தாலாட்டு: ஆசாரி, வாரும்

bookmark

குழந்தைக்கு இப்பொழுது தொட்டில் வேண்டும். நல்ல தொட்டிலாக ஆக்கமுள்ள தொட்டிலாகச் செய்ய வல்லவர் கழுகுமலை ஆசாரி. அவரை அழைத்து தொட்டில் செய்ய வேண்டிக் கொள்ளுகிறாள் தாய்.

தொட்டிலில் கிடக்கும் இவன், அடுத்த வருஷம் நடை பயிலுவான் கால் முளைத்தால் அடுத்த தெருவிற்கு ஓடுவான், பந்தடிப்பான். அடுத்த தெருக்களிலுள்ள வேறு சாதி நண்பர்கள் இவனை அருமையாகக் கொண்டாடுவார்கள். அவர்கள் இவனை மதிக்க வேண்டுமானால் கை, காது, கழுத்து இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு அணிந்திருக்க வேண்டாமா? அதற்காகச் செட்டியாரிடம் ஆபரணங்கள் வாங்குகிறாள் தாய். தந்தை வந்ததும் பணம் கொடுத்து அனுப்புகிறார்.

ஆசாரி, ஆசாரி கழுகுமலை ஆசாரி 
கழுகுமலை ஆசாரி நான் பெத்தானுக்கு 
ஒரு நல்லூஞ்சல் கொண்டு வாரும் 
அடித்த கைக்கு மோதிரமும் 
அள்ளி விடச் சந்தனமும் 
செட்டிமார் தெருவிலே என் கண்ணே 
நீ சென்று விளையாடயிலே 
நான் பெத்தான், 
செட்டிமார் பெண்களெல்லாம் 
உன் செண்டு விலை மதிப்பார். 
பாப்பார தெருவிலே நான் பெத்தான் 
பந்து விளையாடயிலே 
பாப்பாத்திப் பெண்களெல்லாம் 
உன் பந்தை விலை மதிப்பார் 
வெள்ளி மலைத் தெக் கொதுங்கி 
வேடர் எல்லாம் தானோடி 
வேடர் அறியாம 
வேங்கை மரம் ஏது வள்ளி 
காசி விசுவரோட, மனம் 
கலங்காத கண்டனோட 
பேசும் கிளி ராஜனோட 
பின் துணையா வந்த கண்ணோ! 
மங்களா கட்டி 
மாமரங்கள் உண்டு பண்ணி! 
மங்களா முன்னாலே நீ 
மல்கோவா மாம்பழமோ! 
கொல்லையிலே தென்னை வைத்து
குருத் தோலை பெட்டி செய்து 
சீனி போட்டுத் திங்க-நீ 
செல்லமாய்ப் பிறந்தவனோ! 
பட்டெடுத்தாலும் தொட்டி கெட்ட 
பசும் பொன்னெடுத்து பொட்டுரைக்க 
ஆட்டுங்க தாதியரே 
என் அன்னக்கிளி கண்ணயர 
வாருமய்யா வளையல் செட்டி, 
வந்திறங்கும் பந்தலிலே 
கோல வளையல் தொடும் 
குணத்துக்கொரு வளையல் தொடும் 
நீல வளையல் தொடும் 
நான் பெத்தானுக்கு 
நிறத்துக்கொரு பச்சை தொடும் 
வளையல் தொட்ட செட்டி 
வயிறு எரிந்து போகாம 
அள்ளிப்பணம் கொடுத்து 
அனுப்பி வைத்தார் உங்களப்பா 
கல்லெடுத்து கனி சொறிஞ்சு 
கம்சனையே மார் வகுத்து 
ரூபம் செய்யும் மாயன் பெருமாளோ! 
பச்சை முடிமன்னரோ 
பவழமுடி இராவணரோ 
அச்ச மெல்லாம் தீர்க்க வந்த 
ஆதி நாராயணரோ 
பால் குடிக்கக் கிண்ணி, 
பழம் திங்க சேனோடு 
நெய் குடிக்கக் கிண்ணி, 
நிலம் பார்க்கக் கண்ணாடி 
கொண்டைக்குக் குப்பி 
கொண்டு வந்தார் தாய்மாமன் 
கல்லெடுத்துக் கனி யெறிந்து உங்க மாமா 
காளி யோட வாதாடி, 
வில்லெடுத்து படை திரட்டும் நீ 
வீமன் மருமகனோ! 
தவளை குலவையிட கோந்த மூர்த்தி 
தாமரையும் பூமலர 
தவளைச் சத்தம் கேட்டு இராமர்

