தூது

காதலனைப் பிரிந்திருக்கும் காதலி கிளியையும், குயிலையும் மேகத்தையும் தூதனுப்புவது தமிழிலக்கிய மரபு. பார்ப்பானும், தோழனும், பாங்கியும், பாணனும் காதலர்களிடையே தூது செல்ல தகுதி வாய்ந்தவர்களென்று தொல்காப்பியம் கூறுகிறது. இம்மரபைப் பின்பற்றி நாட்டுப் பாடலிலும் தூது அனுப்புவது வாழ்க்கையின் மரபாகக் கருதப்படுகிறது.
ஓலை யெழுதி விட்டேன்
ஒன்பதாளு தூதுவிட்டேன்
சாடை எழுதி விட்டேன்
சன்னக் கம்பி வேட்டியிலே
அம்பார மேடையிலே
அன்பு ஊஞ்சலாடயிலே
யாரிட்ட சொல்லி விட
அன்புள்ள துரை மகனே?
ஓடுற தண்ணியிலே
ஒரைச்சு விட்டேன் சந்தனத்தை
சேர்ந்ததுவோ சேரலையோ
செவத்தச் சாமி நெத்தியிலே
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: சூரன்குடி, விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
--------------