தஞ்சை

பாடல் 883
தந்தன தானன ...... தனதான
அஞ்சன வேல்விழி ...... மடமாதர்
அங்கவர் மாயையி ...... லலைவேனோ
விஞ்சுறு மாவுன ...... தடிசேர
விம்பம தாயரு ...... ளருளாதோ
நஞ்சமு தாவுணு ...... மரனார்தம்
நன்கும ராவுமை ...... யருள்பாலா
தஞ்சென வாமடி ...... யவர்வாழத்
தஞ்சையில் மேவிய ...... பெருமாளே.
பாடல் 884
தந்த தானனத் தந்த தானனத்
தந்த தானனத் ...... தனதான
அம்பு ராசியிற் கெண்டை செலொளித்
தஞ்ச வேமணிக் ...... குழைவீசும்
அங்க ணாரிடத் தின்ப சாகரத்
தங்கி மூழ்குமிச் ...... சையினாலே
எம்பி ரானுனைச் சிந்தி யாதொழித்
திந்த்ர சாலஇப் ...... ப்ரமைதீர
எங்கு வாவெனப் பண்பி னாலழைத்
தெங்கு மானமெய்ப் ...... பொருள்தாராய்
கொம்பு போலிடைத் தொண்டை போலிதழ்க்
கொண்டல் போல்குழற் ...... கனமேருக்
குன்று போல்முலைப் பைங்கி ராதியைக்
கொண்ட கோலசற் ...... குணவேலா
சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச்
சம்பு போதகக் ...... குருநாதா
சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்
தஞ்சை மாநகர்ப் ...... பெருமாளே.
பாடல் 885
தந்த தானன தான தான தத்த தந்த
தந்த தானன தான தான தத்த தந்த
தந்த தானன தான தான தத்த தந்த ...... தனதான
கந்த வார்குழல் கோதி மாலை யைப்பு னைந்து
மஞ்ச ளாலழ காக மேனி யிற்றி மிர்ந்து
கண்ட மாலைக ளான ஆணி முத்த ணிந்து ...... தெருவூடே
கண்ட பேரையெ லாம வாவி னிற்கொ ணர்ந்து
வண்ப யோதர பார மேரு வைத்தி றந்து
கண்க ளாகிய கூர வேலை விட்டெ றிந்து ...... விலைகூறி
வந்த பேர்களை யேகை யாலே டுத்த ணைந்து
கொண்டு தேனித ழூறு வாயை வைத்த ருந்தி
மந்த மாருதம் வீசு பாய லிற்பு ணர்ந்து ...... மயல்பூணு
மங்கை மாரநு போக தீவி னைப்ப வங்கள்
மங்கி யேகிடு மாறு ஞான வித்தை தந்து
வண்டு லாவிய நீப மாலை சற்றி லங்க ...... வருவாயே
இந்த்ர தாருவை ஞால மீதி னிற்கொ ணர்ந்த
சங்க பாணிய னாதி கேச வப்ர சங்க
னென்று வாழ்மணி மார்பன் வீர விக்ர மன்றன் ...... மருகோனே
எண்டி சாமுக வேலை ஞால முற்று மண்டு
கந்த தாருக சேனை நீறு பட்டொ துங்க
வென்று பேரொளி சேர்ப்ர காசம் விட்டி லங்கு ...... கதிர்வேலா
சந்த்ர சேகரி நாக பூஷ ணத்தி யண்ட
முண்ட நாரணி யால போஜ னத்தி யம்பை
தந்த பூரண ஞான வேள்கு றத்தி துஞ்சு ...... மணிமார்பா
சண்ட நீலக லாப வாசி யிற்றி கழ்ந்து
கஞ்சன் வாசவன் மேவி வாழ்ப திக்கு யர்ந்த
தஞ்சை மாநகர் ராஜ கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.