சைவத்திரு முறைகள். -II

முதல் மூன்று திருமுறைகள்
சைவ சமயத் திருமுறைகள் பன்னிரண்டு. முதல் மூன்று பாடியவர் சம்பந்தர். ஞானசம்பந்தர் ஏறத்தாழ 300 பதிகங்களைப் பாடியுள்ளார். ஒவ்வொரு பதிகமும் பத்து அல்லது பதினொரு பாக்களைக் கொண்டது. பதிகங்கள் அக்கால வழக்கிலிருந்த இந்தளம், குறிஞ்சி முதலிய பண்களில் பாடப்பட்டன. ஒவ்வொரு பதிகத்திலும், அப்பதிகம் பாடப்பெற்ற ஊரின் இயற்கையமைப்பு, அவ்வூர்க் கோவிலில் உள்ள சிவபெருமானின் சிறப்பு, அவனை அடைவதால் பெறத்தகும் பயன், இராவணன் கயிலையைப் பெயர்த்துப் துன்பப்பட்டமை, சமணர்-பௌத்தர் வசவு என்பன பெரும்பாலும் இடம் பெற்றிருத்தல் காணலாம்.
"போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு
வாதவகை யுண்டுபலபொய்
ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை
நன்றதுணர் வீருரைமினோ
ஆதியெமை யாளுடைய அரிவையொடு
பிரிவிலிஅ மர்ந்தபதிதான்
சாதிமணி தெண்டிரைகொ ணர்ந்துவயல்
புகஎறிகொள் சண்பைநகரே"
சம்பந்தர் பாடல்களில் தலங்களின் இயற்கை யழகு, பல வரலாற்றுச் செய்திகள், இசை, நடனம், சமணர் பௌத்தர் பற்றிய செய்திகள், தமக்கு முன்னிருந்தவரும் தம் காலத்தவருமான நாயன்மார் பற்றிய குறிப்புக்கள், பலவகைச் சிவனடியாரைப்பற்றிய குறிப்புக்கள், தம்முடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள், கோவில்களில் நடைபெற்ற விழாக்கள்,வழிபாட்டு முறைகள், புராணக்கதைக் குறிப்புக்கள், சைவசமயக் குறிப்புக்கள் முதலியவற்றைக் காணலாம். தலத்தின் இயற்கையழகை விளக்கும் பாடல்களில் செடிகள், கொடிகள், மரங்கள், மலர்கள் யாவும் குறிக்கப்பட்டுள்ளமை,சம்பந்தரது கவனிக்கும் ஆற்றலையும் இயற்கை அழகை அநு பவிக்கும் மனப்பண்பையும் நன்கு விளக்கும். சம்பந்தர் காலத்தில் சீகாழி கடலருகில் இருந்தது; நாகை சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது, என்பன போன்ற வரலாற்றுக் குறிப்புக்கள் பல அவர் திருப்பதிகங்களில் காணப்படுகின்றன. அவர் காலத்தில் மறையவர்கள் மிகுதியாக வாழ்ந்த தலங்கள் எவை என்பதையும் வேறுபல பொதுக் கருத்துக்களையும் அவர் பாக்கள் தெரிவிக்கின்றன. அவர் காலத்தில் பல ஊர்களில் இருந்த கோவில்கள் தனிப்பெயர் தாங்கி இருந்தன என்பதையும் நாம் பல பாக்களால் அறியலாம். செங்காட்டங் குடியில் கணபதீச்சரம் என்ற கோவிலும், ஆவூரில் பசுபதீச்சரம் என்னும் கோவிலும், நரையூரில் சித்தீச்சரம் என்ற கோவிலும், மயிலாப்பூரில் கபாலீச்சரம் என்ற கோவிலும், இவ்வாறே பல ஊர்களுல் வேறுவேறு பெயர்கொண்ட கோவில்களும் இருந்தன.
