தாலாட்டு: உங்கள் அப்பா

இத் தாலாட்டில் தாய், "தன் கணவன் பெருமையையும், மாமனார் பெருமையையும் பற்றி குழந்தைக்கு எடுத்துரைக்கிறாள. சிவகிரி ஜமீனில் கணக்கராக வேலை செய்யும் அவளுடைய கணவரை அவள்,
"கோடு திறந்து குரிச்சிமேல் உட்கார்ந்து
கோட்டார் வழக்குப் பேசும்
குமாஸ்தா உங்களாய்யா."
என்று படம் தீட்டிக் காட்டுகிறாள்.
தனித்தமிழில் புதிய சொற்களைப் படைக்கும் பிரம்மாக்கள் இவளுடைய தமிழை பின்வருமாறு திருத்தி விடுவார்கள்: கோடு(ஆங்கிலம்)-அறங்கூறவையம், குரிச்சி-(அரபு) நாற்காலி, கோட்டார்-நடுவர், குமாஸ்தா-(பெர்ஸியன்) எழுத்தர். இவற்றுள் நாற்காலி தவிர, பிற சொற்கள் நமது தமிழ்ப் பெண்களுக்கு விளங்காது. அச்சொற்கள் என்ன மொழி சொற்கள் என்று தாலாட்டுப் பாடும் தாய்மாரைக் கேட்டால், அவர்கள் தமிழென்றே சொல்லுவார்கள். தமிழினியற்கை மாறாமல் பிறசொற்களைப் பெண்கள் திரித்து வழங்கி தமிழ்ச் சொற்களஞ்சியத்தை பெருக்கி வருகிறார்கள். இம்முறைகளை மொழி இயலார் ஆராயவேண்டுமேயன்றி,இப்படித்தான் பேச வேண்டும் என்று உத்திரவிட எவர்களுக்கும் உரிமையில்லை. உத்திரவிட்டாலும் பேச்சு வழக்கை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது.
இந்தத் தாய் குழந்தையின் முன்னோர் செய்து வைத்திருக்கும் தான தருமங்களை எல்லாம் கூறி, ஒளவையின் முதல் அறிவுரையான "அறஞ்செய விரும்பு" என்னும் கருத்தை மகனுக்குப் புகட்டுகிறாள். தந்தை, தமது குழந்தைக்குப் பால் புகட்ட வாங்கிய சங்கின் அருமை பெருமைகளை அழகாக வருணித்துச் சொல்லுகிறாள்.
ஒசந்த தலைப்பாவாம்
உல்லாச வல்லவட்டாம்
நிறைஞ்ச சபையில்
நிப்பாக உங்களய்யா,
கோடு திறந்து
குரிச்சிமேல் உட்கார்ந்து
கோட்டார் வழக்குப் பேசும்
குமாஸ்தா உங்களய்யா,
அத்திமரம் குத்தகையாம்
அஞ்சு லக்ஷம் சம்பளமாம்
அய்க்கோடு வேலைக்கு
அநேகம் பேர் வந்தாக
காஞ்சி வனத் தண்ணே,
கண்ணே கரிக்குதுண்ணு
தெங்காஞ்சி எண்ணெய்க்கே
சீட்டெழுதி விட்டாக
பால் சங்கு போட்டு,
பவளவாய் நோகுதிண்ணு,
பொன் சங்கு வாங்க
போராக பொன் மருத,
மருதக்கட திறந்து
மனசுக் கேத்த சங்கெடுத்து,
சுத்தி வர சிகப்பு வச்சு,
துருக்கோர் பச்சை வச்சு
வாயிக்கு வர்ணம் வச்சு
வாங்கி வந்தாக ஒங்களய்யா!
மருத அழகரோ
வாழ் மருத சொக்கரோ,
திருமால் அழகரோட
சேதிக்கோ வந்தவனோ
கல்லிய நெல் விளையும்
கானலெல்லாம் பூமணக்கும்
புல்லிள நெல் விளையும்
புண்ணியனார் போற பாதை
குளிக்கக் கிணறு வெட்டி
கும்பிட வோர் கோயில் கட்டி
படிக்க மடம் கட்டி வைக்க
பாண்டியனார் பேரனோ-
வட்டார வழக்கு: அய்க்கோடு-ஹைக்கோர்ட்; காஞ்சிவனம்-காஞ்சிபுரம்;
மருத-மதுரை; தென்காஞ்சி-தென்காசி; போராக, வந்தாக-போகிறார்கள்,வந்தார்கள்.
குறிப்பு: கிணறு வெட்டுதல், கோயில் கட்டுதல், மடம் கட்டுதல் என்பது தான தருமங்களாகும்.
சேகரித்தவர்: கார்க்கி
இடம்: சிவகிரி.
-------------------