தண்ணீரா வேண்டும்

கிராமத்தில் ஒரு விழா. பெண்கள் கூடி கும்மி அடிக்கிறார்கள். அவர்களது பாட்டைக் கேட்கவும், நடனத்தைப் பார்க்கவும் ஒரு இளைஞன் அருகில் வருகிறான். பொதுவாக ஆண்கள் அங்கு போவதில்லை. அது கிராமத்தின் வளமையான எழுதப்படாத சட்டம் ; அதை மீறுவதற்கு ஒரு காரணம் கண்டு பிடிக்கிறான் இளைஞன். வாழைப்பழம், சர்க்கரை, எள்ளுருண்டை யெல்லாம், தின்றதால் விக்கலெடுக்கிறதாம், தண்ணீர் வேண்டுமாம். அவர்கள் வெளிப்படையாகவே“முந்தாணி தட்டும் தூரத்தில் நெருங்க வேண்டாம், தள்ளி முக்காலிபோட்டு உட்காரவேண்டும்”என்று கூறுகிறார்கள். மூக்கறுக்கப்பட்ட இளைஞன் பழைய கதையைச் சொல்லிக் கொண்டே ஆந்தை போல விழித்துக் கொண்டு நிற்கிறான்.
ஆண் : சீப்பு சீப்பா வாளப்பளம்
சீனி சக்கரை எள்ளுருண்டை
சக்கரைத் தின்னா விக்கலெடுக்கும்
தண்ணி கொண்டாங்கடி தாதிமாரே
பெண் : கும்மியடிக்கற பெண்களாண்டே
கூட்டம் என்னா இங்கே ஆம்பிளைக்கி
முந்தாணி தாங்குது ஒத்திக்குங்க
முக்காலி போடறோம் ஒக்காருங்க
ஆண் : கொத்து கொத்தாப் புள்ளே வாளப்பளம்
கோதுமை சர்க்கரை எள்ளுருண்டை
சர்க்கரை தின்னாலே விக்கலெடுக்கும்
தண்ணி கொண்டாங்கடி தாதிமாரே
தன்னா தானான தானான-தன
தான தனனனன னானன
வட்டார வழக்கு: வாளப்பளம்-வாழைப்பழம்.
குறிப்பு: ழகரத்தை தென் தமிழ் நாட்டில் ளகரமாகவே உபயோகிப்பர்.
சேகரித்தவர் : S.S. சடையப்பன்
இடம் : அரூர்,தருமபுரி மாவட்டம்.
--------