அப்பர் திருமுறைகள்
அப்பர் பாடல்களும் ஏறத்தாழ மூவாயிரத்துக்கு மேற்பட்டவை. சம்பந்தரைப் போலவே அப்பரும் தம் காலத்தவரும் தமக்கு முற்பட்டவருமான நாயன்மார் செய்த திருப்பணிகளைத் தம் பாடல்களில் குறித்துள்ளார். இவர் பாக்களிலும் சம்பந்தர் பாக்களிலிருந்து அறியப்படும் இசை, நடனம் முதலிய பலவகைச் செய்திகளையும் நிரம்ப அறியலாம். மைலாப்பூர் இவர் காலத்தில் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது. பல்லவ மகேந்திரவர்மன் இசை, நடனம்,நாடகம் இம் மூன்றையும் வளர்த்தவனாதலால் அவன் காலத்தில் வாழ்ந்த அப்பருடைய பாடல்களில் இசை, நடனம் பற்றிய குறிப்புக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. சமணரைப் பற்றிய குறிப்புக்களும் இவர் பாடல்களில் பலவாகக் காணப்படுகின்றன. சம்பந்தரைப் போலவே இவர் ஊர்ப்பெயரும் அவ்வூர்க் கோவிற் பெயரும் புதியனவாகப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். சீகாழிக் கோவிலைப் புள்ளினங்கள் ஏந்தின கதை போன்ற மிகப்பல புராணக் கதைகள் (Mythologies) இவர் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. இரும்புதல், பேரூர், தஞ்சைத் தளிக்குளம், இடவை, காம்பீலி, எழுமூர் முதலிய பல வைப்புத்தலங்கள் இவரால் குறிக்கப்பட்டுள்ளன. பள்ளி என்று முடியும் சிவத்தலங்களும்,வீரட்டம், குடி, ஊர், காடு, வாயில், மலை, ஆறு, குளம், களம் என முடியும் தலங்களும் இவரால் தொகைப்படுத்திக் குறிக்கப்படுகின்றன. இப் பெரியார் சூலை நோயால் வருந்தியது முதலிய தம் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பலவற்றைத் தம் பதிகங்களிற் பாடியுள்ளார்; தாம்கண்ட விழாக்களைப் பற்றிய விவரங்களைப் பல பதிகங்களில் கூறியுள்ளார். அடியார் மலரும் நீரும் கொண்டு கோவில் செல்லுதல், "வாழி-போற்றி" என்று இறைவனை ஏத்துதல், அகநெகிழ்ச்சியோடு கோவிலுக்குச் செல்லுதல், சிலர் பாடிக்கொண்டே கோவிலுக்கு வருதல், ஆடவரும் பெண்டிரும் கோவிலை வலம் வருதல், பாடுதல், பணிதல், மூன்று சந்தி வணக்கம் முதலிய வழிபாட்டு முறைகள் இவரால் நன்கு விளக்கப்பட்டுள்ளன.
"நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோவில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே"
என்பன போன்ற அப்பர்கூறும் அறிவுரைப் பாடல்கள் பலவாகும். அவை படித்து இன்புறற் பாலன.
ஏழாம் திருமுறை
இத்திருமுறை ஏறத்தாழ ஆயிரம் பாடல்கலளைக் கொண்டது. அப்பரது பிரசார வன்மையால் தொண்டைநாடு சைவ நாடாக மாறியது; சம்பந்தரது தொண்டினால் பாண்டியநாடு சிவமணம் கமழும் நாடாக மாறியது. ஆதலால் சமணமும் பௌத்த மும் வலி குன்றிவிட்டன. அதனால் அப்பர் சம்பந்தர்க்கு ஏறத்தாழ நூறு ஆண்டுகள் கழித்து வந்த சுந்தரர்க்குப் புறச்சமய எதிர்ப்புத் தோன்றவில்லை. ஆதலின், அவர் பாக்களில் புறச்சமயக் கண்டனம் மிகுதியாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது. அப்பர் சம்பந்தர் சென்ற நெறியைப் பின்பற்றியே சென்றவராதலால் சுந்தரர் பாக்களிலும் பல இடங்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் முதலியன காணப்படுகின்றன. ஆயின், தம் கால வரலாற்றுக் குறிப்புக்களை மிகுதியாகத் தரும் சிறப்பு இவர்பால்
காணப்படுகிறது.
" கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி"
"மண்ணுலகம் காவல் கொண்ட உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா
மன்னவரை மறுக்கஞ் செய்யும் புலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமான்"
"கடல்சூழ்ந்த உலகமெல்லாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன், கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்"
என்பன போன்றவை வரலாற்றுச் சிறப்புடையன.
