திண்ணன் என்ற மறவன் கதை

திண்ணன் என்ற மறவன் கதை

bookmark

கேளாய் ராஜகேஸரியாகிய வீரவர்மனே, முன்னொரு காலத்தில் மதுரையிலே விக்கிரம பாண்டியன் அரசு செலுத்தியபோது காலாட்படையிலே திண்ணன் என்றொரு மறவன் இருந்தான். 

அவன் ஒரு நாள் மாலையில் அரண்மனைப் பக்கமாக நடந்து போகையில் உச்சி மாடத்தின் மேலே பாண்டியன் மகளாகிய தர்மலக்ஷ்மி என்ற பெண் பந்தாடிக் கொண்டிருந்ததைக் கண்டு மிகவும் காதல் கொண்டவனாய் அவளை மணம் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்பினான். 

அப்பால் அவன் ஒரு சோதிட சாஸ்திரியினிடம் போய், "ஒருவன் ராஜாவின் மகளை மணம் செய்துகொள்ள விரும்பினால் அதற்கு எவ்விதமான பூஜை நடத்த வேண்டும்?" என்று கேட்டான்.

"நீ யார்? உனக்கென்ன தொழில்?" என்று சோதிடன் கேட்டான்.

"நான் காலாட்படை மறவன். என் பெயர் திண்ணன்" என்று இவன் சொன்னான். 

இதைக் கேட்டவுடன் சோதிடன் “என்னிடம் கேட்காதே, ஓடிப்போ” என்று சொல்லித் துரத்திவிட்டான். 

பிறகு திண்ணன் மீனாக்ஷியம்மன் கோயிலில் பூஜைசெய்யும் குருக்கள் ஒருவரிடம் போய்க் கேட்டான். அந்தக் குருக்களென்ன செய்தார்? "அப்பா! நீ இன்னும் ஒரு வருஷம் கழிந்த பிறகு என்னிடம் வந்து இதைக் கேள். அப்போது மறுமொழி சொல்லுகிறேன். அதுவரை சொல்ல முடியாது" என்று போக்குச் சொல்லி அனுப்பி விட்டார். 

பிறகு திண்ணன் ஒரு மந்திரவாதியிடம் போய்க் கேட்டான். அந்த மந்திரவாதி 
சொல்லுகிறான்: - "தம்பி, பதினாறு பொன் கொண்டுவந்து கொடு. நான் ஒரு பூஜை நடத்தி முடித்து உன்னுடைய மனோரதம் நிறைவேறும்படி செய்விக்கிறேன்" என்றான்.

திண்ணன் திரும்பிப் போய்விட்டான். அவனிடம் பதினாறு வெள்ளிக் காசுகூடக் கிடையாது. அவன் ஏழைப்பிள்ளை. 

இதன் பிறகு `யாரைப் போய்க் கேட்கலா`மென்று யோசனை செய்து பார்த்தான். "நேரே, ராஜாவின் மகளையே கேட்டு விட்டாலென்ன?" என்று அவன் புத்தியில் ஒரு யோசனை யேற்பட்டது. "சரி. அப்படியே செய்வோம்" என்று தீர்மானம் பண்ணிக் கொண்டான். 

அவனுக்குப் பக்கத்து வீட்டிலிருந்த ஒரு பூவாணிச்சியின் மகள் நாள்தோறும் அரண்மனைக்கு மாலை கட்டிக் கொண்டு கொடுத்து வருவது வழக்கம். அந்தப் பெண் திண்ணனுக்கு நெடுநாளாகப் பழக்கமுண்டு. இவன் என்ன சொன்ன போதிலும் அந்தப் பெண் கேட்பாள். ஆதலால், இவன் ஒரு சிறிய நறுக்கோலையில், 
"மன்னன் மகளே, காலாள் மறவன்
என்ன செய்தால், உன்னைப் பெறலாம்?"
என்ற வாக்கியத்தை எழுதி, அந்த நறுக்கோலையை மிகவும் அழகானதொரு பூமாலைக்குள் நுழைத்து வைத்து, அந்தப் பூவாணிச்சிப் பெண்ணிடம் கொடுத்து "நீ இதை அரசன் மகள் முன்னாலே கொண்டு போய் ஒரு தரம் உதறி விட்டு மாலையை அவளிடம் கொடு" என்று சொல்லியனுப்பினான். அவளும் அப்படியே பூமாலையைக் கொண்டு ராஜகுமாரியின் முன்னே ஒரு தரம் உதறிய பின்பு, அதைக் கொடுத்துவிட்டுத் திரும்பி வீடு வந்து சேர்ந்தாள். 

ராஜகுமாரி அந்த நறுக்கோலை கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதையெடுத்து வாசித்தாள்:-
"மன்னன் மகளே, காலாள் மறவன்
என்ன செய்தால் உன்னைப் பெறலாம்?"

