சைவ சமய வரலாறு

bookmark

சிந்து வெளியில்
சிவநெறி அல்லது சைவ சமயம் என்பதை நினைக்கும்போது சிவநெறிக்கே உரிய லிங்க வழிபாடு நினைவிற்கு வருகின்றது. இந்தியாவிலும் எகிப்திலும் மால்ட்டா முதலிய தீவுகளிலும் சிறியனவும் பெரியனவுமான சிவலிங்கங்கள் பல புதை பொருள் ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன. இந்தியாவில் மிகப்பழைய நாகரிக நகரங்கள் என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படும் மொஹெஞ்சொதரோ, ஹரப்பா முதலிய இடங்களில் பல லிங்கங்கள் கிடைத்துள்ளன. ஹரப்பாவில் மட்டும் 600-க்கு மேற்பட்ட சிறு லிங்கங்கள் கிடைத்துள்ளன. பண்டை மக்கள் இச்சிறிய லிங்கங்களைத் தாயித்துகள் போலக் கழுத்திலோ கையிலோ கட்டியுருந்திருக்கலாம்.

சிந்து வெளியில் கிடைத்த ஒரு முத்திரையில், மூன்று முகங்களைக்கொண்ட மனித உருவம் ஒன்று யோகத்தில் அமர்ந்திருப்பது போன்று காணப் படுகின்றது. அதன் மார்பில் முக்கோண வடிவத்தில் அமைந்த பதக்கங்கள் காணப்படுகின்றன. அவ்வுருவத்தின் வலப்புறம் யானையும் புலியும், இடப்புறம் எருதும் காண்டா மிருகமும் நிற்கின்றன. யோகியின் பீடத்திற்கு அடியில் இரண்டு மான்கள் இருக்கின்றன. சிவபிரான் யானைத் தோலைப் போர்த்தவர், புலித்தோலை அரையில் கட்டியவர், எருதினை ஊர்தியாகக் கொண்டவர், மானை ஏந்தியவர் என்ற நூற்கருத்துக்களை நோக்க, யோகியின் உருவம் சிவனைக் குறிப்பதாகலாம் என்று கூறுதல் பொருத்தமாகும். அந்த யோகியின் தலைமீது வளைந்த எருமைக் கொம்புகள் இருக்கின்றன. இந்திய அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சித் தலைவரான சர் ஜான் மார்ஷல், "இவ்வுருவம் சிவனைக் குறிப்பது" என்று கூறியுள்ளார். யோகியை அடுத்து விலங்குகள் இருத்தல், சிவன்-பசுபதி என்பதைக் குறிக்கின்றது. மூன்று தலைகள் முன்பு தெரிவதால் பின்பறம் இரண்டு தலைகள் இருத்தல் கூடும் என்று அறிஞர் கூறுகின்றனர்.

சிந்து வெளியில் விலங்கு வணக்கமும் காணப்படுகின்றது. நந்தி வணக்கம் சிறப்பிடம் பெற்றதென்று கூறலாம். ஒரு கோவில் முன் நந்தி நிற்பது ஒரு முத்திரையில் குறிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளி மக்கள் சிறந்த வணிகர்கள். அவர்களுக்கு எருது மிகவும் பயன்பட்டது. அதனால் எருது வணக்கத்திற்குரிய பொருளாக மாறியிருக்கலாம். பின்னர் நாளடைவில் எருது வணக்கம் லிங்க வணக்கத்தோடு இணைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இவை அனைத்தையும் ஒன்றுபடுத்திப் பார்த்த சர் ஜான் மார்ஷல் என்ற அறிஞர் "சிந்து வெளியிற் கிடைத்த புதுமைகளுள் முதலிடம் பெறத்தக்கது சைவத்தின் பழமையேயாகும். அது மாக்கல் காலம் அல்லது அதனினும் முற்பட்ட காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது; இன்றளவும் வழக்கில் உள்ள மிகப்பழைய சமயமாக விளங்குகிறது" என்று வியப்பும் மகிழ்வும் பொங்கக் கூறியுள்ளார்.*
-----

சங்க காலத்தில் சிவன் 
சங்க காலத்தில் சிவன்-ஆலமர் செல்வன், முக்கண்ணன், பெருந்தேவன் முதலிய பல பெயர்களால் வழிபடப்பட்டான். சங்க காலக் கடவுளர் வரிசையில் சிவனே முதலிடம் பெற்று விளங்கினான் என்பதைச் சிலப்பதிகாரம், மணிமேகலை மதுரைக் காஞ்சி இவற்றால் அறியலாம். முருக வணக்கமும் கொற்றவை வழிபாடும் இருந்தன.