மருகல் நாட்டு மருகல், கொண்டல் நாட்டுக் கொண்டல், மிழலை நாட்டு மிழலை, வெண்ணி நாட்டு மிழலை என்றாற் போன்ற தொடர்கள் இவர் காலத்திருந்த நாட்டுப் பிரிவினையை நன்குணர்த்துதலோடு, இவரது நாட்டு அறிவையும் நன்கு விளக்குவனவாகும். இவர் தம் காலத்துச் சேர, சோழ, பாண்டிய, பல்லவ வேந்தர் நால்வர்க்கும் நண்பராக இருந்தார்; தமிழகம் முழுமையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றார். பல தலங்கள் இருந்த நிலையையும்,கோவில்கள் சிறப்புற்றிருந்த நிலையையும் இவர் பாடல்கள் நன்கு தெரிவிக்கின்றன. இவரால் குறிக்கப்பட்டுள்ள வைப்புத் தலங்கள் பல அப்பர், சம்பந்தரால் குறிக்கப் படாதவை. எனவே, அவற்றுள் பல- தாழையூர், தக்களூர். தண்டன் தோட்டம், தென்னூர், தஞ்சாக்கை, தெள்ளாறு முதலியன அப்பர் சம்பந்தர்க்குப்பின்னும் இவர்க்கு முன்னும் ஏற்பட்டனவாதல் வேண்டும். இவர் மனைவியர் இருவரைப் பெற்றவர். இவர் வரலாறு முழுதும் இவர் பதிகங்களில் அறியப்படுகின்றது. இவர் இறைவனைச் சகமார்க்கத்தில் (நண்பர் முறையில்) வழிபட்ட அடியாராவர். இவர் சிவனை நோக்கி அஞ்சாது கூறும் சொற்கள் இவரது பக்தியின் அழுத்தத்தை நன்கு விளக்குகின்றன.
"பரவைக்கும் எனக்கும் பற்றாய பெருமானே"
"பரவைக்கும் சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே"
என்று இவர் பாடியுள்ள தொடர்கள் இவரது உண்மைக்காதல் வாழ்வினையும் சிவநெறிப் பற்றையும் செவ்விதின் விளக்குவதாகும். இவருடைய பாடல்கள் பல, செந்தமிற் இன்பம் தோய்ந்தவை. இயற்கை வருணனை நிறைந்த கீழ்வரும் வரிகளைக்காண்க:
1 "மண்டபமுங் கோபுரமும் மாளிகை சூளிகையும்
மறையொலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்
கண்டவர்கண் மணங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
காரிகையர் குடைத்தாடுங் கலயநல்லூர் காணே"
2 "தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமுந்
திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின் தென் கரைமேல்
கற்றினம்*நன் கரும்பின்முளை கறிகற்கக் கறவை
கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே"
இம்மூவர் அறிவுரை
இம்மூவரும் சைவசமயப் பொதுமக்களுக்குக் கூறிய அறிவுரைகள் யாவை? "சமண-பௌத்த நூல்கள் பொய்ந்நூல்கள்;அவற்றை நம்பாமல் சிவனை வழிபடுங்கள்; தீவினை அற்று நன்மை அடைவீர்கள்; திருப்பதிகங்களைப் பாடிப் பயன் பெறுங்கள்: எவரும் ஐந்தெழுத்தோதி மேன்மை பெறலாம்; ஐந்தெழுத்தே நல்ல துணை; ஐம்பொறிகளையும் அடக்குங்கள்; மனத்தை ஒருவழிப்படுத்தி இறைவனை நினையுங்கள்; சிவனைக் காண்பீர்கள்; புலனடக்கம் கொண்டு மனத்தை ஒருவழிப்படுத்த வல்லவர் சிவப்பேறு பெறுவர்" என்பன இவர்தம் அறிவுரைகளாகும். சம்பந்தரது திருக்கோடிகா திருப்பதியமும், நெஞ்சுக்கு அறிவுறுத்தும் முறையில் பாடப்பட்ட அப்பரது ஆரூர்த்திருத்தாண்டகமும்,மக்களுக்கு ஏற்ற சமய அறிவுரைகளாகக் கொளளற்பாலன. பல பதிகங்களில் கோவில் வழிபாடு, கோவில் தொண்டு செய்தல், தல யாத்திரை, அடியார் கூட்டுறவு, அடியார்க்கு உணவளித்தல் என்பனவும் வற்புறுத்தப்பட்டுள்ளன.
