சைக்கிள் ஓட்டும் சாமி

சைக்கிளில் வேகமாகச் செல்கிறான். சில நாட்களாக அவனைப் பார்க்க முடியாத காதலி, அவனைப் பார்த்து விடுகிறாள். அவன் சைக்கிளிலிருந்து இறங்குகிறான். அவள் அவனை நோக்கி தன்னை மறக்கவில்லையென்று சத்தியம் செய்ய வேண்டுகிறாள். அவனும் அப்படியே சத்தியம் செய்யத் தயாராக இருப்பதாகச் சொல்லுகிறான். அவள் வேட்டி தாண்டி சத்தியம் செய்யச் சொல்லுகிறான். அவனோ மீனாட்சி கோவிலில் வேட்டி தாண்டி சத்தியம் செய்து தருவதாக சொல்லுகிறான்.
பெண் : சாஞ்ச நடையழகா !
சைக்கிள் ஓட்டும் சாமி
ஒய்யார சேக்குகளாம்
ஒலையுதில்ல சைக்கிளிலே
சட்ட மேலே சட்டப் போட்டு
சரிகைச் சட்ட மேல போட்டு
சைக்கிளிலே போறவரே
சாயாதிரும் பள்ளங்கண்டு
வட்டமிடும் பொட்டுகளாம்
வாசமிடும் தைலங்களாம்
சாமி கிராப்புகளாம்
சாயந்திரம் நான் மடிப்பேன்
அரக்கு லேஞ்சுக் காரா
பறக்க விட்டேன் சண்டாளா
மறக்கல என்று சொல்லி
வலக்கையுமே தந்திடுவாய்
ஆண் : வலக்கையும் தந்திருவேன்
வருண சத்தியம் செஞ்சிருவேன்
மீனாட்சி கோவிலிலே
வேட்டிப் போட்டுத் தாண்டித் தாரேன்.
வட்டார வழக்கு : சட்ட-சட்டை ; சாயாதிரும்-சாய்ந்து விடாதேயும் ; செஞ்சிடுவேன்-செய்து விடுவேன்.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி, நெல்லை மாவட்டம்.
--------------