சோற்றில் ஒரு கல்

bookmark

ஒருவருக்கு ஒரு பெண். அவள் செல்லமாக வளர்ந்தவள். அவளுக்கு சமைக்கத் தெரியாது. சரியாக அரிசி களைந்து சோதிக்காமல் சமைத்து விட்டாள். கணவன் உண்ணும் பொழுது ஒரு கல் அகப்பட்டு விட்டது. உடனே சோற்றுத் தட்டையெடுத்து அவள் முகத்தில் எறிந்தான். அவள் துக்கம் பொறுக்க முடியாமல் அழுதாள். தந்தைக்குச் சொல்லியனுப்பினாள்.

தந்தை என்ன செய்வார்? காய்கறி அனுப்பினார். அவளுக்கு அரியத் தெரியவில்லை. அவரே வந்து அரிந்து கொடுத்தார். மகளின் நிலை நினைந்து வருந்தி அவளுக்குச் சமையல் கற்பிக்க ஏற்பாடு செய்கிறார்.

முத்தம்மா சமையலில் வல்லவளாகிறாள். மீனுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? பெண்ணுக்கு சமையல் கற்பிக்கவா வேண்டும்? சிறிது பயிற்சியில் அவளுக்குச் சமையல் தெரிந்து விடுகிறது. உற்சாகத்தோடு அவள் புருஷனுக்குச் சமையல் செய்து போடுகிறாள்.

முச்சி வெச்சு முறம் வெச்சு
பானை கழுவி
பன்னீருலை வச்சு 
செந் நெல் அரிசி தான்
தீட்டி வடிச்சாளாம்
வடிச்சாளாம் சாதங்கறி
வாழைப்பூத் தன்னிறமாம்
பொரிச்சாளாம் பொரியல் வகை
பூளைப் பூத் தன்னிறமாம்
ஒரு வாய் சோத்திலே
ஒருகல் இருந்த தென்று
அள்ளி அறைந்தாராம்
அழகுள்ள மார் மேலே
துள்ளி விழுந்தாளாம்
தூங்கு மஞ்சக் கட்டிலிலே
சாஞ்சு விழுந்தாளாம்
சப்ர மஞ்சக் கட்டிலிலே
அடி பொறுக்க மாட்டாமல்
அப்பனோட சொன்னாளாம்.

அப்பன் மாராசன்
கொத்தோடு காய்கறிகள்
கொண்டு வந்து தந்தாராம்
அரியத் தெரியாமல்
அரமனைக்கு ஆள் விட்டாள்
சீவத் தெரியாமல்
திருமணைக்கு ஆள்விட்டாள்
அரமனை மாராசன்
திருமணையும் கொண்டு வந்து
அரிஞ்சு கொடுத்தாராம்

அழுதுத் துடித்தாராம்
அரிப்பாளாம் பொரிப்பாளாம்
முத்தம்மா
அரிசி சோறு தானிடுவாள்
முத்தம்மா
நெய்யாலே கச்சாயம்
சுடுவாளாம் முத்தம்மா
நேர மொரு பட்டுடுத்தி
வருவாளாம் முத்தம்மா
அரளிச் சுருள் ஓலையைத்தான்
அழகான கட்டிலிலே
நடுவிருந்து வாசிப்பார்
நம்பம தம்பி முத்தையா
குனிஞ்சு தான் சோறிடுவாள்
கற்பு மவள் நம்ம தங்கை
வாரி மனங் கொள்வார்
வரிசையுள்ள நம்ம தம்பி
எடுங்கடி பெண்டுகளே
எல்லோரும் தான் குலவை
போடுங்கடி பெண்டுகளே
பொன்னா லொரு குலவை

வட்டார வழக்கு : வடிச்சாள்-வடித்தாள் ; பொரிச்சாள்-பொரித்தாள் ; சாஞ்சு-சாய்ந்து ; மாராசன்-மகராஜன்,தந்தையைக் குறிக்கும் ; திருமணை-திருகுமணை ; அரிஞ்சு-அரிந்து (அறுத்து) ; குனிஞ்சு-குனிந்து ; குலவை-குரவை ; மங்கலமாக-ஒலி எழுப்புவது.

உதவியவர் :புலவர் இராம இராசன்
சேகரித்தவர் :கு.சின்னப்ப பாரதி
இடம் : வேலூர், சேலம் மாவட்டம்.
-----------