எட்டாம் திருமுறை
மணிவாசகர் பாடிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை எனப்படும்; இவர் காலத்துப் பாண்டிய மன்னன் சிறந்த சிவபக்தன். அவன் இரண்டாம் வரகுணன் என்பது அறிஞர் பலர் கருத்து. மணிவாசகர் காலத்தில், சங்கரரது அத்வைதக் கொள்கை நாட்டில் மிகுதியாகப் பிரசாரம் செய்யப்பட்டது போலும்! இவர் அதனை "மிண்டிய மாயாவாதம் என்னும் சண்டமாறுதம் சுழித்தடித்து ஆர்க்கிறது." என்று குறித்துள்ளார். பெண்கள் பலவகை விளையாட்டுக்களின்போது இறைவனுடைய சிறப்பியல்புகளைப் பலபடியாக எடுத்துக் கூறி ஆடுவதாக இவர் பாடியுள்ளார். அவ்விளையாட்டுக்கள் (1) அம்மானை, (2) பொற்சுண்ணம் இடித்தல் (3) தும்பியாடல் (4) தெள்ளேணம் கொட்டல் (5) சாழல் (6) திருப்பூவல்லி கொய்தல், (7) உந்திபறத்தல் (8) தோள் நோக்கம் ஆடல் (9) ஊசலாடல் என்பன. இவ்வகை விளையாட்டுக்களில் இறைவன் புகழைப் பாடியாடுதல் சம்பந்தர் காலத்திலும் இருந்தது என்பது சம்பந்தர் பாக்களால் தெரிகிறது.
திருவாசகம்
முதல் ஏழு திருமுறைகள் பண்ணோடும் தாளத்தோடும் பாடத்தக்கவை. ஆயின், திருவாசகப் பாடல்களுள் பெரும்பாலன அத்தகையவை அல்ல; முன்னவற்றுள் சமயப் பிரசாரம் காணப்படும்; திருவாசகத்தில் அது காணப்பெறாது; மாணிக்கவாசகர் எங்ஙனம் உழன்று உழன்று இறைவனது அருளைப் பெற்றார் என்பதே இந்நூலிற் காணப்படுவது. இது படிப்பார் உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்தது. "உன் குறைகளை ஒப்புக் கொண்டு கடவுளுக்குமுன் அழு: அவனை அடையலாம்" என்பதே திருவாசகத்தின் உயிர்நாடிப் பகுதிகளில் ஒன்று. இங்ஙனம் தம் குறைகளை உள்ளவாறு உணர்ந்து வருந்திக் கடவுள் முன் அழுதல் என்பது எல்லோர்க்கும் எளிதில் இயல்வது அன்று; "கடவுளிடம் என்றும் இறவாத காதல் பெற விரும்பும் பக்தன், அன்பை அடிப் படையாகக் கொண்ட மெய்யடியாருடன் தொடர்ந்து பழகவேண்டும்" என்பது சைவ சித்தாந்தக் கொள்கைகளுள் ஒன்று. இதனைச் சிவஞான போதம் 12-ஆம் சூத்திரம் நன்கு வற்புறுத்துகிறது. மாணிக்கவாசகர் இத்தகைய அடியார் குழாத்தில் தம்மை வைக்குமாறு இறைவனை வேண்டுகிறார். இவ்விரண்டும் திருவாசகத்தின் உயர்நாடி என்று கூறலாம்.
திருக்கோவையார்
ஆன்மாவாகிய தலைவன் கடவுளாகிய தலைவியைப் பல சோதனைப் படிகளைக் கடந்து கூடுதலே திருக்கோவையார் என்னும் நூலிற் குறிக்கப்படும் பொருளாகும். பாக்கள் இனிமையும் பொருளாழமும் உடையவை.
ஒன்பதாம் திருமுறை
இதனில் திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது அடியார்கள் பாடிய பாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாவும் "திரு இசைப்பா" எனப்படும். திரு மாளிகைத் தேவர் திருவிடைமருதூர் மாளிகை மடத்தைச் சேர்ந்தவர். இவர் தில்லையைப் பற்றிய நான்கு இசைப்பாக்கள் பாடியுள்ளார்.
சேந்தனார் திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி ஆகியவற்றின்மீது மூன்று திருவிசைப் பாக்களும், தில்லைமீது திருப்பல்லாண்டும் பாடியுள்ளார்.
