செங்குட்டுவன் குணாதிசயங்கள்

சேரன்-செங்குட்டுவன் இந்நிலவுலகில் ஐம்பத்தைந்து வருஷம் வீற்றிருந்தவனென்பது, பதிற்றுப்பத்துள் இவனைப்பற்றிய பதிகவாக்கியத்தால் அறியப்படுகின்றது. இவன் தந்தை நெடுஞ்சேரலாதன் தன் மக்களது இளமைக்காலத்து இறந்தவனென்று தெரிதலால், 20-ம் வயதிற் செங்குட்டுவன் பட்டமெய்தியவனாயினும்,குறைந்தது 35-வருஷம் இவன் ஆட்சிபுரிந்தவனாதல் வேண்டும். இவ்வரசன் இரண்டாம் முறையாகச் சென்ற வடயாத்திரையில் 32-மாதங்கள் செலவிட்டனனென்றும்,(சிலப்.27.149.) அவ் யாத்திரை முடித்துக்கொண்டு வஞ்சிமாநகரம் புகுந்தபோது இவனுக்கு 50-ம் வயது நடந்ததென்றும்(சிலப்.28.130.) இளங்கோவடிகள் தெளிவாகக் கூறுகின்றார்.எனவே, செங்குட்டுவன், 47-ம் வயதாரம்பத்தே அவ்வட யாத்திரை தொடங்கினனென்று தெளியலாகும். இவனது 47-ம் வயதிற்குச் சிலகாலத்துக்கு முன்புதான், தன் மைத்துனச்சோழற்கு அனுகூலமாகச் சோணாட்டில் இவன் போர் நிகழ்த்தியது. போரின் விவரம் முன்னரே விளக்கப்பட்டது.செங்குட்டுவனது வடயாத்திரைக்குச் சிறிதுமுன்பே இவன் மைத்துனச்சோழனைப் பட்டத்தில் நிறுவியசெயல் நிகழ்ந்ததென்பது, கங்கைக்கரைப்பாடியில், மாடலனை இவன் சந்தித்தபோது, அச்சோழனது க்ஷேமத்தைப்பற்றி உசாவிப்போந்த குறிப்பால் புலப்படும். (சிலப்.27.159-172.) இச்சேரன் தன் பெரிய யாத்திரையை முடித்துத் திரும்பியபின்னர், மாடல மறையவனது உபதேசமாட்சியால் பரகதிவழிகளையே பற்றியவனாய்,5-வருஷம் அமைதியுடன் ஆட்சிபுரிந்து பின் "காலனென்னும் கண்ணிலி யுய்ப்ப-மேலோருலகம் எய்தினன்"
இதுகாறும் எழுதிவந்த சரித்திரத்தால் தமிழ்நாட்டின் மகோந்நதநிலைமைக்குச் செங்குட்டுவனது ஆட்சிக்காலமே சிறந்த இலக்காகவிருந்ததென்பது வெள்ளிடைமலைபோல் விளக்கமாகும். பண்டைத் தமிழிலக்கியங்களைச் சோதித்து வருமிடத்து, நம் சேரர்பெருமான் போன்ற அறிவுந் திருவும் பெற்ற அருந்திறலரசர் தென்னாட்டில் அதிகமிருந்திலர் என்பது புலப்படத் தடையில்லை. பழைய தமிழ் வேந்தருள்ளே, இவன்றந்தை சேரலாதனும் சோழன் கரிகாற்பெருவளத்தானுந் தவிர, வேறெவரும் இவனுக்கிணை கூறத் தக்கவரல்லர்; அவ்விருவரும் தங்கள் வீரப்புகழை நாவலந்தீவ முழுதும் விரித்து நின்றவர்களாயினும், தமிழ்வேந்தர்க்கே அப்பெருமையுரியதென்பதை வடவேந்தர்கள் நன்கறியச் செய்து, அவர்கள் விரித்தபுகழை நிலைநிறுத்திய வீரசிகாமணி நம் சேரர்பெருமானே யாவன். பிற்காலத்திலே இவனுக்கிணையாகச் சொல்லத்தக்க தமிழ்வேந்தன் முதலாம் இராஜேந்திரசோழன் ஒருவனே எனலாம்.
