தென்னைமரம் அடையாளம்

நாற்று நடும்போது பிறரிடமிருந்து விலகி நிற்கும் தனது காதலியின் கையை காதலன் பிடித்துக்கொள்ளுகிறான். அங்குமிங்கும் பார்த்துவிட்டு அவள் கையை விடுவித்துக்
கொள்ளுகிறாள். அவன் பிறர் நிற்பதை எண்ணாமல் தன்னை மறந்தது ஏனென்கிறாள். அவள் அவனைக் கண்டிப்பது போலப் பேசி, தனியாகச் சந்திக்க இடத்தையும் குறிப்பிடுகிறாள்.
காதலன்: தோழி துணை இருக்க
தொட்ட கையி பூமணக்க
எட்டிப் புடிச்ச கையி
எட்டு நாளும் பூமணக்க!
காதலி: ஆத்துக்கு அந்தப் பக்கம்
ஐயரு புஞ்செய் நாத்துக்குள்ளே
ஐயோ மச்சான் கையைவிடும்
கை வளைய சேதமாகும்
காதலன்: அத்தை மகளையின்னு
பச்சை குத்தி நான் வளர்த்தேன்
பச்சை அழிஞ்சுதுண்ணு
பக்கம் கையி போட்டதென்ன?
காதலி: ஆடி மழை ஜோடி மழை
அம்மாசி மின்னிருட்டு
தேடி வரவும் வேண்டாம்
தென்னைமரம் அடையாளம்.
குறிப்பு: தென்னைமரம் அடையாளம் நேரே வாருங்கள். தேடி வரவேண்டாம் என்பது குறிப்பு.
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம் தூத்துக்குடி வட்டாரம் நெல்லை மாவட்டம்.
------------