கருவூர்த்தேவர் முதலாம் இராசராசன் காலத்தவர். இவர் சமாதி பெரியகோவில் திருச்சுற்றில் இருக்கிறது. இப்பெரியார், தில்லை, திருக்களந்தை- ஆதித்தேச்வரம், கீழ்க்கோட்டூர்-மணியம்பலம், திரு முகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை-இராசராசேச்சரம், திருவிடை மருதூர் ஆகிய பத்துத் தலங்கள்மீது பத்துத் திரு விசைப்பாக்கள் பாடியுள்ளார்.
பூந்துருத்தி நம்பி காட நம்பி என்பவர் திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தவர்; இவர் திருவாரூர், தில்லை என்னும் இருபகுதிகள்மீது இரண்டு திருவிசைப் பாக்கள் பாடியுள்ளார். இப்பெரியார் கணம்புல்லர், கண்ணப்பர்,திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமாள் ஆகிய நாயன்மாரைத் தம் பாக்களில் பாராட்டியுள்ளார்.
கண்டராதித்தர், முதற் பராந்தக சோழன் மகனார். இவர் தில்லையைப்பற்றி ஒரு திருவிசைப்பா பாடியுள்ளார். அதனில் தம்தந்தை சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்தான் என்பதைக் குறித்துள்ளார்.
வேணாட்டு அடிகள் என்பவர் தென்திருவாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரும் தில்லையைப் பற்றியே ஒரு திருவிசைப்பா பாடியுள்ளார்.
திருவாலி அமுதனார் சீகாழியை அடுத்துள்ள திருவாலி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரும் தில்லையைப் பற்றியே நான்கு திருவிசைப் பாக்கள் பாடியுள்ளார். "தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம்" என்று தம் பாவில் குறித்ததிலிருந்து, இவருடைய தமிழ்ச் சுவையும் இசையறிவும் புலனாகின்றன.
புருஷோத்தம நம்பி என்பவர் தில்லயைப் பற் றியே இரண்டு திருவிசைப் பாக்கள் பாடியுள்ளார். சேதிராயர் என்பவர் திருக்கோவலூர் அரசர் என்று கருதுதல் தகும். இவர் தில்லையைப்பற்றி ஒரு திருவிசைப்பா பாடியுள்ளார்.
தில்லையின் சிறப்பு
இவ்வொன்பதாம் திருமுறையில் பல பாக்கள் தில்லையைப்பற்றியே காண்பதற்குரிய காரணம் யாது? ஐந்தொழில் இயற்றுதற்கு ஏதுவாகிய திருநடனம் செய்யப்படும் ஒளி நிலையமாகத் தில்லை விளங்குவதால், அதனை எல்லாத் தலங்களினும் உயர்ந்ததாகச் சைவ நூல்கள் கூறும். அத்துடன், முதற்பராந்தகன் காலமுதல் சோழவேந்தர் தில்லையைப் பல்லற்றானும் சிறப்பித்து வந்ததும், தில்லைப் பெருமானைத் தம் குலநாயகன் என்று கூறிவந்ததும்,தில்லையைச் சோழர் காலத்தில் உயர்த்திவிட்டன. இத்தகைய காரணங்களால் தான் தில்லை மேற்சொன்ன ஆசிரியர்களால் பெரிதும் போற்றப்பட்டது என்னலாம்.
பத்தாம் திருமுறை
திருமூலர் பாடிய திருமந்திரம் பத்தாம் திருமுறை. இதுபற்றிய விவரங்கள் சென்ற கட்டுரையிற் கூறப்பட்டுள்ளன.
பதினோராம் திருமுறை
இதனுட் கூறப்பட்ட பாக்களின்-நூல்களின் ஆசிரியர் (1) சிவபிரான், (2) காரைக்காலம்மையார், (3) ஐயடிகள் காடவர்கோன், (4) சேரமான் பெருமாள் நாயனார், (5) நக்கீரதேவநாயனார், (6) கல்லாட தேவ நாயனார், (7) கபிலதேவ நாயனார், (8) பரண தேவ நாயனார், (9) இளம்பெருமான் அடிகள், (10) அதிரா அடிகள், (11) பட்டினத்துப் பிள்ளையார், (12) நம்பியாண்டார் நம்பி என்போராவர்.
1. சிவபிரான் பாணபத்திரருக்குப் பொன் தரும்படி சேரமான் பெருமாளுக்கு விடுத்த ஒரு பாடல் இத்திருமுறையில் முதலில் காணப்படுகிறது.
