தூண்டில் மீன்

bookmark

காதல் பாட்டாயினும் தொழிலின் மணம் அதில் வீசுவதைக்காணலாம். களை பிடுங்கும்போதும், அறுவடையின்போதும்,ஏருழும்போதும், மலையேறி விறகொடிக்கும்போதும், புல்லறுக்கும்போதும், முகிழ்த்து மலரும் காதலை வெளியிடும் பாடல் சூழ்நிலையின் பின்னணியையும் சித்திரிக்கிறது. நாட்டுப் பாடலின் சிறப்பு அம்சம் அதுதான். தொழிலும் காதலும் இணைந்து செல்லுகின்றன.

இங்கு மீன் பிடிக்கும் தொழில் செய்யும் குடும்பத்தில் தோன்றிய இளநங்கை தனது காதலை வெளியிடுகிறாள். காதல், கற்பனையோடு கலந்து தொழிலின் உவமைகளை மேற்கொண்டு பாட்டாகப் பிறக்கிறது.

இப்பாடலில் தொழிலின் மணம் வீசுவதைக் காணலாம். இது தோணிப்பாட்டாகவும் அமைந்திருக்கிறது.

ஏரியும் பெரியேரியாம் 
ஏலேலோசாமிஏலேலோ 
அக்கரையும் பொன்னேரியாம் 
ஏலேலோ சாமி ஏலேலோ 
பொன்னேரிக் கரையின் மேலே 
ஏலேலோ சாமி ஏலேலோ 
போட்டானாம் தூண்டி முள்ளு 
ஏலேலோ சாமி ஏலேலோ 
தூண்டிக்கும் துண்டாவேன் 
ஏலேலோ சாமி ஏலேலோ
தொடை வாளை நானாவேன் 
ஏலேலோ சாமி ஏலேலோ 
கூட்டிக் கூட்டி எடுப்பாங்க 
ஏலேலோ சாமி ஏலேலோ 
குள்ளாங் கொண்டை நானாவேன் 
ஏலேலோ சாமி ஏலேலோ 
சேத்திச் சேத்தி எடுப்பாங்க 
ஏலேலோ சாமி ஏலேலோ 
சேலு கெண்டை நானாவேன் 
ஏலேலோ சாமி ஏலேலோ

சேகரித்தவர்: சடையப்பன் 
இடம் அரூர், தருமபுரி மாவட்டம்.
-------------