நடுகை-1

நடுகை வேலை பள்ளர், பறையர் சாதிப் பெண்கள் மட்டுமே செய்யும் வேலை. பருவ வேலைகளிலேயே நாற்று பிடுங்கி நடுவதுதான் மிகவும் நுட்பமான வேலை. முதுகு குனிந்து நெடு நேரம் சரியான இடைவெளி விட்டு நாற்றை நட்டுச் செல்வதற்குப் பயிற்சியும் அனுபவமும் வேண்டும். நடுகைப் பாடல்கள் காதலைப் பொருளாகக் கொண்டனவும் அனுதாபம், இரக்கம்,கொடுமை, பரிதாபம் இவைகளைப் பொருளாகக் கொண்டனவும் உள்ளன.
நடுகைப் பாடல்கள் தற்பொழுது நிரம்பக் கிடைப்பதில்லை. ஆனால் சுமார் 600 வருஷங்களுக்கு முன்னால் நடுகைப் பாட்டையும் அதற்கு முன் பள்ளர் ஆடும் ஆட்டத்தையும், கண்டும் கேட்டும்,ரங்கநாதர் கோயில் அரையரொருவர் அவற்றைக் கற்றுக் கொள்ளுவதற்காக பறைச்சேரியிலேயே சென்று தங்கிவிட்டாரென்று ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றைக் கூறும் கோயிலொழுகு குறிப்பிடுகிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அழகர் கோயிற் பள்ளியில் நடுகைப் பாடல்கள் பல காணப்படுகின்றன. அதைப் பின்பற்றி எழுந்த பள்ளுகளைனைத்தும் நடுகைப் பாடல்களுக்கு இடம் கொடுக்கின்றன.
தற்பொழுது முயன்றால் இன்னும் மறைந்து விடாமல் வழங்கிவரும் பாடல்களைச் சேகரிக்கலாம்.
நெடு நேரம் குனிந்து நட்ட பெண்ணொருத்தி நிமிர்ந்து பார்க்கும்பொழுது வயல் வரப்பில் அவளது காதலன் அவளை நோக்கிப் பாடுகிறான்.
நாலு மூலை வயலுக்குள்ளே
நாத்து நடும் குள்ளப் பெண்ணே
நாத்து நடும் கையாலே-என்னையும்
சேத்து நடலாகாதோ?
சேகரித்தவர்: வாழப்பாடி சந்திரன்
இடம்: வாழப்பாடி,சேலம் மாவட்டம்.
------------
நாத்துப் பறியே நடுவப் பறியே
நட்டுக் குனிந்து நிமிந்து நிக்கும்
நாணயமே, கண்ணே
நாந்தானடி பாடியது
உன்னைத் தாண்டி பொண்ணே
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
----------