2. காரைக்காலம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டைமணிமாலை, அற்புதத் திருவந்தாதி என்னும் மூன்று நூல்களைப் பாடியுள்ளார்.
3. ஐயடிகள் காடவர்கோன் என்ற பல்லவர் ஒவ்வொரு சிவத்தலத்தையும் பற்றிப் பாடிய க்ஷேத்திர வெண்பா என்னும் நூல் அடுத்து இடம் பெற்றுள்ளது.
4. சேரமான் பெருமாள்-பொன் வண்ணத்தந்தாதி, திரு ஆரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞானஉலா என்னும் மூன்றையும் பாடியுள்ளார்.
5. நக்கீரதேவநாயனார்-கண்ணப்ப தேவர் திருமறம் முதலிய பல நூல்களைப் பாடியுள்ளார்.
6. கல்லாடதேவநாயனார்-இவரும் கண்ணப்பரைப் பற்றி முப்பத்தெட்டு வரிகள் கொண்ட அகவற்பா பாடியுள்ளார்.
7. கபிலதேவ நாயனார் – இவர் விநாயகர்மேல் இரட்டை மணிமாலை பாடியுள்ளார்.
8. பரணதேவ நாயனார் சிவபெருமான் திருவந்தாதி என்ற நூலைப் பாடியுள்ளார்.
9. இளம்பெருமானடிகள் என்பவர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.
10. அதிகரா அடிகள் விநாயகர்மீது மும்மணிக்கோவை பாடியவர்.
11. பட்டினத்தடிகள் கோவில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை,
திருவிடை மருதூர் மும்மணிக்கோவை, திருவேகம்ப முடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது என்னும் நூல்களைப் பாடியுள்ளார். இவை படிக்கப் படிக்க இன்பம் தருவன. கோயில் நான்மணி மாலையில்,
"...நின்
தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்
தென்னையும் எழுத வேண்டுவன்"
எனவரும் அடிகள் உள்ளத்தை ஈர்க்கத்தக்கவை.
12. நம்பியாண்டார் நம்பி பத்துச் சிறுநூல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் ஆறு நூல்கள் சம்பந்தரைப் பற்றியவை. அவை (1) சம்பந்தர் திருவந்தாதி (2) சம்பந்தர் -திருச்சண்பை- விருத்தம். (3) சம்பந்தர்-திருமும்மணிக்கோவை, (4) சம்பந்தர் திருவுலாமாலை, (5) சம்பந்தர் திருக்கலம்பகம் (6) சம்பந்தர் திருத்தொகை என்பன. இந்த ஆறிலும் சம்பந்தர் வரலாற்றுக் குறிப்புக்கள் அனைத்தும் அடங்கி விட்டன. (7) திருநாவுக்கரசர்- திரு ஏகாதச மாலையில் அப்பரைப் பற்றிய சிறந்த வரலாற்றுக் குறிப்புக்கள் காண்கின்றன. (8) கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தில் கண்ணப்பர், சேரமான், சுந்தரர், சாக்கியர், அதிபத்தர் கலிக்காமர், மாணிக்கவாசகர், வரகுணபாண்டியன் ஆகியோர் குறிக்கப்பட்டுளர். (9) விநாயகர் திரு இரட்டை மணிமாலை 20 செய்யுட்களைக் கொண்டது. (10) திருத்தொண்டர்-திரு அந்தாதி என்பது சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையைப் பின்பற்றி விரித்துரைக்கப்பட்ட நூலாகும். இதில் 63 நாயன்மார் வரலாற்றுக் குறிப்புக்களும் ஒன்பது தொகை அடியார் பற்றிய குறிப்புக்களும் காண்கின்றன. இந்த அந்தாதி சேக்கிழாரது பெரிய புராணத்திற்குச் சிறந்த அடிப்படையாகும்.