சேரன்-செங்குட்டுவனது உத்தமகுணங்களுள்ளே இவனது தெய்வபக்தியை முதலில் வைத்துப் பாராட்டல்தகும்.சிவபிரான் திருமால் முதலிய தெய்வங்களிடத்தும் முனிவர்(சிலப்.26.93-97.)அந்தணர் முதலிய பெரியோர்கள்பாலும் இவன் வைத்திருந்த பக்தியும், மதாந்தரங்களில் இவனுக்கிருந்த பொது நோக்கமும் முன்னரே அறியப்பட்டன. இவையன்றி, வீரபத்தினிகளாக விளங்கியவரிடம் இவன் கொண்டிருந்த பெருமதிப்பும் பிரேமையும் ஈண்டும் விரித்தெழுதவேண்டுமோ?கண்ணகிக் கடவுளின் வணக்கம் தமிழகத்தினும் இலங்கை முதலிய தேசாந்தரங்களினும் பரவியிருந்ததற்குக் காரணமானவன் இச்சேரனேயன்றோ?
நம் சேரனுக்கிருந்த உயர்குணங்களுள்ளே அடுத்துப் புகழத்தக்கது,இவனது ஏகதார விரதமேயாம். இவனுடைய தர்மபத்தினியாகவும் பட்டமகிஷியாகவும் விளங்கிய இளங்கோவேண்மாள் என்பவளைப்பற்றி முன்னரே கூறினோம். (இந்நூல்.வேறு பக்)வேளிர்குலக் கொழுந்தாகிய இத்தேவி, அறிவு திரு அழகு அமைதி முதலிய உயர் குணங்களெல்லாம் ஒருங்கு வாய்ந்திருந்ததோடு, தன் நாயகனுக்கு உற்ற சமயங்களில் உறுதி கூறும் ஆற்றலுடையவளாகவும் விளங்கினள். செங்குட்டுவன் பத்தினிக்கடவுளைச் சிறப்பித்ததற்கும், வீரப்புகழை இமயம்வரை பரப்பியதற்கும் இவ்வுத்தமிகூறிய சமயோசிதமான ஒருசொல்லன்றோ காரணமாயிற்று?(சிலப்.25.110-114.) தன் கணவனைப் பிரியநேர்ந்த 32-மாதங்கள்வரை ஊணுமுறக்கமும் கொள்ளாது நாளொப்பனையுஞ் செய்யாது இப்பெருந்தேவி இருந்த பிரிவாற்றா நிலையையும், அவன் ஜயசீலனாகத் திரும்புகின்ற தறிந்ததும் இவளடைந்த பெருமகிழ்ச்சியையும் அடிகள் புகழுந்திறம் பலமுறைபடித்து ஆனந்திக்கத்தக்கது. இத்தகைய ஒப்புயர்வற்ற கற்புடையாட்டியை மனைவியாகப்பெற்றிருந்த நம் சேரர்பெருந்தகைக்குச் சீராமமூர்த்தியன்றி வேறியாவர் சிறந்த உவமையாவார்?
சேரன்-செங்குட்டுவனது இயற்கைக்குணங்கள் பலவற்றுள்ளே அவனது வீரத்தன்மையே மேம்பட்டு விளங்கியிருந்ததென்பது, இவன் சகோதரரும் பரணரும் அக்குணத்தையே அதிகமாகப் புகழ்வதால் தெரிகின்றது. இவனுக்குக் காமவேட்கையினும் போர்வேட்கையே மிக்கிருந்தது என்று புகழ்வர், பிற்கூறிய அந்தணராகிய புலவர்.(பதிற்றுப். 50.)இவ்வேந்தனது அந்தியகாலத்துக்கு ஐந்துவருஷம் முன்வரை பகைவரையடக்குவதும் நாட்டைப் பெருகச்செய்வதுமே இவன் மேற்கொண்டிருந்த பெருங்கருமமாக இருந்தன.மாடலமறையோன் ஒருகாற் செங்குட்டுவனுக்கு உபதேசிக்கப்புக்கவிடத்தில், அவனது இக்குணத்தையே சுட்டி,
"வையங் காவல்பூண்டநின் னல்யாண்டு
ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும்
அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோ யாயினை." (சிலப்.28.129-132.)
