திருடன் சொல்லிய நன்றி

bookmark

ஒரு ஊரில் ஜென் துறவி ஒருவர் இருந்தார். அவருடைய ஆசிரமத்துக்குள் திடீரென ஒரு திருடன் புகுந்து விட்டான். திருடனைப் பார்த்த துறவி பயப்படவில்லை. பதறவில்லை. 

 உனக்கு என்ன வேண்டுமோ அதனை எடுத்துக் கொள் என்று அந்தத் திருடனிடம் கூறினார். துறவி கூறியதைக் கேட்டத் திருடனுக்கு ஒரே ஆச்சர்யம். 

 அவரே எடுத்துக் கொள்ள சொல்லும்போது ஏன் விட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என்று எண்ணியத் திருடன் கண்ணில் பட்ட பொருள்களையெல்லாம் சுருட்டிக்கொண்டு கிளம்பினான். 

 அவன் புறப்படும் நேரத்தில் துறவி அவனை அழைத்தார். கொஞ்ச நேரம் பொறு என்றார். அதற்கு அவன் ஏன் சாமி போலிஸைக் கூப்பிடப்போறீங்களா? என்று கேட்டான். 

 அதெல்லாம் இல்லை. என்கிட்டேயிருந்து இத்தனை பொருள் எடுத்துக்கிட்டு ப் போறியே, எனக்கு நன்றி சொல்லமாட்டியா? என்று கேட்க, திருடன் ரொம்ப நன்றி சாமி என்று கூறிவிட்டு ஓடி மறைந்து விட்டான். சில நாள்கள் கழித்து, போலிஸ் அந்தத் திருடனைப் பிடித்துவிட்டது. அவன்மீது வழக்குத் தொடுத்தார்கள். 

 சாட்சி சொல்ல ஜென் துறவியை அழைத்தார்கள். அவரும் வந்தார். நீதிபதிமுன் நின்றார். ஐயா, இந்த இளைஞனை எனக்குத் தெரியும். ஆனால் இவன் திருடன் இல்லை! என்றார். 

 என்னங்க சொல்றீங்க? எல்லோரும் இவனைத் திருடன்னுதானே சொல்றாங்க?. இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் இவனுக்குச் சில பொருள்களைக் கொடுத்தேன். 

 அவன் அதற்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றான். கணக்கு சரியாகிவிட்டது என்றார். இதைக் கேட்ட திருடன் மனம் திருந்தினான்.