திரிபுவனம்

பாடல் 862
தனதன தனதன தனதன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான
தனுநுதல் வெயர்வெழ விழிகுழி தரவளை
சத்திக் கச்சில தித்திக் கப்படும் ...... அன்புபேசித்
தழுவிய மகளிர்த முகிழ்முலை யுரமிசை
தைக்கச் சர்க்கரை கைக்கப் பட்டன ...... தொண்டையூறல்
கனவிலு நுகர்தரு கலவியின் வலையிடை
கட்டுப் பட்டுயிர் தட்டுப் பட்டழி ...... கின்றதோதான்
கதிபெற விதியிலி மதியிலி யுனதிரு
கச்சுற் றச்சிறு செச்சைப் பத்மப ...... தம்பெறேனோ
முனைமலி குலிசைதன் ம்ருகமத புளகித
முத்தச் சித்ரத னத்துக் கிச்சித ...... அம்புராசி
முறையிட முதுநிசி சரர்திரள் முதுகிட
முட்டப் பொட்டெழ வெட்டிக் குத்தும ...... டங்கல்வீரா
அனுபவ மளிதரு நிகழ்தரு மொருபொருள்
அப்பர்க் கப்படி யொப்பித் தர்ச்சனை ...... கொண்டநாதா
அகிலமு மழியினு நிலைபெறு திரிபுவ
னத்துப் பொற்புறு சித்திச் சித்தர்கள் ...... தம்பிரானே.