எனக் கூறுதல் காண்க. இதனால், தன்னாயுட்காலத்தின் பெரும்பகுதியைப் போர்புரிவதிலே செலவிட்டவன் செங்குட்டுவன் என்பது வெளியாகும். பரணரும் இவன் வீரத்திறத்தையே வியந்து, "அனைய பண்பிற் றானைமன்னீர், இனியா ருளரோ முன்னுமில்லை" எனக் கூறினர்.(பதிற்றுப்.45.) தமிழரது வீரத்திற் செங்குட்டுவனுக்கு மதிப்பும் அபிமானமும் அதிகமாகவே யிருந்தன.
தன்னையும் மற்றைத் தமிழரசரையும் வீரக்குறைகூறி இகழ்ந்தார் என்பதுபற்றியன்றோ, இமயச் சாரலிலுள்ள குயிலாலுவம்(குயிலாலுவம்,என்பது இமயமலையின் ஒரு பகுதியாய், உத்தரகோசலத்தைச் சார்ந்த ஒரு தலமாகத் தெரிகிறது. இங்குச் சிவபிரானுக்கு ஒரு கோயிலும் இருந்ததென்பது, "இமயச் சிமயத் திருங்குயிலாலுவத்து -- உமையொரு பாகத் தொருவனை வணங்கி" என்னும் இளங்கோவடிகள் வாக்கால் அறியலாம். (சிலப். 28. 102-3) புத்தரது பூர்வ அவதாரஸ்தலங்களுள் ஒன்றாகச் சொல்லப்படும் குயிலாலபுரம் என்பது இதுபோலும். (மணிமே. புத்தசரித். பக்கம். 2 கீழ்க்குறிப்பு) என்னும் போர்க்களத்தில், இவன் வடவரசர் பலரை
"அமையா வாழ்க்கை யரசர் வாய்மொழி
நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்கஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியுந் தரூஉம்." (சிலப். 26. 10-12)
"காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்முடன் கூடி
அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனச்
சீற்றங் கொண்டிச் சேனை செல்வது" (சிலப். 26. 159-62)
என இவனது தமிழபிமானத்தை இளங்கோவடிகளே எடுத்துரைத்தல் காண்க. செங்குட்டுவனது பெரும்புகழ் தமிழகத்தின் மட்டுமின்றி,வடநாடெங்கும் பரவியிருந்ததென்பது, இவனது யாத்திரையில்,நட்பரசராகிய நூற்றுவர் கன்னர் இவனுக்குச் செய்துபோந்த உபசாரங்களாலும், பிறவற்றாலும் தெளிவாகும்.
ஆயின், அசோகன் சமுத்திரகுப்தன் முதலிய வடவேந்தரது தென்னாட்டு விஜயங்களை விளக்கும் சாஸனங்கள் தஷிணத்துக் காணப்படுதல்போலச் செங்குட்டுவனது வடநாட்டு வெற்றி பற்றிய சாஸனமொன்றுமே அத்தேசத்தில் இதுகாறும் காணப்படவில்லை. அதனால், இவனது வடதேசத்துப் படையெடுப்பில் நவீனர் சிலர் ஐயுறுவர். ஆயினும், இவனுடன்பிறந்த சகோதரர் மட்டுமின்றி இவன் காலத்துப் புலவர்களிருவரும்,(பதிற்றுப்.43:) அவ்வடவெற்றியை விரிவாகவும் தெளிவாகவுங் கூறியிருத்தலால், அதனை எளிதிற் றள்ளிவிடுதல் எங்ஙனம் இயலும்? அன்றியும் சேரநாட்டை அடுத்திருந்தவரான கங்கவமிசத்தரசர்கள் இற்றைக்கு 800-வருஷங்கட்கு முன்னர், இமயம்வரை படையெடுத்துச்சென்று நேபாளதேசத்தைச் செயித்து அதனைப் பலதலைமுறை ஆண்டுவந்தனர் எனச் சாஸன மூலம் அறியப்படுகின்றது. (It is curious that a Karnataka dynasty was set up even in distant Nepal, apparently in 1097, which was presumably of Ganga origin. The founder, Nanya Deva (perhaps? Nanniya Deva), came from the South. He was succeeded by Ganga Deva and four others, the last of whom removed the capital to Khatmandu, where the line came to an end. - Ins. from Nepal, by Dr. G. Buhler -- (Lewis Rice"s Mysore and Coorg from the Inscriptions p.48)) ஆயின், அவரினும் பெருமை வாய்ந்தவராய்ப் பக்கத்திருந்த சேரவரசர் வடநாட்டில் தம்வீரப்புகழ் பரப்பினர் என்றுகூறும் இலக்கியப் பிரமாணங்களைமட்டும் கற்பனையாகக் கருதுவதென்னோ? பிற்காலத்துத் தமிழ்வேந்தருள் முதலாம் இராஜேந்திரசோழன் கங்கையும் கடாரமும் (பர்மா) வென்றுகொண்டானென்ற சரிதம் நம்மவரால் முற்றும் நம்பப்பட்டுவருகின்றது;