பன்னிரண்டாம் திருமுறை
இது சுந்தரர் வரலாற்றையும் அவரால் திருத்தொண்டத் தொகையில் குறிக்கப்பெற்ற அடியார் வரலாறுகளையும் கூறும் பெருங்காவியமாகும். இஃது ஏறத்தாழ 4250 செய்யுட்களை உடையது. தமிழ்நாட்டில் சைவ சமயம் பற்றிச் செய்யப்பட்ட முதற்காவியம் இதுவேயாகும். இது திருமுறைகளையும் கன்னபரம்பரைச் செய்திகளையும், நாயன்மார் வரலாறுகளை அங்கங்கே குறிக்கும் தில்லை- உலாப் போன்ற பிறநூல்களையும், சமண-பௌத்த சமய நூல்களையும், நாயன்மார் பற்றிய கல்வெட்டு- சிற்ப-ஓவியச் சான்றுகளையும் உறுகருவிகளாகக் கொண்டு செய்யப்பெற்றது. இது மொழிபெயர்ப்பு நூலன்று. நூலாசிரியர் காலத்தில் நடந்த வரலாறும் அன்று; அவர்க்கு முன்னர் ஏறத்தாழக் கி.பி.300 முதல் 900 வரை இருந்த நாயன்மார்களைப் பற்றிய வரலாறு. நாயன்மாரோ, வடக்கே காம்பீலியிலிருந்து தெற்கே மதுரை வரைப் பல நாடுகளில் வாழ்ந்தவர்-பல காலங்களில் பரந்துபட்டு வாழ்ந்தவர். பல சாதியார் ஆவர். அப்பெருமக்களுடைய பிறப்பிடம், சாதி, செய்த சமயத்தொண்டு முதலிய செய்திகளைத் திருமுறைகளை மட்டும் நம்பி எடுக்காமல், தாமும் நன்கு விசாரித்து, பல இடங்கட்கும் நேரில் சென்று ஆராய்ந்து, யாவற்றையும் திரட்டிக்கொண்ட பிறகே நூல் பாடினார் எனக் கருத அவர் நூலிற் பல சான்றுகள் உள. அப்பர் புராணத்தில் குணபர ஈசுவரத்தையும், சிறுத்தொண்டர் புராணத்தில் வாதாபிப் படையெடுப்பையும் அவர் கூறியிராவிடில், இன்று அப்பர்-சம்பந்தர் காலத்தை அறிய வேறு வழி இல்லை. சேக்கிழார் சிறந்த சைவர்; பெரும்புலவர்; இவற்றுடன் சோழப் பெருநாட்டின் முதலமைச்சர் ஆதலின், அவரது காவியத்தில் இலக்கிய நயம்- வரலாற்று உண்மைகள்-சைவ சித்தாந்த கருத்துக்கள் என்பன அங்கங்கே மிளிர்கின்றன.
சங்க காலத்திற்குப் பிறகு தமிழராய சோழராட்சியில் தமிழ்நாட்டு நாயன்மாரைப் பற்றித் தமிழர் பாடிய தமிழ்க் காவியம் இஃது ஒன்றே என்பது கவனிக்கத்தக்கது. இதன்கண் பிராமணர் முதல் பறையர் ஈறாக உள்ள பலசாதி மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு முறைகள், நாட்டின் பெரும் பிரிவுகள்-உட்பிரிவுகள், நாட்டு ஆட்சிமுறை, சமண-பௌத்த-சைவ சமயக் கருத்துக்கள் இன்ன பிறவும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. இதன்கண் கிடைக்கும் இச் செய்திகள் சோழர்கால இலக்கியங்கள் எதனிலும் கிடைக்கா. ஒரு பக்கம் பல்லவர் கால வரலாற்றையும் மற்றொரு பக்கம் சோழர்கால நாட்டு நிலையையும், மொழி நிலையையும், சைவ சமய நிலையையும், உள்ளடக்கிக் கொண்டுள்ள இந்நூல், தமிழர் நற்பேற்றின் பயனாய்த் தோன்றியது என்னல் மிகையாகாது. இந் நூலிலிருந்து சேக்கிழாரது இலக்கியப் புலமை, இலக்கணப்புலமை, திருமுறைப் புலமை, இசை- நடனம்-மருத்துவம்-வானநூல் முதலிய பல்கலைப் புலமை, சைவ சித்தாந்த அறிவு முதலியவற்றை நன்கறியலாம். இவை விரிப்பிற் பெருகும். பெரியபுராணம் ஏற்பட்ட பின்னரே அறுபத்துமூன்று நாயன்மார்கட்கும் சிற்பங்கள் ஏற்பட்டன; விழாக்கள் பெருகின என்னும் விவரங்களைச் சோழர்காலக் கோவில்களிலிருந்தும் கல்வெட்டுக்களிலிருந்தும் நன்கறியலாம்.