தெய்வம் கூறுவது

என்னடா சிறுபயலே
என்னை அழைத்ததென்ன
பம்பை பதனமடா
பாலன் சிறு குழந்தை
உடுக்கு பதனமடா
உடையவன் வந்தேனிப்போ
சொன்ன சொல் தவறமாட்டேன்
சொற் பிழைகள் இல்லாமல்
நாவில் குடியிருந்து
நானே குறி பாடுரண்டா
இந்த மனை தனக்கு
எடுத்தேன் சிறு ஏட்டை
ஏட்டை விரித்துப் பார்த்தேன்,
இந்த வகை சொல்வதற்கு
இந்த மனைதனிலே
இருக்குமொரு கன்னியற்கு
மாலைப்பொழுதினிலே
மங்கையவள் சென்றபோது
இருளோ கருத்த நேரம்
எல்லைக்குப் பின்புறமாம்
கண்டு பயந்தாளப்பா
கன்னியந்தப் பெண் கொடியும்
உடலே நடுங்கியவள்
மேலது மேதான் சிலுத்து
மதியோதான் கலங்கி
மங்கையவள் விடு வந்தாள்
பின்னே தெடர்ந்தானப்பா அந்தப்
பேயாண்டி மாமுனியன்
இப்ப வந்து வழக்காடுறான் அந்த
வல்லவனு மாமுனியன்
நானே பிடித்தேனென்று அவன்
நாதன் முன் சொல்லுறான் போ
(உண்டா) இதற்கும் பதில் கேளு
இன்னும் உரைத்து வாரேன்.
அதுலே இருந்து மவள்
படுத்தாளே பாய் தனிலே
மேல் வலியும் கால் வலியும்
மெல்லியற்கும் உண்டுமப்போ.
கண் கட்டும், தலை சுற்றும்
கன்னியற்கு உண்டுமப்போ
நெஞ்சு வலி மாரடைப்பும்
நீதி துரை கண்டேனிப்போ
உண்டுமா இல்லையா
இதற்கும் பதில் கேளு
ஆனாலும் மன்னவனே
அதிகாரி என்னிடத்தில்
கேட்டதற்கு நானுரைத்தேன்
கிருபையுடன் சொல்லிவந்தேன்
(அந்த) வால் முனியை விரட்டுதற்கு
வகை விபரம் சொல்லி வாரேன்
வெள்ளை ஒரு சாவலைத்தான்
வெள்ளி நல்ல கிழமையிலே
நள்ளிரவு வேளையிலே
நடுச்சாம நேரத்திலே
மன்னவனே கேக்குராண்டா
மாதர் துன்பம் தீர்ப்பதற்கு
இன்னையிலே இருந்து
வன்பிணிகள் தீர்ப்பதற்கு
கொடுத்தேன் திருநீறு நான்
கொத்தளத்து வாழ் கறுப்பன்
நெற்றியிலே நீறு பூசி
நினைந்து வா எந்தனைத்தான்
உந்தன் நோய் அகற்றி வாரேன்
உண்மையுள்ள கறுப்பனிப்போ
சொன்னபடி நடந்தாயானால்
துன்ப வினை தீர்த்துத்தாரேன்
என்னப்பா மன்னவனே
இதற்கும் பதில் கேளு
எந்தனுடன் அட்சரத்தை
ஏழை வரிந்து தாரேன்
மண்டலத்துப் பூசைக்குத்தான் மங்கை
எந்தனுக்குப் பூசை செய்ய
ஏழை கொடுத்தாயானால்
முக்காலும் சத்தியமாய்
முன்னின்று காத்துத்தாரேன்.
----------
குறிப்பு: தெய்வம் கூறுவது என்பது தெய்வ ஆவேசம் வந்தவன் குறி கூறுகிறான். குறிப்பிட்ட வீட்டிற்குக் குறி கேட்கிறான். பெண் அந்தி மயக்கத்தில் பயந்து விட்டாள் அவளை பேயாண்டி முனியன் என்ற பிசாசு பற்றிக் கொண்டது உடல்வலியெடுத்தது. வெள்ளிக்கிழமை, நள்ளிரவு வேளையில் பலி கொடுத்தால் முனியன் போய்விடும்.
இது கருப்பன் ஆவேசம் வந்த மனிதன் கூறுவது. இதன் பின் தெய்வம் மலையேறிவிடும்.
சேகரித்தவர்: இடம்:
S.S. போத்தையா தங்கம்மாள்புரம், நெல்லை மாவட்டம்.