சங்க காலத்தை அடுத்த முதற் பல்லவர் காலத்தில் கோப்பெருஞ்சோழன் ஏறத்தாழ எண்பது சிவன் கோவில்களைக் கட்டினான் என்று தேவாரம் கூறுகிறது.

பக்தி நெறி 
வட இந்தியாவில் புத்தர் காலம் முதல் குப்தர் ஆட்சி வரையில் பௌத்த சமயமே செல்வாக்குடையதாயிருந்தது. குப்தர்கள் சைவ வைணவ மதங்களைப் போற்றி வளர்த்தனர். ஆதலால் அக்காலத்தில், அதுகாறும் பல நூற்றாண்டுகளாகக் கூறப்பட்டுவந்த செவிவழிச் செய்திகளெல்லாம் புராணங்களாக வடமொழியில் எழுதப்பட்டன. சாதி வேறுபாடுகள் வற்புறுத்தப்பட்டன. பொது மக்களுடைய உள்ளங்களைக் கவருவதற்காக ஆடல் பாடல்களைக் கொண்ட பக்திநெறி ஏற்பட்டது. இந்தப் பக்தி நெறி தென்னாட்டிலும் பரவத்தொடங்கியது. பாசுபதம், லகுலீச பாசுபதம், காபாலிகம், மாவிரதம், சக்தி வணக்கம், குமரனை வழிபடும் கௌமாரம் முதலியன தென்னாட்டில் பரவின. இவையனைத்தும் சைவ சமயத்தின் உட்பிரிவுகளாகக் கொள்ளப்பட்டன. ஏறத்தாழக் கி.பி. 400-500 கால எல்லைக்குள் செய்யப்பட்டதாகக் கருதப்படும் திருமூலர் திருமந்திரத்திலும் இவை இடம் பெற்றன.
"விரிசடை அந்தணர் விரதிகள் பாசுபதர் காபாலிகர்
தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே"
என்று கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரும் இவர்களைக் குறிப்பிட்டுள்ளார். அறுபத்து மூன்று நாயன்மாருள் இப்பலவகைச் சைவரும் காணப்படுகின்றனர்.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டுமுதல் 9-ஆம் நூற்றாண்டு வரை இப் பக்திநெறி தமிழகத்தில் பெருவெள்ளமாகப் பரவியது. கோவில்கள் மிகப் பலவாகத் தோன்றின. ஆடலும் பாடலும் மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. திகம்பர சமணமும் பௌத்தமும் நாட்டில் செல்வாக்கை இழந்தன. சைவரைப் பின்பற்றியே வைணவ ஆழ்வார்களும் பக்திநெறியைப் பரப்பினர். பல்லவ வேந்தர்கள் சைவத்தையும் வைணவத்தையும் தம் இரு கண்களாகக் கருதி வளர்த்துவந்தனர். அழிந்து விடக்கூடிய மண், மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம், இவற்றால் ஆகிய கோவில்களைக் கட்டாமல், பல்லவ மன்னர் மலைச்சரிவுகளில் குடைவரைக் கோவில்களை அமைத்தார்கள்; பின்பு பாறைகளையே கோவில்களாக அமைத்தார்கள்.

அவை ஒற்றைக் கல் கோவில்கள் எனப்படும். அவற்றின் பின்னரே செங்கற்களைப் போலக் கருங்கற்களை உடைத்து அவற்றைக் கொண்டு சுவர் எழுப்பிக் கோவில் கட்டத் தொடங்கினர். இங்ஙனம் அமைக்கப்பட்ட முதற்கோவிலே காஞ்சி கயிலாசநாதர் கோவில். பல்லவ மன்னர் இவ்வாறு கோவில்கள் அமைப்பதிலும் சிற்பங்களையும் ஓவியங்களையும் அமைப்பதிலும் கோவில் ஆட்சியிலும் கருத்தைச் செலுத்தினமையால், சைவ வைணவ சமயங்கள் நன்கு வளர்ச்சி பெறலாயின. நாயன்மார்கள் நூற்றுக்கணக்கான சிவன்கோவில்களுக்குச் சென்று பதிகங்கள் பாடினர். பண்ணோடு பாடப்பட்ட அப்பாடல்கள் மக்கள் உள்ளங்களை இழுத்தன. அக்காலத்தில் சைவத்தில் சாதிவேறுபாடுகள் கவனிக்கப்படவில்லை.
"ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார்
சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே"