தள்ளி நடகொண்டாரோ! 
காத்தடியா மூலையிலா 
கர்ணனுக்குத் தொட்டி கட்டி 
காத்தடிக்க நேர மெல்லாம் 
கர்ணன் தொட்டில் வீணை இசையாம் 
வெயிலடியா மூளையிலே 
வீமனுக்குந் தொட்டி கட்டி 
வெயிலடிக்க நேர மெல்லாம் 
வீமன் தொட்டில் தானாட 
தங்க வில்லை சேவுகரோ, உங்கமாமா 
தரும வைத்தியரோ 
செங்கல் சிகப்பரோ உங்கமாமா 
சீமைக்கு அதிபதியோ! 
அதிக சிகப்பரோட ஆசை மருமகனோ! 
காஞ்சிவரத் தெண்ணை 
கண்ணே கரிக்குதிண்ணு 
தென் காசி எண்ணெய்க்கு உங்கப்பா 
சீட்டெழுதி விட்டாக 
வாசலிலே வண்ணமரம் உங்களப்பா! 
வம்சமே இராச குலம் 
இராச குலம் பெற்றெடுத்த 
இரதமணியே கண்ணசர 
பூனைப் பால் பீச்சி 
புலிப்பால்ல உறையூத்தி 
ஆனைப்பால் காயுதில்ல உங்களப்பா 
அதிகாரி வாசலிலே 
வெள்ளி முழுகி என் கண்ணே உன்னை 
வெகு நாள் தவசிருந்து 
சனி முழுகி நோம்பு இருந்து 
நீ தவம் பெற்று வந்தவனோ! 
பால் சங்கு போட்டி 
பவள வாய் நோவுதின்னு 
பொன் சங்கு வாங்க 
போராக உங்களப்பா 
கடைக்குக் கடைபார்த்து 
கல் பதித்த சங்கு பார்த்து 
எடைக்கு எடைபார்த்து 
எதிர் எடைக்குப் பொன் வார்த்து

வாங்கி வந்தார் தாய்மாமன்!
எண்ணெய்க் கிணறுகளாம்,
எதிரே கொடிமரமாம்
தண்ணீர்க் கிணறுகளாம்
தட்டான் குளத்தா
தங்கி இருக்கும் மண்டபமாம்
மண்டபத்துக் குள்ளிருந்து
தட்டான் குளத்தா
மடிக் குழந்தை தந்தாளாம்
தங்க விளக்கெரிய
உங்க தாத்தா வாசலிலே
விடி லாந்தல் நிண்ணெறிய
வீம ராஜா வாசலிலே
நீ விளையாட வந்த கண்ணோ!
மட்டம் சிறு குழந்தை உங்கள்
மாமனார் தேசமெங்கள்
அன்னா தெரியுதில்லா உங்க மாமன்மார்
அன்னக் களஞ்சியங்கள்
முட்டாயிப் பெட்டி கொண்டு
முதல் தரத்துச் சீனி கொண்டு
பன்னிருச் செம்பு
பார்க்க வாராக உங்களம்மான்
வட்டார வழக்கு: மங்களா-பங்களா; தொட்டி-தொட்டில்; கெட்ட-கட்ட; 
மார்-மார்பு; தட்டான் குளத்தா-நாட்டார் தெய்வம்.

குறிப்பு: தட்டான்குளத்தா-இது தாயின் பரம்பரை ஊர். அம்மனாகவோ, அல்லது குலதெய்வமாகவோ இருக்கும். ஒரு ஊரில் வசிப்பவர்கள் தூரத்து ஊர்களில் குலதெய்வம் இருப்பதுண்டு. 

சேகரித்தவர்: P. சொரணம் 
இடம்: நெல்லை மாவட்டம்
-----------