறுமிடங்களிலெல்லாம் கன்னரெனப் பன்மையாக்குவதோடு,நூற்றுவர்கன்னர் ஆரியவரசர் ஐயிருபதின்மர் எனத் தொகைப்படுத்துவதாலும், அவர் ஒரு கூட்டத்தவராயிருந்தனர் என்பது விளங்குகின்றது. இவரையே அவ்வடிகள் மாளுவவேந்தர் என்றும் குறிப்பிடுதல் முன்னரே விளக்கப்பட்டது. இவற்றால் மாளுவதேசத்தை (Malwa) பலபகுதிகளாகப் பிரித்தாண்ட அரசர் கூட்டத்தவராகவே
---------
*ஸ்ரீமந்-து.அ.கோபிநாதராயவர்களும் இவ்வபிப்பிராயமே கொள்வர்.(செந்தமிழ்.தொகுதி-6.பக்58-59) இந்நூல் பக்-108

இவரைக்கொள்ளுதல் பொருந்துமென்றுதோற்றுகின்றது. சமுத்திரகுப்தனால் மாளுவதேசம் வெல்லப்பட்ட காலத்தில் அந்நாட்டின் பெரும்பாகம் ஒருவரன்றிப் பலகூட்டத்தாரால் ஆளப்பட்டுவந்ததென்றும்,அவன் மகன் சந்திரகுப்தனால் அத்தேசம் குப்த-ஏகாதிபத்யத்துள் ஒன்றாக்கப்பட்டதென்றும் சரித்திர நூலோர்* கூறுவர். சேரன்-செங்குட்டுவன் 5-ம் நூற்றாண்டினனாயின், அவனட்பரசராய் மாளுவ நாட்டை ஆண்டுவந்த கன்னரென்ற கூட்டத்தார் மேற்கூறிய குப்தர் காலத்துச் சிற்றரசர்களே என்று கருதல் தகும்.

இனி, தமிழறிஞர் சிலர், இளங்கோவடிகள் குறித்த "நூற்றுவர் கன்னர்" என்பது ஆந்திரவரசர் பட்டப்பெயரான "சாதகர்ணி" என்பதன் தமிழ்மொழிபெயர்ப்பென்றும், அதனால் "நூற்றுவர்கன்னர்" என்பது செங்குட்டுவன் காலத்து ஆந்திரவரசனான ஒருவனையே குறிக்க வேண்டுமென்றுங் கருதுவர். இளங்கோவடிகள் வாக்கை நோக்குமிடத்து,கன்னன், கன்னி என ஒருமையாற் கூறாது கன்னர்† எனப்
பன்மையாகவும், கங்கைக்கரையிலிருந்த செங்குட்டுவன் அக்கன்னரை அவருடைய வளந்தங்கிய நாட்டிற்கனுப்பியதைக் குறிக்கும்போது, "ஆரியவரசர் ஐயிரு பதின்மரைச்-சீரியல் நாட்டுச் செல்கென் றேவி" என்றும்‡, "மாளுவ வேந்தர்" என்றும் ஒருகூட்டத்தாராகவும் பாடப்பட்டிருத்தலால் "நூற்றுவர் கன்னர்" என்றதொடர் அரசனொருவனைக் குறிப்பதாகப் புலப்படவில்லை.
----------
* V.A. Smith"s Early History of India. p.271,276
† சிலப்.26, 176. ‡சிலப். 27, 176-7

ஒருகால், சாதகர்ணி என்பதன் மொழிபெயர்ப்பாகவே அத்தொடரமைந்ததாயினும், அஃது ஆந்திரவரசரின் குலப்பொதுப் பெயராதலால்,5-ம் நூற்றாண்டினனான செங்குட்டுவன்காலத்து ஆந்திர வரசனொருவனுக்கு அது வழங்கியிருத்தலுங் கூடும்;அதனால்,2-அல்லது 3-ம் நூற்றாண்டுச் சாதகர்ணியே நம் சேரன்காலத்தவனாதல் வேண்டும் என்னும் நியதியில்லை என்க.

சாஸனபரிசோதகரும் வேறு அறிஞர்சிலரும்,கடைச் சங்கத்துக்கு எட்டாம் நூற்றாண்டையே ஏற்புடைய காலமாக்கி யெழுதுவர்.இங்ஙனமாயின், அஃது, அப்பர் சம்பந்தர் முதலிய நாயன்மார்களையொட்டிய காலமாதல் வேண்டும்.இந்நாயன்மார் அக்காலத்தவரென்பது,சாஸன பண்டிதருட்படச் சரித்திரவறிஞர் பலராலும் முன்னரே துணியப்பட்டதொன்றாம். திருமாலடியாராகிய ஆழ்வார்களிற் சிலரும் இக்காலத்தவரே யாவர். இவ்வடியார்களுக்குரிய காலவிசேடத்தையே சங்கத்தரசர் புலவர்க்குங் கூறுவதாயின், அதன்முன் எத்தனையோ ஆக்ஷேபங்கள் எதிர்ப்படுதல் ஒருதலையாம். மேற்கூறிய நாயன்மார்க்கு நெடுங்காலத்துக்கு முன்பே கடைச்சங்கம் நடைபெற்றதென்பது,சங்ககாலத்தரசனான சோழன்-கோச்செங்கணான் பூர்வஜென்மத்திற் சிலந்தியாகப்பிறந்ததையும்* நக்கீரனார் சரிதப்பகுதியான
"தருமிக்குப் பொற்கிழியளித்த" வரலாற்றையும் † அவ்வடியார்கள் பாடுதலால் நன்குவிளங்குவதன்றோ? இன்னும் கி.பி. 770-ல் விளங்கிய ஜடிலவர்மன்-பராந்தகன் முன்னோராகப் பாண்டியரெண்மர் சின்னமனூர் வேள்விக்குடிச் சாஸனங்களிற் கூறப்படுகின்றனர்.
-------------
* தேவாரம்.திருப்பாசூர்ப்பதிகம்.விண்ணாகி-6 (அப்பர்.)
† ௸. தேவாரம்.திருப்புத்தூர்ப்பதிகம்.புரிந்தமரர்-3 (அப்பர்.)

இம்முன்னோருள், கடைச்சங்கமிருந்தவராக முன்னூல்களுட்கண்ட பிரபலபாண்டியர் பலருள் ஒருவரேனும் காணப்பட்டிலர். இதனாலும் 8-ஆம் நூற்றாண்டுக்குப் பல தலைமுறைகள் முற்பட்டவர் சங்ககாலத்தரசர்கள் என்பது வெளிப்படையன்றோ? இன்னும் இதனை விரிப்பிற் பெருகும்; சுருங்கவுரைக்குமிடத்து, இலக்கியப் பிரமாணங்களும் சாஸனவாதரவுகளும் அக்கொள்கைக்கு முற்றும் மாறானவை-யென்றே சொல்லலாம்.

இனி, செங்குட்டுவன்காலத்தவனாகச் சிலப்பதிகாரங் குறிக்கும், "இலங்கைக்கயவாகு" என்ற அரசன்பெயர், மகா வமிசத்துள் 2-ம் நூற்றாண்டிலிருந்த ஒருவனுக்குக் காணப்
படுகிறது; ஆயினும், அக்கஜபாகுவே நம் சேரன்காலத்தவன் என்பதற்குப் பெயரொற்றுமை ஒன்றைத்தவிர, உட்பிரமாணமொன்றும்* அந்நூலாற் பெறப்படவில்லை என்பது சரித்திர அறிஞர் நன்கறிவர். இங்ஙனம் பெயரொப் பொன்றையே பற்றி ஒரு முடிவுபடுத்தல் எங்ஙனம் இயலும்? இதனால், மேற்கூறிய எங்கொள்கைக்கமைந்த பிரமாணபலங்களை நோக்குமிடத்து, அக்கயவாகுபற்றிய கொள்கை உறுதி பெற்றதாகக் கருதக்கூடவில்லை. கயவாகு என்றபெயர், 5-ம் நூற்
றாண்டின் முற்பகுதியுள் இலங்கையாண்ட ஒருவனுக்கு
----------------
* மகாவமிசமானது, கி.மு. 501 முதல் கி.பி. 301 வரை இருந்த இலங்கையரசர் வரலாறுகளையே கூறுவதாதலால், 5-ம் நூற்றாண்டினனாகிய நம் சேரன்காலத்திருந்த இலங்கைவேந்தன் செய்தியை அந்நூலிற் காண்டல் இயலாதாம். கி.பி. 301-க்குப் பிற்பட்ட இலங்கையரசர் வரலாறுகள், 1262, 1295-ம் வருஷங்களில் (ஏறக்குறைய மகாவமிசம் செய்யப்பட்டதற்கு ஆயிரமாண்டுக்குப்பின்) எழுதப்பட்டதென்பர். (Sketches of Ceylon History by Sir- P. Arunachalam. p. 29-30.)

முன்புவழங்கிப் பின்பு மறக்கப்பட்டதுபோலும். இவ்வைந்தாம் சதாப்தத்தில். ததியன்(Dathiya) பிதியன்(Pithiya) முதலிய தமிழரசரறுவர் இலங்கையை வென்றவரெனப்-படுகின்றனர்.* இவருள், ததியன் என்பவன், தலையாலங்கானந் தந்த நெடுஞ்செழியனால் வெல்லப்பட்டவனாக அகநானூற்றால் (39) அறியப்படும் திதியன்† என்பவன்போலும்; இவ்வாறாயின், இவன் ஏறக்குறைய நம்சேரன் காலத்தவனேயாதலால், மேற்கண்ட கொள்கைக்கு இதுவும் ஓராதாரம் ஆகும். இது
வரை கூறிப்போந்தவற்றால், சேரன்-செங்குட்டுவனும் அவனையொட்டியிருந்த அரசரும் புலவரும் 5-ம் நூற்றாண்டில்--அஃதாவது இற்றைக்கு 1450-வருஷங்கட்குமுன்--விளங்கியவரென்ற கொள்கையையே, பற்பல காரணங்களும் வற்புறுத்துதல் கண்டுகொள்க.
-----------
*Ibid,See-List of the Kings and Suluvamsa
†இவன், பொதியின்மலையும் (அகம்.321) அறந்தை என்னும் ஊரும் (அகம்.196) உடையவன்; அன்னி என்பவனைப் போரில் அழித்தவன் (அகம் 45,126,145); அவ்வன்னிமகன் மிஞிலியால் அழிவுற்றவன் (அகம்.196,262). இனி, ததியன் என்ற பெயரும் பழையன்மாறன் என்ற பெயரும் கி.மு. முதனூற்றாண்டில் இலங்கைவென்ற தமிழரசர் சிலருக்கும் மகாவமிசத்திற் காணப்படுகின்றன. இவர்கள், செங்குட்டுவன் காலத்திருந்த திதியன் பழையன் இவர்களுக்கு முன்னோராதல் வேண்டும். இவர்களை நம் சேரனோடு ஒட்டிக்கூறுவதில் தடைகள் பலவுள.