என்னும் அப்பர் வாக்கை நோக்குக. இடையிடையே அடியாரிடம் சாதி வேறுபாட்டுணர்ச்சி காணப்பட்டது; ஆனால் அஃது அவ்வப்பொழுது மாற்றப்பட்டது என்பதும் நாயன்மார் வரலாறுகளால் இனிதுணரப்படும். சாதியற்ற சமுதாயம் தான் ஒன்று பட்டு வாழ இயலும். சமண சமயத்திலும் பௌத்த சமயத்திலும் சாதிகள் பேசப்படுவதில்லை. ஆதலால் அவற்றை ஒழிக்கப் புறப்பட்ட சைவமும் வைணவமும் சாதி வேறுபாடுகளை முதலில் கவனிக்கவில்லை. குருக்கள் மரபில் பிறந்த சுந்தரர் உருத்திர கணிகையான பரவையாரையும், வேளாளப் பெண்மணியாகிய சங்கிலியாரையும் மணந்துகொண்டமையே இவ்வுண்மையை விளக்கப் போதிய சான்றாகும். 

பௌத்தசமணங்கள் செல்வாக்கிழந்து சைவம் மட்டும் தனியரசுசெலுத்திய பிற்காலத்தில், சுந்தரர் செய்துகொண்ட திருமணங்கள் இரண்டும் முன் வினைப் பயனால் நேர்ந்தவை என்று கதை கட்டி விடப்பட்டது. கயிலாயத்தில் சுந்தரர்மீது காதல் கொண்ட இரு மாதரும் நிலவுலகில் சங்கிலியாராகவும் பரவையாராகவும் பிறந்தனர் என்பது அக்கதை. அங்ஙனம் பிறந்தவர்கள் சுந்தரர் தோன்றிய குருக்கள் மரபிலேயே பிறந்திருக்கலாம் அல்லவா? அவர்கள் ஏன் கணிகையர் மரபிலும் வேளாளர் மரபிலும் பிறத்தல் வேண்டும்? இவ் வினாக்களுக்குத் தக்க விடை கிடைத்தலரிது. மேலும், காதலைச் சுவைக்கப் பிறந்தவராகக் கூறப் பட்டவர் காதலைப் போதிய அளவு சுவைக்கவில்லை என்று பெரிய புராணமே கூறுகிறது.

சோழர் ஆட்சியில் 
சோழர் காலத்தில் கோவில்கள் பெருகின; வழிபாட்டு முறைகள் பெருகின; வழிவழிச் சைவரான சோழ மன்னர் எல்லாக் கோவில்களிலும் திருமுறை ஓதுவார்களை நியமிக்க ஏற்பாடு செய்தனர். இராச ராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் பண்பட்ட ஓதுவார் 48 பேர் அமர்த்தப்பட்டனர். ஆடல் பாடல்களுக்காக நானூறு பதியிலார் அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு கோவிலிலும் விழாக்கள் நடைபெறறன; சைவ சமய நூல்கள் படித்துப் பொதுமக்களுக்கு விளக்கப் பட்டன. சைவ சித்தாந்த சாத்திரங்களான சிவஞான போதம் முதலிய நூல்கள் தோன்றின.