ஆயின், பழைய சேரனொருவன் பெருவீரனாய் அக்காரியத்தையே செய்திருத்தலும் கூடியதன்றோ? செங்குட்டுவனது பிரஸ்தாபத்தைப் பற்றிய தென்னாட்டுச் சாஸனம் ஒன்றுமே இதுவரை காணப்படவில்லை;அதுபற்றி அத்தகைய வேந்தனொருவனே இருந்தவனல்லன் என்று கூறிவிடலாகுமோ? கடைச்சங்கநூல்களிற் கண்ட அரசரைப்பற்றிய சாஸனக்குறிப்புகளே இல்லை என்றிருந்தகாலத்து,முதுகுடுமிப்பெருவழுதி, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கரிகாலன், கோச்செங்கணான் போன்றவரைப்பற்றிய சாஸனக்குறிப்புக்கள் சிறிது சிறிதாகச் சமீபத்திற்றான் காணப்பட்டு வருகின்றன. அதுபோலவே, செங்குட்டுவனது அருமை பெருமைகளும் நாளடைவில் வெளிப்படுதல் கூடியதே. ஆதலால்,சாஸனசாக்ஷிக ளில்லாமைபற்றி இலக்கியச் செய்திகளையெல்லாம் புறக்கணித்து விடுதல் கூடாதென்பதே எங்கருத்து.செங்குட்டுவன் வடநாட்டிற் படையெடுத்துச் சென்றதற்குக் காரணம் "தமிழ்வேந்தர்கள் தம் முத்திரைகளை இமயத்திற் பதித்தவர்" என்ற பெருமையை வடவரசர்சிலர் இகழ்ந்து கூறியதனால், அப்பெருமை தங்கட்குண்டென்பதை மெய்ப்பிப்பதற்காகவே என்பது இளங்கோவடிகள் வாக்கால் நெடுக உணர்ந்தோம். அங்ஙனம் தமிழராற்றலை வடவர்க்கு மெய்ப்பித்த நம் சேரர் பெருமானது அருஞ்செயலைச் சாஸன ஆதாரமின்மைபற்றிச் சிலர் எளிதாக்கிவிடுவாராயின், அஃது அவ் வடவேந்தர் செயலினும் அதிசயிக்கத் தக்கதேயன்றோ!
செங்குட்டுவன், வீரமிகுதியோடு மதிநுட்பமிக்கவனாகவும் இருந்தான். அறிஞர்பலருடன் அனவளாவி அறிய வேண்டுவனவற்றை நன்கறிந்தவன் இவனென்பது, "புரையோர் தம்மோடு பொருந்தவுணர்ந்த-அரசரேறே(*சிலப்.28.123-4) எனவும், "புலவரையிறந்தோய்" (*சிலப்.28.174) எனவும், தத்துவ ஞானியாகிய மாடலமறையோனே நம் சேரனை அழைத்தலால் அறியலாம். மதுரையிற் கோவலனைக் கொல்வித்து, அத்தவற்றை யறிந்ததும் பாண்டியன் தன்னுயிர் நீத்த செய்தியைச் சாத்தனார் வாயாற் செங்குட்டுவன் முதன் முதற்கேட்டபோது அவ்வரசனது செய்திக்கு மிகவும் வருந்தி,
"எம்மொ ரன்ன வேந்தர்க் கிற்றெனச்
செம்மையி னிகந்தசொற் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்ந்தமை யுறுக வீங்கென
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது;
மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்
பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்லை" (சிலப்.25.95-104)
என்று கூறிப்போந்த வார்த்தைகள், உண்மையில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளன? இளங்கோவடிகள் பேரியாற்றங்கரையில் தம் தமையனுடனிருந்து அவன் வாய்ப்படக் கேட்டெழுதிய அழகிய வசனங்களன்றோ இவை? புலவர்பெருமக்களிடம் இவன் வைத்திருந்த மதிப்பும் அன்பும் முற்கூறிய "இருபெரும்புலவர்" என்ற அதிகாரத்தால் விளங்கற்பாலன.
