திருவாலங்காடு

bookmark

பாடல் 673
தனதானந் தானன தானன 
தனதானந் தானன தானன 
தனதானந் தானன தானன ...... தனதான 


கனவாலங் கூர்விழி மாதர்கள் 
மனசாலஞ் சால்பழி காரிகள் 
கனபோகம் போருக மாமிணை ...... முலைமீதே 

கசிவாருங் கீறுகி ளாலுறு 
வசைகாணுங் காளிம வீணிகள் 
களிகூரும் பேயமு தூணிடு ...... கசுமாலர் 

மனவேலங் கீலக லாவிகள் 
மயமாயங் கீதவி நோதிகள் 
மருளாருங் காதலர் மேல்விழு ...... மகளீர்வில் 

மதிமாடம் வானிகழ் வார்மிசை 
மகிழ்கூரும் பாழ்மன மாமுன 
மலர்பேணுந் தாளுன வேயரு ...... ளருளாயோ 

தனதானந் தானன தானன 
எனவேதங் கூறுசொல் மீறளி 
ததைசேர்தண் பூமண மாலிகை ...... யணிமார்பா 

தகரேறங் காரச மேவிய 
குகவீரம் பாகும ராமிகு 
தகைசாலன் பாரடி யார்மகிழ் ...... பெருவாழ்வே 

தினமாமன் பாபுன மேவிய 
தனிமானின் தோளுட னாடிய 
தினைமாவின் பாவுயர் தேவர்கள் ...... தலைவாமா 

திகழ்வேடங் காளியொ டாடிய 
ஜெகதீசங் கேசந டேசுரர் 
திருவாலங் காடினில் வீறிய ...... பெருமாளே. 
பாடல் 674
தந்தானந் தாத்தம் தனதன 
தந்தானந் தாத்தம் தனதன 
தந்தானந் தாத்தம் தனதன ...... தனதான 


பொன்றாமன் றாக்கும் புதல்வரும் 
நன்றாமன் றார்க்கின் றுறுதுணை 
பொன்றானென் றாட்டம் பெருகிய ...... புவியூடே 

பொங்காவெங் கூற்றம் பொதிதரு 
சிங்காரஞ் சேர்த்திங் குயரிய 
புன்கூடொன் றாய்க்கொண் டுறைதரு ...... முயிர்கோல 

நின்றானின் றேத்தும் படிநினை 
வுந்தானும் போச்சென் றுயர்வற 
நிந்தாகும் பேச்சென் பதுபட ...... நிகழாமுன் 

நெஞ்சாலஞ் சாற்பொங் கியவினை 
விஞ்சாதென் பாற்சென் றகலிட 
நின்தாள்தந் தாட்கொண் டருள்தர ...... நினைவாயே 

குன்றால்விண் டாழ்க்குங் குடைகொடு 
கன்றாமுன் காத்துங் குவலய 
முண்டார்கொண் டாட்டம் பெருகிய ...... மருகோனே 

கொந்தார்பைந் தார்த்திண் குயகுற 
மின்தாள்சிந் தாச்சிந் தையில்மயல் 
கொண்டேசென் றாட்கொண் டருளென ...... மொழிவோனே 

அன்றாலங் காட்டண் டருமுய 
நின்றாடுங் கூத்தன் திருவருள் 
அங்காகும் பாட்டின் பயனினை ...... யருள்வாழ்வே 

அன்பால்நின் தாட்கும் பிடுபவர் 
தம்பாவந் தீர்த்தம் புவியிடை 
அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே. 
பாடல் 675 
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த 
தனதன தானந் தாத்த ...... தனதான 


புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி 
புதுமன மானும் பூட்டி ...... யிடையூடே 

பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி 
புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம் 

பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி 
பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப் 

படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி 
பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே 

சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க 
திருநட மாடுங் கூத்தர் ...... மருகோனே 

திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற 
ஜெகமொடு வானங் காக்க ...... மயிலேறிக் 

குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி 
குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா 

குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில் 
குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே. 
பாடல் 676 
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த 
தனதன தானந் தாத்த ...... தனதான 


வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி 
வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம் 

மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு 
மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன் 

படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற 
பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப் 

பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த 
பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே 

முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில் 
முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே 

முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி 
முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய் 

இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி 
யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி 

இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி 
யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே.