சொற் போட்டி

காதலர் ஒருவரையொருவர் மிஞ்சும் வகையில் வாது கவிகள் பாடுவார்கள்! அப்பாட்டுகளில் ஒருவரையொருவர் திட்டிக் கொள்வதும், குறைவாகப் பேசிக் கொள்ளுவதும், வழக்கம். முதலில் காதலனைக் கிண்டலாகப் பேசுகிறாள். செருப்புக்கும் காசில்லாமல் தும்புச் செருப்புப் போட்டிருக்கிறானாம் அவன். அப்படியானால் தும்பைப் பூப்போல வெள்ளை வேட்டி அவனுக்கு ஏது? அவன் பதிலடி கொடுக்கிறான். கடைசியில் இருவரும் ரங்கூனுக்குப் போய்விடுவதாக முடிவு செய்கிறார்கள்.
பெண்:
தும்புச் செருப்பு மாட்டி
தொழு திறக்க போற மன்னா
தும்பைப் பூ வேட்டியிலே
துவண்ட மஞ்சள் நான் தானா?
ஆண்:
மஞ்சள் மணக்கப் பூசி
மரிக்கொழுந்தை நெருக்க வச்சு
மந்தையிலே நிண்ணாலும்-உன்ன
மடை நாயும் தீண்டாதடி
பெண்:
கட்டக்கருத்த மச்சான்
வட்டப்பொட்டு போட்ட மச்சான்
எந்தப் பொட்டு வச்சாலும்
ஏறணுமே ஏலங்கடை
ஆண்:
சாலை கடந்து வாடி
சந்தைப் பேட்டை கடந்து வாடி
ஓடை கடந்து வாடி
ஓடிப் போவோம் ரங்கூனுக்கே
-----------