கோவில்களை அடுத்து மடங்கள் இருந்து சமயக் கல்வியை வளர்த்து வந்தன. அம்மடங்களில் யாத்திரிகர் உண்பிக்கப்பட்டனர். பெரிய கோவில்களில் சரசுவதி பண்டாரம் என்ற நூல் நிலையங்கள் இருந்தன. பெரிய கோவில்களில் மருத்துவ மனைகளும் அமைந்திருந்தன. அவற்றில் அறுவை மருத்துவரும் (Surgeon), நோய் மருத்துவரும் (Physician), தாதிமாரும் (Nurses) இருந்தனர். மருந்து வகைகளைக் கொண்டுவருவோரும், அவைகளைப் பக்குவம் செய்வோரும் இருந்தனர். கோவில் மண்டபங்களில் இசை, நடனம், நாடகம் முதலிய கலைகள் வளர்க்கப்பட்டன. சிற்ப ஓவியக் கலைகள் கோவில்களில் வளர்ச்சி பெற்றன. கோவிலுக்குள்ளேயே ஊராட்சி மன்றமும் நடை பெற்றது. ஊரில் பஞ்சம் ஏற்பட்டு நாட்டு மக்கள் நலியும்பொழுது கோவிலில் உள்ள பொன் வெள்ளி நகைகளும் பாத்திரங்களும் உருக்கி ஊரார்க்குக் கடனாகத் தரப்பட்டது என்று ஆலங்குடிக் கல்வெட்டுக் கூறுகின்றது. இத்தகைய முறைகளால் கோவில் அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்ற நிலைக்களனாய் இருந்து வந்தது. அரசன் முதல் ஆண்டி ஈறாக அனைவரும் கோவிலைத் தம் உயிராக மதித்தனர். கோவில் ஊர் நடுவிலே அமைந்து மக்களைத் தன்வயப்படுத்திவந்தது. 

சமயத்தின் உயிர்நாடி ஆட்டம்
இவ்வாறு சைவ சமயம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. ஆனால் சைவத்துள் சாதி வேறுபாடுகள் தோன்றி வளர்ந்து வயிரம் பாய்ந்துவிட்டன. சமுதாயத்தில் பல சாதிகளுக்குப் பல உரிமைகள் மறுக்கப்பட்டன. செருப்பு அணிந்துகொண்டு தெருவில் நடக்கச் சில சாதிகளுக்கு உரிமையில்லை. மாடிவீடு கட்டிக்கொள்ளச் சில சாதிகளுக்கு உரிமையில்லை. சில சாதியர் இசவ்வளவு தூரத்தின் நின்று பேசவேண்டும், சிலர் இவ்வளவு தூரத்தில் ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற வரையறைகள் ஏற்பட்டன. இக்கொடுமைகள் எல்லாம் பல கோவில் கல்வெட்டுக்களில் காணலாம். இக்கொடுமைகளால் சைவ சமுதாயம் வலிமை குன்றியது. மன ஒற்றுமை அகன்றது.

இந்தப் பரிதாப நிலையில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக்-காபூர் படையெடுப்புத் தென்னாட்டில் நடந்தது. புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில் கருவறை மட்டும் தப்பியது. எஞ்சிய கோபுரங்களும் திருச்சுற்றுக்களும் தரைமட்டமாக்கப்பட்டன. பெருங்கோவில்களில் இருந்த நகைகளும் பிறவும் கொண்டு செல்லப்பட்டன. நாடாண்ட பாண்டியன், மக்களை நட்டாற்றில் விட்டு ஓடிவிட்டான். சாதிக்கொடுமையால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் தன்மான உணர்வுடன் படையெடுத்தவரை எதிர்த்து நிற்க முடியவில்லை. பல கோவில்கள் தாக்கப்பட்டன. விக்கிரகங்களின் கைகால்கள் ஒடிக்கப்பட்டன. ஊர்கள் கொள்ளையடிக்கப்பட்டன. 

சைவரும் வைணவரும் படையெடுத்தவர்க்குப் பணிவு காட்டினர். "போர்" என்றவுடன் துள்ளிக்குதித்த சங்ககாலத் தமிழன் - சாதி அறியாத தமிழன். மாலிக்காபூர் படையெடுத்தபோது வாழ்ந்த தமிழன் - சாதிக் கட்டுப்பாட்டால் நசுக்கப்பட்ட தமிழன். மூடக் கொள்கைகளாலும் சாதி வெறியினாலும் சமய வெறியினாலும் சைவ சமயம் தன் ஆற்றலை இழந்து எதிரிக்குப் பணிந்தது. சைவ சமய வரலாற்றில் இது இரங்கத்தக்கப் பகுதியாகும். பல்லவர் காலச் சைவர்கள் சமணரைக் கழுவேற்றினர்; பிற சமயத்தாரைக் கொடுமைப்படுத்தினர். சோழர்காலச் சைவர் வைணவரோடு ஒன்றுபட்டு வாழ மறுத்தனர்; இராமாநுசரைச் சோழ நாட்டிலிருந்தே விரட்டினர். இக்கொடுமைகளின் விளைவைத்தான் அயலார் படையெடுப்பால் சைவர்கள் அநுபவித்தனர். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பது சைவ வரலாற்றில் உண்மையாகிவிட்டது.

