திருக்கற்குடி

பாடல் 563
தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத்
தனத்தத் தனத்தத் ...... தனதான
குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக்
குவட்டைச் செறுத்துக் ...... ககசாலக்
குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கிக்
குருத்தத் துவத்துத் ...... தவர்சோரப்
புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப்
புறப்பட்ட கச்சுத் ...... தனமாதர்
புணர்ச்சிச் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப்
புரித்துப் பதத்தைத் ...... தருவாயே
கடத்துப் புனத்துக் குறத்திக்கு மெத்தக்
கருத்திச்சை யுற்றுப் ...... பரிவாகக்
கனக்கப்ரி யப்பட் டகப்பட்டு மைக்கட்
கடைப்பட்டு நிற்கைக் ...... குரியோனே
தடத்துற் பவித்துச் சுவர்க்கத் தலத்தைத்
தழைப்பித்த கொற்றத் ...... தனிவேலா
தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத்
தருக்கற் குடிக்குப் ...... பெருமாளே.
பாடல் 564
தனத்தத் தனத்தத் தத்த
தனத்தத் தனத்தத் தத்த
தனத்தத் தனத்தத் தத்த ...... தனதான
நெறித்துப் பொருப்புக் கொத்த
முலைக்குத் தனத்தைக் கொட்டி
நிறைத்துச் சுகித்துச் சிக்கி ...... வெகுநாளாய்
நினைத்துக் கொடத்துக் கத்தை
யவத்தைக் கடுக்கைப் பெற்று
நிசத்திற் சுழுத்திப் பட்ட ...... அடியேனை
இறுக்கிப் பிடித்துக் கட்டி
யுகைத்துத் துடிக்கப் பற்றி
யிழுத்துத் துவைத்துச் சுற்றி ...... யமதூதர்
எனக்குக் கணக்குக் கட்டு
விரித்துத் தொகைக்குட் பட்ட
இலக்கப் படிக்குத் தக்க ...... படியேதான்
முறுக்கித் திருப்பிச் சுட்டு
மலத்திற் புகட்டித் திட்டி
முழுக்கக் கலக்கப் பட்டு ...... அலையாமல்
மொழிக்குத் தரத்துக் குற்ற
தமிழ்க்குச் சரித்துச் சித்தி
முகத்திற் களிப்புப் பெற்று ...... மயிலேறி
உறுக்கிச் சினத்துச் சத்தி
யயிற்குத் தரத்தைக் கைக்குள்
உதிக்கப் பணித்துப் பக்கல் ...... வருவாயே
உனைச்சொற் றுதிக்கத் தக்க
கருத்தைக் கொடுப்பைச் சித்தி
யுடைக்கற் குடிக்குட் பத்தர் ...... பெருமாளே.