தாது வருடப் பஞ்சம்

இந்தியாவில் பஞ்சம் என்கிறபோது எப்படி வங்கப் பஞ்சம், ராயல சீமாப் பஞ்சம் என்று சொல்கிறோமோ, அது போல, தாதுவருஷப் பஞ்சமென்பது நூற்றிருபது வருடங்கட்கு முன்பு தமிழகத்தில் ஏற்பட்ட, கொடிய பஞ்சமாகும். இன்றைக்கும் கூட நமது கொள்ளுப்பாட்டன், பாட்டிமார்களுடன் உட்கார்ந்து கதை கேட்போமேயானால் தாது வருஷப் பஞ்சத்தைப் பற்றி கதை கதையாகச் சொல்லுவார்கள். அந்தப் பஞ்சம் சரித்திரப் பிரசித்தமான ஒரு முக்கிய சோக நிகழ்ச்சியாக இருந்தது. உள்ளத்தை உலுக்கும் அவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக இருந்துங்கூட, அன்று வாழ்ந்த தமிழகப் பெரும் புலவர்கள், கவிஞர்களின் சிந்தையை ஏனோ தொடாமற் போய்விட்டது. ஒரு பேரிலக்கியத்தைப் படைப்பதற்கு வேண்டிய கருவைத் தன்னுள் கொண்டிருந்த அந்தக் கொடிய பஞ்ச நிகழ்ச்சிகள் அவர்களின் கண்ணில் படாமற்போனது விந்தையே. நாம் இன்று அதைப்பற்றித் தெரிந்து கொள்ள உதவுவதெல்லாம் சில நாடோடிப் பாடல்களே. ஒவ்வொரு பிரதேசவாரியாகத் தேடினால், அவை கிடைப்பது திண்ணம். தாது வருடப் பஞ்சத்தை அனுபவித்து கொடுமைக்கும், கொதிப்புக்கும் ஆளான யாரோ ஒரு பாமரன் ஆற்றாமையை ஆற்றிக் கொள்ளப் பாடிய அந்தப் பாடலைச் சற்று ஆழ்ந்து படித்துப் பாருங்கள். வசதி படைத்தவர்களும், வாழ வழியின்றி பிழைப்புநாடி வெளியே சென்ற பின்னர் தங்கள் போலிக் கவுரத்தைக் காப்பாற்ற நினைத்து ஏளனத்துக்கு உள்ளாவதை நகைச்சுவை ததும்ப சுட்டிக்காட்டுவதையும் அதே பொழுதில் அதன் கோரப் பிடிப்பில் ஜனங்கள் சிக்கி, சித்திரவதைப்பட்டு மடிவதையும், உள்ளம் உருகும் வகையில் எடுத்துரைக்கும் பாடல் இது:
(குறிப்புரை: சின்னப்ப பாரதி)
பூரணமாகவே தாது வருஷமும் பிறந்ததுவே
பஞ்சமும் அப்போதே காரணமாகத் தொடர்ந்ததுவே
கும்மியடிக்கிறேன் கந்தன் கணபதி காப்பாரே
சத்தியவாக்கருளாய்
பால் நகர் சந்திரன் எத்திசை சேரும் நடராஜன்*
அம்மன் சொல்படி பந்தியாய் நின்று
பாடுவோமே கும்மி தாது வருஷத்தை
தலை விதிப்படியேதான் மழையெங்கும் இல்லாமல்
கன்னி மாதத்தில் ஓர் மழை பேயவும்
கண்டெடுத்த ஒரு புதையலைப் போலவே
----------
நடராஜன் - எழுதியவர் பெயர்.
தானியம் விதைத்தார்கள் தாதுவருஷத்தில்
சீமையில் மழைமாரி பூச்சிய மாகவே
தீய்ந்து பயிரெல்லாம் காய்ந்ததையா
அரைக்கீரை சோளம் சிறு நெல்லு கம்புக்கு
காரண மானதோர் புதன் சந்தையில்லை
எட்டு வள்ளம் விற்று இரண்டு வள்ள மாகி
துட்டமான பேர்களை மட்டடக்கி
தட்டுப்படாதுதைத்து வள்ளத்தில் வைத்து
கொட்டுப் பட்டாற் போல நிறுத்திற்றுமே
மாதமாம் தீபாவளிப் பண்டிகை வந்தது
ஆன பேர் களிப்புடன் கொண்டாட முடியாமல்
நோம்புகள் போச்சுதே, ஐயையோ கம்பு
கார்த்திகை மாதத்தில் முக்கால் வள்ளம் கூட
காணமுடியாமல் நாங்களும் தெம்பற்றோம்
காட்டை புழுது பயிரிடும் காராளக்
கவுண்டரெல்லாம் கவலேத்தமாட் டினை
தேடியே கட்டை வண்டியில் கட்டி
ஓடரோம் துரதேசமும் என்றாரே
போயங்கு தவசம் பிடித்திடக் கையில்
ஈயக் காசுக்கும் ஏதும் வழியில்லை
பூமியைக் கொதவு வைத்தாலும் ஆங்கே
பூரண காசுகள் தந்திடுவாரில்லை
காப்புக் கடகமும் தோள் வெண்டயமும்
காதுக் கொப்பு சில்லரை தாலியெல்லாம் விற்றாலும்
கட்டாது அந்த ரூபாயெல்லாம் உமக்கு
கவலை ஏத்த மாட்டு தீனிக்கே மட்டும்
பத்தாததிற்கு பணம் வேண்டும் என்றுமே
ஆடு மாடெல்லாம் விற்றெடுத்துக் கொண்டு
ஆறுபேர் ஏழுபேர் நாம் சேர்ந்து நல்ல
கும்பகோணம் தஞ்சாவூர் போவது என்றால்
புழுத்த சோளம் கம்பு புளிச்ச கீரை தின்ன
புடிச்சுமே காலரா போகும் எட்டுப் பேரில்
மூன்றுபேர் இரண்டுபேர் மூச்சுப் பிழைப்பார்கள்
எல்லாம் சிவன் செயல் என்றிடு வாரெல்லாம்
தினுசு வேலைகள் எட்டுமே செய்குவார்
சீமைகள் எங்கும் சுற்றித் திரிகுவார்
சோளச்சோறு வாயுக்கு சேராதென்று சொன்ன
சொகுசான மகராச மக்களுகளெல்லாம்
மழுங்கலாய் துட்டுக்கு புண்ணாக்கு வாங்கியே
மறைவுக்குப் போவாராம் உண்பதற்கே
புழுங்கலரிசிச் சாதம் சேராதுன்னு சொன்ன
புண்ணிய மகராச மக்களுகளெல்லாம்
மலைக் கத்தாழைக் குருத்தினைப் பிடுங்கியே
மண்திட்டு மறைவிலே மடுக்கிண்ணு கடிப்பாராம்
எப்பத்தான் நமக்கு காலம் செழிக்குமோ
உப்போ பணத்துக்கு இரண்டு படிவிலை
ஊருக்கிணத்திலே தண்ணியில்லை
நமக்கு எப்பவேகாலம் செழிக்குமென்றால்-துரைக்கு
அப்பவே விண்ணப்பம் போடலா மென்றார்.
வட்டார வழக்கு: கவுண்டர்-பயிரிடும் சாதியார்; கொதவு -ஒத்தி, அடைமானம்.
குறிப்பு: கடிப்பாராம்-நல்ல உணவைக் குறை கூறியவர்கள், புண்ணாக்கும் கற்றாழையும் தின்பார்கள்.
உதவியவர்: சின்னப்ப கவுண்டர் சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: மாடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
---------------