சமய மாற்றம் 
சைவ சமயத்தில் சாதி என்னும் பெயரால் இழிவு படுத்தப்பட்ட மக்கள், முஸ்லிம் ஆட்சி நிலையானதும், இந்து சமயத்தில் தங்களுக்கு ஏற்பட்ட இழிவினால், சாதி அறியாத இஸ்லாத்தைத் தழுவினர்; வேறு சிலர் தங்களுக்குக் கல்வியும் மருத்துவ உதவியும் மனித உரிமைகளையும் உதவிய கிறித்துவ சமயத்தைச் சார்ந்தனர். கிறித்துவ சமயமும் சாதியறியாச் சமயம். `சைவர்கள்` என்ற பெயருடன் பாமரராயும் விலங்குகளாயும் வாழ்க்கை நடத்திய தமிழர்கள், கிறித்துவ சமயத்தைத் தழுவிக் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறலாயினர். தாம் செய்துவந்த கொடுமைகளால் தமது சமுதாயம் வலுவிழந்தது. மக்கள் மதம் மாறினர் என்பன அறிந்தும், சமுதாயச் சீரழிவிற்கும் சமயச் சீரழிவுக்கும் தாம் காட்டிய சாதிவேறுபாடுகளே காரணம் என்பதை அறிந்தும், அக்காலத்து உயர் மக்கள் சுயநல வெறியினால் சாதிகளை ஒழிக்க முன் வரவில்லை. "சமயத்தில் நாங்கள் தலையிட மாட்டோம்" என்ற ஆங்கிலேயர் வாக்குறுதி இவ்வுயர்ந்தவர் கொடுமைகளுக்கு அரண் செய்வது போல் அமைந்தது. மேன்மேலும் சாதிவெறி தலை தூக்கியது. கோவிலின் கருவறையில் இன்ன வகுப்பார் இருந்து வழிபடலாம், கருவறைக்கு வெளியே இன்ன வகுப்பார் நின்று வழிபடலாம், கோவிலுக்குள்ளே இன்ன வகுப்பார் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் வளர்ந்தன.

முற்போக்கு
ஆங்கிலக்கல்வி நாடெங்கும் பரவத் தொடங்கியது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் சாதிகள் இல்லை என்பதைப் படித்தவர் உணர்ந்தனர்; சாதிகள் இறைவனால் உண்டாக்கப்பட்டவை என்று தமக்கு மேலோர் கூறிவந்த கூற்று முழுப் பொய் என்பதை உணர்ந்தனர். அவ்வுணர்ச்சியே நமது சமுதாய மறுமலர்ச்சிக்கு அடிப்படை. நாடெங்கும் இவ்வுணர்ச்சி வளரத் தலைப்பட்டது. காந்தியடிகள் சாதி ஒழிப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனித உரிமையை அளித்தார், அவர்களுக்கும் கோவில் நுழைவு கிடைத்தது. இங்ஙனம் பெரியோர் பலர் முயற்சியின் பயனாக, இன்று கோவிலுள் சாதி வேறுபாடு காண்பது என்பது நிறுத்தப்பட்டது. ஆயினும் சமயம் சீர்திருந்தியதா?