அங்கிரன் என்ற புரோகிதப் பருந்து சொல்லுகிறது: கேளாய் வீரவர்ம ராஜனே, அந்தப் பூவாணிச்சிப் பெண் மாலையை உதறினபோது நறுக்கோலை கீழே விழுவதை ராஜகுமாரி பார்த்தாள். பூவாணிச்சிப் பெண் அரண்மனையிலிருந்து தன் வீட்டுக்குத் திரும்பிப் போனவுடனே திண்ணன் அவளைக் கண்டு "ராஜகுமாரியிடம் மாலையைக் கொடுத்தாயா?" என்று கேட்டான். ஆமென்றாள். "உதறினாயா?" என்று கேட்டான். "செய்தேன்" என்றாள். சரியென்று சொல்லிப் போய் விட்டான். 

மறுநாட் காலையில் பூவாணிச்சிப் பெண் வழக்கம் போலே அரண்மனைக்கு மாலை கொண்டு போனாள். 

அப்போது ராஜகுமாரி அந்தப் பெண்ணிடம் ஒரு நறுக்கோலையைக் கொடுத்து "நேற்று உன்னிடம் மாலை கொண்டு தந்த காலாள் மறவனிடம் இதைக் கொண்டு கொடு" என்றாள்.

பூவாணிச்சிப் பெண் திகைத்துப் போய்விட்டாள். "பயப்படாதே; கொண்டுபோ" என்று ராஜகுமாரி சொன்னாள். பூவாணிச்சிப்பெண் நறுக்கோலையைக் கொண்டு திண்ணனிடம் கொடுத்தாள். அவன் வாசித்துப் பார்த்தான். அதிலே "தெய்வமுண்டு" என்றெழுதி யிருந்தது. பின்னொரு நாள் திண்ணன் தனியேயிருந்து யோசிக்கிறான்: -

"இந்த அரசன் மகள் நம்மைப் பரிகாஸம் பண்ணமாட்டாள். ஏதோ நல்ல வழிதான் காட்டியிருக்கிறாள். தெய்வத்தை நம்பினால் பயன் கிடைக்குமென்று சொல்லுகிறாள். சரி. அப்படியே நம்புவோம்......அந்தக் காலத்தில் தெய்வம் தவம் பண்ணுவோருக்கு நேரே வந்து வரம் கொடுத்ததென்று சொல்லுகிறார்கள். இந்த நாளில் அப்படி நடப்பதைக் காணோம்......அடா போ! பழைய காலமேது? புதிய காலமேது? தெய்வம் எந்தக் காலத்திலும் உண்டு. தெய்வத்தைக் குறித்துத் தவம் பண்ணுவோம். வழி கிடைக்கும்" என்று சொல்லி ஒரு காட்டுக்குப் போய், அங்கே காய்கனிகளைத் தின்று சுனை நீரைக் குடித்துக் கொண்டு தியானத்திலே நாள் கடத்தினான். 

அந்தக் காட்டில் இவனுக்கும் ஒரு வேடனுக்கும் பழக்கமுண்டாயிற்று. அந்த வேடன் இவனுடைய தவப்பெருமையையும் இவன் முகவொளியையும் கண்டு, இவனிடம் மிகுந்த பிரியங் கொண்டவனாய் இவனுக்கு மிகவும் சுவையுடைய தேனும் கிழங்குகளும் கொண்டு கொடுப்பான். இவன் வேடனுக்கு தெய்வபக்தி யேற்படுத்தினான். 

ஒருநாள் அந்த வேடன் இவனிடம் ஒரு மூலிகை கொண்டு கொடுத்து, "இது மிகவும் ரகஸ்யமான மூலிகை. இதைப் பத்திரமாக வைத்துக்கொள்ளு. ஒருவனுடம்பில் எத்தனை பெரிய புண் இருந்தாலும், இந்த மூலிகையில் தினையளவு அரைத்துப் பூசினால், புண் இரண்டு ஜாமத்துக்குள் ஆறிப் போய் விடும்" என்றான். அதை இவன் பத்திரமாக வைத்துக் கொண்டான். 

திண்ணன் குடியிருந்த பர்ண சாலைக்கருகே ஒரு பாம்புப் புற்றிருந்தது. அதில் கிழ நாகம் ஒன்று வசித்தது. அதை ஒரு நாள் வேடன் கண்டு கொல்லப் போனான். அப்போது திண்ணன்:- "ஐயோ பாவம்! கிழப்பாம்பு அதைக் கொல்லாதே. அது நெடு நாளாக இங்கிருக்கிறது. என்னை ஒன்றும் செய்வதில்லை. அதன் வழிக்கு போகாதே" என்று சொல்லித் தடுத்து விட்டான். 

பின்னொரு நாள் அந்தப் பாம்பு தனியே செத்துக் கிடந்தது. அந்தப் பாம்பு சாகும்போது கக்கினதோ வேறென்ன விநோதமோ - அந்தப் பாம்புக்கருகே ஒரு பெரிய ரத்தினம் கிடந்தது. அதை நாகரத்தின மென்று திண்ணன் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டான்; அன்றிரவிலே திண்ணன் ஒரு கனவு கண்டான். அதில் அவனுடைய இஷ்ட தேவதையாகிய மீனாக்ஷியம்மை தோன்றி, "உனது தவத்தால் மகிழ்ந்து உனக்கு நாகரத்தினம் கொடுத்தேன். இதைக் கொண்டு போய் சௌக்யமாக வாழ்ந்துகொண்டிரு" என்றாள். 

