தூக்கிவிடும் !

கதிர்க் கட்டை தூக்கிவிடும்படி அறுவடைக்கு வந்த கையாளான பெண் வேண்டிக் கொள்கிறாள். களம் தூரமாயிருக்கிறாதாம். அங்கே அவருடைய மாமன் வட்டம் உதறக் காத்திருக்கிறானாம்.
ஊரோரம் கதிரறுத்து
உரலுப்போல கட்டுக்கட்டி
தூக்கிவிடும் கொத்தனாரே
தூரகளம் போய்ச்சேர
தும்பமலர் வேட்டி கட்டி
தூக்குப்போணி கையிலேந்தி
வாராக எங்க மாமா
வட்டம் உதறுதற்கே
வட்டார வழக்கு : போணி-பாத்திரம் (சோறு கொண்டு வருவதற்குப் பயன்படும்) வாராக-வருகிறார்கள். (க என்பது ஹ என்று உச்சரிக்கப்படும்)
சேகரித்தவர்: S.M.கார்க்கி
இடம்: சிவகிரி,நெல்லை.
----------