சமயத்தில் பாசி 
இடித்தல், மழை பெய்தல் முதலிய இயற்கை நிகழ்ச்சிகளைத் தெய்வங்களின் செயல்களாகப் பண்டை மக்கள் நினைத்தனர்; தம் மனம் போனவாறு அவற்றிற்குக் கதைகள் கட்டினர். அக்கதைகள் நாடளடைவில் சமயத்திற்குரிய கதைகளாக மாறிவிட்டன. இந்நாட்டவர் எகிப்து, சுமேரியா முதலிய நாடுகளோடு கடல் வாணிகத்தில் தொடர்பு கொண்ட காரணத்தால், அவ்வந்நாட்டுக் கதைகள் சில இங்கும் பரவ வழியேற்பட்டது. இந்நாட்டுக் கதைகள் அந்நாடுகளிற் பரவ வழி ஏற்பட்டது. இதனால் சில கதைகள் பெயரளவில் வேறுபட்டும் பொருளளவில் ஒன்றுபட்டும் இம்மூன்று நாடுகளிலும் காணப்படுகின்றன. இத்தகைய பல கதைகள் இதிகாசங்களிலும் புராணங்களிலும் இடம் பெற்றுவிட்டன. இவற்றின் பயனாக, "அன்பே சிவம்" என்பதை அடிப்படையாகக் கொண்ட சைவ சமயம், பௌராணிக சமயமாக மாறிவிட்டது. இம்மாறுதல் நாயன்மார் காலத்தில் தொடங்கியது; ஆயினும் காலப்போக்கில் பல கதைகள் சமயத்துறையில் சேர்க்கப்பட்டு, நவக்கிரக வழிபாடு போன்ற புதிய தெய்வ வழிபாடுகள் இணைக்கப்பட்டு, பௌராணிக சமயம் வளர்ச்சி பெற்றது. பாமர மக்கள் மிகுந்துள்ள இந்நாட்டில் இக்கதைகளே சமயத்தின் உயிர்நாடியாகக் கருதப் படுகின்றன.
----------

இவற்றைச் சொல்லிப் பிழைப்பவரும் பலராகி விட்டனர். இதனால் "அன்பே சிவம்" என்ற கொள்கை பாதாளத்திற் புதைக்கப்பட்டு, அதன் மீது அறிவுக்குப் பொருத்தமற்ற கதைகள் கட்டப்பட்டன. இக்கேட்டினால், பெரும்பாலான சைவ மக்கள் திருநீறு அணிவதோடு அமைந்தனர். தீய பழக்கவழக்கங்களைக் கைவிட்டிலர். சமய வரலாறும் அறிந்திலர். திருநீற்றை அணிந்து கொண்டே அடாத செய்கைகளைச் செய்யும் சைவர்கள் பெருகிவிட்டனர். தம் வீடுகளில் ஒரு மணி நேரமுதல் மூன்று மணி நேரம் சிவபூஜை செய்யும் சிலர் இருக்கின்றனர். இவர்களில் பலர் ஒழுக்கமற்றவர்களாகவும் தீய வழிகளில் பொருளீட்டுபவராகவும், ஆனால் கோவில் திருப்பணி செய்பவர்களாகவும் காண்கின்றனர். சமயப் போர்வையில் பலர் செய்கின்ற தீய செயல்களுக்கு அளவில்லை. ஒரு சைவன் பிற சைவனிடம் அன்பு காட்ட வேண்டுமென்பதையும் மனிதத் தன்மையோடு நடந்துகொள்ளவேண்டும் என்பதையுமே சைவர் மறந்துவிட்டனர். கல்விச் செருக்காலும் செல்வச் செருக்காலும் பதவிச் செருக்காலும் சைவர் பலர் தம் சமயத்தைச் சேர்ந்த பிறருடன் பழகுவதும் இல்லை; மதிப்பதும் இல்லை. இத்தகைய பல காரணங்களால் சமுதாயத்தில் சைவர் ஒற்றுமையின்றி வலிமை குன்றிவிட்டனர்.

சைவ மடங்கள் 
சைவமடங்கள் சைவ சமயத்தை வளர்ப்பதற்கென்றே ஏற்பட்டவை. நாடாண்ட மன்னரும் பிறரும் இந்நன்னோக்கத்திற்கே செல்வத்தையும் பல வேலி நிலங்களையும் இம்மடங்களுக்கு உதவினர்; பல கோவில்களை இம்மடங்களின் ஆட்சியில் விட்டு வைத்தனர்; அறிவிலும் ஒழுக்கத்திலும் சமய சாத்திரக் கல்வியிலும் முதிர்ந்த பெருமக்களை மடத்துத் தலைவர்களாக வைத்தனர். பிற்காலத்தில் இந் நிலை மாறியது. மடாதிபதி ஜமீனை ஆட்சி புரியும் ஜமீன்தாரைப் போல மடத்துக்குரிய வரவு செலவுகளிலும் வழக்குகளிலும் பெரும் பொழுதைப் போக்கத் தொடங்கினர். ஒரு சிலர் ஒழுக்கம் தவறியும் நடக்கத்தலைப்பட்டனர். எனவே, கால வேறுபாட்டாலும் மடங்களின் நிலை வேறுபாட்டாலும் அரசியல் மாற்றத்தாலும் சைவசமய பிரச்சாரம் இல்லாமையாலும் பொதுமக்களுக்கும் சைவ மடங்களுக்கும் தொடர்பு ஏற்படவில்லை. பொது மக்களுக்குப் பொருள் விளங்காத நிலையில் சில நூல்களை அச்சிட்டு வெளிப்படுத்தலும், படித்த ஒரு சிலருக்குப் பொன்னாடை போர்த்தலும், ஆண்டு விழாக்களில் சமயச் சொற்பொழிவு செய்வோருக்குச் சிறிது பொருள் கொடுப்பதுமே மடங்கள் செய்யும் சைவப் பணிகளாக இருந்துவந்தன. இன்று இந்த நிலை மாறி, இவற்றோடு பொது மக்களுககுப் பள்ளிக்கூடம் வைத்தல், மருத்துவ நிலையம் அமைத்தல், திருக்குறள் போன்ற அரிய நூல்களை வெளியிடுதல் முதலிய தொண்டுகளில் மடங்கள் இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது,