திண்ணன் அந்தக் கனவை நம்பவில்லை. "நம்முடைய நினைவினாலேயே இந்தக் கனவுண்டாயிருக்கிறது. தெய்வமாக இருந்தால், ராஜகுமாரி வேண்டுமென்று தவஞ்செய்ய வந்தவனிடம் நாகரத்தினத்தைக் கொடுத்து வீட்டுக்குப் போகச் சொல்லுமா? செய்யாது. ஆதலால் இந்தக் கனவு தெய்வச் செய்கையன்று, நம்முடைய மனதின் செய்கை" என்று தீர்மானம் செய்து, அந்தக் காட்டிலேயே எப்போதும்போல தவஞ் செய்து கொண்டிருந்தான்.

பிறகொரு நாள், அந்தக் காட்டில் விக்கிரம பாண்டியன் வேட்டைக்கு வந்தான். அவன் திண்ணனைக் கண்டு "நீர் யார்? இந்த வனத்தில் எத்தனைக் காலமாகத் தவம் செய்கிறீர்?" என்று கேட்டான். 

அப்போது திண்ணன் சொல்லுகிறான்: "நான் பாண்டிய நாட்டு மறவன். என் பெயர் திண்ணன். இங்குப் பல வருஷங்களாகத் தவஞ்செய்கிறேன், காலக் கணக்கு மறந்துபோய் விட்டது" என்றான்.

"என்னைத் தெரியுமா? நான் பாண்டிய நாட்டரசன்" என்று பாண்டியன் சொன்னான்.

"தெரியும்" என்று திண்ணன் சொன்னான்.

அரசன் இந்த மறவனுடைய அழகையும், ஒளியையும் கண்டு வியந்து: "இந்த இளமைப் பிராயத்தில் இவ்வனத்திலே என்ன கருத்துடன் தவம் செய்கிறீர்?" என்று கேட்டான்.

"மதுரை யரசன் மகளை மணம் செய்யவேண்டித் தவம் செய்கிறேன்" என்று திண்ணன் சொன்னான்.

அரசன் திகைப்படைந்து போய், "எங்ஙனம் கைகூடும்! அம்மவோ" என்றான்.

"மீனாக்ஷி கேட்ட வரம் கொடுப்பாள்" என்று திண்ணன் சொன்னான்.

"மன்னன் மகளுக்கு நீ என்ன பரிசம் கொடுப்பாய்?" என்று பாண்டியன் கேட்டான்.

"புண்ணைத் தீர்க்க மூலிகையும், மண்ணைச் சேர்க்க நாகரத்தினமும் கொடுப்பேன்" என்று திண்ணன் சொன்னான்.

அரசன் அவ்விரண்டையும் காட்டும்படி சொன்னான். திண்ணன் காட்டினான். வேட்டையிலே புண்பட்ட மானுக்கு அந்த மூலைகையை அரைத்துப் பூசினார்கள். உடனே புண்தீர்ந்து விட்டது. 

இந்தத் திண்ணனுடைய தவப்பெருமையும், அதனாலே கைகூடிய தெய்வ அருளும் அவன் முதத்திலும், விழியிலும் சொல்லிலும், செய்கையிலும் விளங்குவது கண்டு பாண்டியன் மனமகிழ்ச்சியுடன், அவனுக்கே தனது மகளை மணஞ்செய்து கொடுத்தான். ஆதலால், எதிர்பார்க்க முடியாத பயன் உலகத்தார் கண்டு வியக்கும்வண்ணமாக ஒருவனுக்குக் கைகூடவேண்டுமானால் அதற்குத் தெய்வ பக்தியே உபாயம்" என்று பருந்து சொல்லிற்று.

அப்போது அந்த சபையிலே சேனாபதி அக்நிகோபன் மகனாகிய ரணகுமாரன் என்ற இளம்புலியும், தந்திரசேனன் மகன் உபாய வஜ்ரன் என்ற நரியும், வேறு பல புலி, நரிகளும், தம்முடன் உடம்பு முழுதும் புண்பட்டு இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்த சிங்கமொன்றை இழுத்துக்கொண்டு ராஜசபையில் உத்தரவு பெற்றுக்கொண்டு வந்து வணங்கி நின்றன.

அந்தப் புண்பட்ட, கைதிச் சிங்கம் யாரென்றால், அது தான் பேய்க்காட் டரசனாகிய தண்டிராஜன்!

இந்த ஆச்சரிய விளைவைக் கண்டு வீரவர்மன் புன்னகை செய்தது. விகாரன் என்ற பேய்க்காட்டு நரி மூர்ச்சை போட்டு விழுந்தது. புரோகிதர். சேனாபதிகள் வீரவர்மனை வாழ்த்தி அவனுடைய சத்துரு இத்தனை நாளாகக் கைதிப்பட்டு வந்த மகிழ்ச்சியை விழியினாலே தெரிவித்தன.