நம் சேரவேந்தனது செங்கோற்பெருமையும் மதிக்கத்தக்கதே. தன்னாட்டுக் குடிகளைப் பெரிதும் அபிமானித்து ஆட்சிபுரிவதிற் பெருநோக்-குடையவன் இவனென்பது, ஒருசமயத்து இவன் செய்த சபதத்தில் "வறிது மீளுமென் வாய்வா ளாகிற் - குடிநடுக் குறூஉங் கோலே னாகுக"(சிலப்.26.15,18)என்று கூறியிருப்பதொன்றானே தெளிவாகும். குடிகளும் அங்ஙனமே இவன்பாற் பேரன்பு பூண்டிருந்த செய்தி முன்னரே குறிப்பிட்டோம். இவ்வேந்தனது சகோதர அபிமானத்தையும் ஈண்டுக் குறித்தல் தகும். தன் சகோதரரான இளங்கோவடிகள் முற்றத்துறந்த முனிவரராயிருப்பினும்,அவசியமான காலத்தன்றி அவ்வடிகளை இவ்வரசன் விட்டு நீங்கியவனல்லன்.(சிலப்25,5 அரும்பதவுரை. பக்.66) அவ்வாறே, "ராஜருஷி"யாகிய அடிகளும் தன் தமையனிடம் பிறவிக்குற்ற அன்பைப் பெற்றிருந்தவரேயாவர். ஆனால், அதுபற்றி, மூவேந்தர்க்கும் பொதுவாக ஒரு காப்பியஞ்செய்யத் தொடங்கிய தாம், நடுநிலை பிறழ,தம் தமையனை அதிகமாகப் புனைந்துகூறினவராகத் தோற்றவில்லை. அடியார்க்கு நல்லாரும் இவ்வடிகளது பொது நோக்கை அடிக்கடி புகழ்தலுங் காணலாம்.(சிலப்18-ம் காதை. "முந்நீரினுள்புக்கு" உரை) ஆனால், வஞ்சிக்காண்ட முழுதும், செங்குட்டுவன் புகழையே அவ்வடிகள் கூறியதென்னெனின்,கண்ணகிபொருட்டு அரியபெரிய செயல்களைப்புரிந்து சிறப்பித்த பெருமை செங்குட்டுவனதேயாதலின், எடுத்துக்கொண்ட காப்பியநிலைக்கேற்ப அவனைப் பாராட்டுதலும் இன்றியமையாத தாயிற்றென அறிக.
இவ்வளவு பெருமையுடன், நம் சேரர்பெருமான் சிறிது முன்கோபமுடையவனாகவுந் தோற்றுகிறான். ஆயினும், பெரியோர்கூறும் நன்மொழிகளை ஏற்றுக்கொள்வதில் இவன் முந்துகின்ற இயல்புடையவனாயிருந்தனன்.
இவ்விஷயம் சோழபாண்டியரிடம் இவன் கோபங்கொள்ள நேர்ந்தபோது,மாடலமறையோன் கூறிய சாந்தவசனங்களை விரைந்தேற்றுக் கோபமடங்கியதும், தன்னால் வென்று சிறைபிடிக்கப்பட்ட கனகவிசையரைச் சிறைநீக்கியதோடு, அவர்களைச் சிறைப்படுத்திய வில்லவன்கோதை என்ற படைத்தலைவனைக் கொண்டே அன்னோரை உபசரிக்க ஏவியதும், பின்னர் அவ்வந்தணன் கூறிய தர்ம மார்க்கங்களையே அநுஷ்டித்ததுமாகிய வரலாறுகளால் விளங்கும். "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்-நின்றது மன்னவன் கோல்" என்றபடி நம் வேந்தன் பிராமண தர்மங்களைத் தன்னாட்டில் மட்டுமன்றித் தான் சென்றவிடங்களிலும் ஆதரித்துக் காத்துவந்தவன்.சிலப்.26.247-250.) இக்காலைச் சேரவரசர்க்கும் இஃது இயல்பேயன்றோ?