மடங்கள் செய்ய வேண்டுவன 
1.பொது மக்களுக்குப் புரியும் வகையில்- எளிய வகையில் சைவசமய வரலாறு, சைவ சமயக் கொள்கைகள், சைவம் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ள தன்மை, திருக்கோவில்களின் சிறப்பு, அவற்றை மக்கள் பயன்படுத்தும் முறை, சைவ சித்தாந்தத்தின் தெளிவான கருத்து- இவற்றைச் சிறுசிறு நூல்களாக வெளியிட்டுப் பொது மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

2. சைவ சமயத்தில் சாதி வேறுபாடு இல்லை என்பதை வற்புறுத்திச் சட்டம் கொண்டுவரப்படல் வேண்டும். எல்லோரும் ஒரே பந்தியில் உட்கார்ந்து உணவு கொள்ளும் முறை கையாளப்படுதல் வேண்டும். சாதி ஒழிப்புச் சட்டம் வரும் வரையிற் சைவர்க்குள் கலப்புமணம் வளர்தல் வேண்டும்.

3. பல சிற்றூர்களில் தொடக்க நிலைப்பள்ளிகளைத் தோற்றுவித்துச் சைவப் பிள்ளைகட்கு இலவசக் கல்வி அளிக்கவேண்டும். அப்பள்ளிகளில் சிறுவர்க்கு சமய அறிவு கற்பிக்கப்படல் வேண்டும். அச்சிற்றூர்களில் மருத்துவ மனைகள், படிப்பகங்கள், நூல் நிலையங்கள் முதலியவற்றை அமைத்துப் பொதுமக்களுக்கும், மடத்துக்கும் தொடர்பு உண்டாக்குதல் வேண்டும். ஏழாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து இந்நாட்டுக்கு வந்த கிறுத்துவப் பாதிரிமார்கள் இவற்றைச் செய்தமையாற்றான் தங்கள் சமயத்தை வளர்த்தனர் என்ற உண்மையை நாம் உணர்தல் வேண்டும்.

4. ஆங்கில அறிவும், தமிழ் அறிவும் பெற்ற சமயப் பிரசாகரை நியமித்து ஒவ்வொரு மடமும் மக்களிடைச் சமயப்பிரசாரம் செய்வித்தல்வேண்டும். வீணானவையும் வாழ்க்கைக்குப் பயன் படாதனவுமான கதைகளைச் சொல்லி மக்களை மேலும் மூடர்களாக்காமல் சமய நெறியில் வாழ வழி அமைத்துத் தருதல் வேண்டும். 

5. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல" என்ற முறை பற்றி பொதுமக்களுக்குச் சிறிதும் பயன்தராத விழாக்களையும் ஆரவாரங்களையும் ஒழித்து, அவற்றிற்குச் செலவாகும் பணத்தை ஏழைச் சைவ மக்களுக்கு உதவி, அவர்களைச் சிவநெறியில் வாழ்விக்க வழி செய்தல் வேண்டும். மக்களை வாழ்விக்கத்தகும் முறையில் "சிவபிரான் தொழிற்சால" போன்ற கடவுட் பெயர்களால் தொழிற்சாலைகளை நிறுவவேண்டும்.

இவை போன்ற முயற்சிகளில் மடங்கள் ஈடுபட்டால், சைவம் தழைத்தோங்க வழியுண்டு.

