தத்துவ ஆய்வு

அல்லமரும் கோரக்கர் என்பவரும் தத்துவ ஆய்வு செய்து உரையாடுகின்றனர். உயிர் என்பது பற்றியும் ஆன்மா என்பது பற்றியும் அல்லமர் கோரக்கருக்கு விளக்குகிறார்.
உயிர் என்பது ஆன்மாவின் பெயர் அன்று. மூக்கின் வழியாகப் போய் வந்து கொண்டிருக்கும் மூச்சுக் காற்றுக்குத்தான் உயிர் என்பது பெயராகும். உயிரை உடைய ஆன்மா என ஒன்றுள்ளது. உயிர் என்னும் பெயர் ஆகுபெயராய் அதனை உடைய ஆன்மாவைக் குறிக்கிறது. பாடல்:
“உயிர் எனும் பெயர் இயங்குகாற்கு இயற்பெயர் உரைப்பின்
அயலுறுந் தனக்கு அப்பெயர் ஆகுபெயராம்” (19-38)
என்பது பாடல் பகுதி. உயிர் என்னும் பெயர், மூச்சுக் காற்றுக்கு உரிய இயற்பெயராம் - ஆன்மாவிற்கு ஆகு பெயராம். இது பற்றி மெய்யறி வாய்வாளரிடம் கருத்து வேற்றுமை இருக்கலாம். தனக்கு - ஆன்மாவிற்கு உயிர்ப்பது (மூச்சு விடுவது) உயிர்.
இப்பாடவில் உள்ள "காற்கு" என்னும் சொல், கால் என்பது "கு" என்னும் நான்காம் வேற்றுமை உருபு பெற்ற சொல்லாகும். கால் + கு = காற்கு. "காற்கு" என்றால் காற்றுக்கு என்று பொருளாம். "காற்கு" என்பதற்கு முன்னால் இயங்கு என்னும் சொல் சேர்ந்து "இயங்கு காற்கு" என்றுள்ளது.
காற்று எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பது. கால் என்னும் தமிழ்ச் சொல்லுக்கும், வாயு என்னும் வட மொழிச் சொல்லுக்கும் பொருள் இஃதே. காற்று உலவிக் கொண்டே இருப்பதால், திவாகர நிகண்டில் காற்றுக்கு உலவை என்னும் பெயர் தரப்பட்டுள்ளது (1-37). காற்று எப்போதும் சரித்துக் கொண்டே (இயங்கிக்கொண்டே) இருப்பதால் "சாரிகை" என்னும் பெயரும், சதா சென்று கொண்டே இருப்பதால் "சதார கதி" என்னும் பெயரும் சூடாமணி நிகண்டில் காற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.