இனி, நம் சேரர்பெருந்தகை, குட்டுவன் எனத் தனித்தும் வழங்கப்படுவன்.(சிலப்.26:61,247.) இதனால், இவனுக்குரிய அடைசொல் இவனது நிறம்பற்றி வழங்கப்பட்டதென்பது பெறப்படும்.இவன் சிறியதந்தைக்கும் குட்டுவன் என்பது பெயராயினும் "பல்யானைச் செல்கழு" என்பது அவனுக்கு விசேடணமாகும். [குட்டுவன் - குட்டநாட்டுக்குரியோன்.] இங்ஙனம் செங்குட்டுவன் என்றதற்கேற்பப் பிறரெல்லாம் கண்டுமகிழும் கட்டழகும் உடையவனாகவிருந்தான்.(சிலப்.26.73.) இவற்றுடன் பலமும் பருமனும் கொண்டவனாகவும் காணப்படுகின்றான். கங்கைக்கரைப்பாடியில் மாடலனுக்குச் செங்குட்டுவன் தன் நிறையளவு பொன்னை நிறுத்துத் தானஞ் செய்தானென்பதை எழுதுமிடத்தில் இளங்கோடிகள்,
"பெருமகன் மறையோற் பேணி யாங்கவற்கு
ஆடகப் பெருநிறை ஐயைந் திரட்டி
தோடார் போந்தை வேலோன் தன்னிறை
மாடல மறையோன் கொள்கென் றீத்தாங்கு" (சிலப்.27.173 -76)
எனக் கூறுகின்றார். இதனுள்ளே, இவனது நிறையளவாகக் குறிக்கப்பட்ட"ஆடகப்பெருநிறை ஐயைந்திரட்டி" என்பதற்கு,அரும்பதவுரையாளர் "ஐம்பது துலாம் பாரம் பொன்" என்று கூறுவர். ஒரு துலாம் என்பது 100-பலமாகும்;(பிங்கலந்தை. சூத்திரம் - 2254 - 55.)ஆகவே, 50 - துலாத்துக்கு5000 - பலமாகின்றன.ஒரு பலமென்பது 3 -ரூபா எடையாகவும், 6 -ரூபா எடையாகவும் இக்காலத்தார் பலபடியாக வழங்குதலால், பழைய காலத்துப் பலவளவு இதுவென்று துணியக்கூடவில்லை. எனினும்,குறைந்தமுறையிலே, தற்காலத்து 3 - ரூபா எடைப் பிரமாணத்தையே கொண்டு பார்ப்போமானால், 40-ரூபா நிறைகொண்ட பௌண்டுக் கணக்கில் 375 - பவுண்டு செங்குட்டுவனது நிறையாகவேண்டும். இது சிறிது மிகுதிபோலத் தோற்றுமாயினும்,பழையகாலத்து மக்களுக்குள்ளே பெருவீரனாக விளங்கிய வேந்தர் பெருந்தகை யொருவனுக்கு மேற்குறித்த நிறையளவு அதிகமாகாதென்றே தெளியலாம். ஒருகால், மூன்றுரூபா நிறைக்குங் குறைந்ததாகப் பழையபலவளவு இருந்திருத்தல் கூடுமாயின், அஃது இக்காலவியல்புக்கும் ஒத்ததாகலாம்.
எங்ஙனமேனும், தற்காலத்தும் 300 பவுண்டு நிறையளவுள்ள மக்களை நாம் காணக்கூடியதாகவே இருத்தலால், இளங்கோவடிகள் தம் தமையனுக்குக் குறித்த 50-துலாமளவு, புனைந்துரையன்றிப் பொருத்த முடையதாகுமென்பதில் ஐயமில்லை. இது நிற்க. சேரன்-செங்குட்டுவனது50-ம் வயதில் "நாற்பதும் வந்தது நரைத்தூதும் வந்தது" என்ற முன்னோர் மொழிப்படி, அவன் நரை முதிர்ந்தவனாகவே இருந்தனன்; "திருஞெமி ரகலத்துச் செங்கோல் வேந்தே-நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை"(சிலப்.28.157-158.)என மாடலன் இவனைநோக்கிக் கூறுதலால் இதனையறிக.சேரவரசர் பலருள்ளே, செங்குட்டுவனும் இவன்றந்தை சேரலாதனும் அதிககாலம் ஆட்சிபுரிந்தவர்கள் என்பது, பதிற்றுப்பத்தின் பதிகங்களாற் புலப்படுகின்றது.