தமிழில் வழிபாடு
தமிழர் வரிப்பணத்தாலும் தமிழ் வேந்தர் முயற்சியாலும் உண்டாக்கப்பட்ட கோவில்களே இத் தமிழ்நாட்டில் இருப்பவை. இவற்றில் சைவத் திருமுறைகள் ஓதியே வழிபாடு செய்யப்பட்டு வந்தது. சிறந்த சிவத்தலங்களான திருமறைக்காடு "வேதாரண்யம்" எனவும், திருவெண்காடு "சுவேதாரண்யம்" எனவும், திருமுது குன்றம் "விருத்தாசலம்" எனவும் மாறிய காலத்தில், தமிழில் இருந்த வழிபாடு வடமொழியில் மாறிவிட்டது போலும்! சுவாமி, அம்மன் பெயர்கள் எல்லாம் தமிழ் மக்களுக்குப் புரியாத அபீத குஜாம்பாள் முதலிய வடமொழிப் பெயர்களாக மாறிவிட்டன. இந்த அலங்கோல நிலை, கோவிலுக்குச் செல்லும் பொதுமக்களின் உள்ளத்தில் அழுந்திய பக்தி ஏற்படாது செய்துவிட்டது,. வழிபட வரும் மக்களுக்குப் புரியாத மொழியில் அர்ச்சனை செய்யப்படுமாயின், அதனால் வழிபடுவோர் உள்ளம் எவ்வாறு குழையும்? சைவம் சீரழிவதற்கும், கோவில் வழிபாடு குறைந்து வருவதற்கும் இது மிகச்சிறந்த காரணமாகும். அறநிலையப் பாதுகாப்பாளர்களும், மடங்களின் தலைவர்களும், சைவப் பெருமக்களும் இத்துறையில் உடனே கவனம் செலுத்துதல் வேண்டும். அறிவும் ஆராய்ச்சியும் கேள்வி கேட்கும் திறனும் பெருகிவரும் இக்காலத்தில், அறிவுக்குப் பொருந்த நடப்பதே சமயவளர்ச்சிக்கு ஏற்றது.

பொது மக்கள் தொண்டு
சைவ மக்கள் தங்கள் இல்லங்களில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சைவப் பெயர்கள் வைப்பது நல்லது. சிவநெறிச் செல்வன், தேவாரச் செல்வன், நெடுமாறன், கோட்புலி, கண்ணப்பன், கழற்சிங்கன் என்றாற்போல நாயன்மார் பெயர்களையும் திருமுறைகளில் வரும் அரும் பெயர்களையும் வைத்து வழங்குதல் பழமையைப் புதுப்பித்து நிலைக்கச்செய்வதாகும். இவ்வாறே பெண் பிள்ளைகளுக்கு மங்கையர்க்கரசி, சிவ அரசி, வெண்காட்டு நங்கை, சந்தன நங்கை முதலிய சைவப் பெயர்களை வைக்கலாம்.

சைவர் தம் ஊர்களில் ஏற்படும் புதிய தெருக்களுக்குச் சேக்கிழார் தெரு, சம்பந்தர் தெரு, ஆலால சுந்தரர் தெரு, எனச் சைவப் பெயர்களை வைக்க ஏற்பாடு செய்யலாம். இவ்வாறே தம் வளமனைகளுக்குச் `சேக்கிழார் அகம்` `சுந்தரர் அகம்` எனப் பெயர்களைச் சூட்டலாம்.

சிவநெறிச் செல்வரும் சைவ சங்கங்களும் சைவ சமய வரலாறு, சைவப் பெயர்கள், பாராயணத்திற்குரிய பதிகங்கள் போன்றவற்றைச் சிறுநூல்களக எழுதச் செய்து இலவசமாகவோ, குறைந்த விலையிலோ பரப்புதல் வேண்டும்; அடிக்கடி தக்காரைக் கொண்டு, இக்காலத்திற்கு ஏற்ற முறையில், சொற்பொழிவுகளின் வாயிலாகச் சைவ சமயப் பற்றை ஊட்டுதல் வேண்டும்; வாழ்க்கைக்கும் சமயத்திற்கும் உள்ள தொடர்பை தெரிவித்தலே மிக்க பயனுடைய சொற்பொழிவாகும்.

சைவ சமயம் முற்றிற்று