நடுகை-5

bookmark

வயல் வரப்பில் நின்று நாற்றுக் கட்டை இளைஞர்கள், நடும் பெண்களை நோக்கி எறிகிறார்கள்.

அவர்களில் ஒருவன் தன் காதலி வரப்பருகே வரும் பொழுது எல்லோருக்கும் பொதுவாக சில வார்த்தைகளும், அவள் காதில் மட்டும் விழும்படியாகச் சில வார்த்தைகளும் சொல்லுகிறான்.

(எல்லோரும் கேட்க)
நாத்துப் புடுங்கி வச்சேன்
நடுவத் தொளி ஆக்கி வச்சேன்
நாத்து நடும் பொம்பளையா
சேத்து நட மாட்டியாளோ

(காதலி மட்டும் கேட்க)
பொட்டிட்டு மையிட்டு
பொய்யக் கரை தீர்த்த மாடி
நட்டுட்டும் போற புள்ளை
நயன வார்த்தை சொல்லிரம்மா

வட்டார வழக்கு: தொளி-சேறு; பொம்பிளையா-பெண்பிள்ளைகாள்; மாட்டியாளா-மாட்டீர்களா?;பொய்யக்கரை-பொய்கைக் கரை, குளக்கரை; நட்டிட்டு-நட்டு விட்டு; நயன வார்த்தை-கண் சாடை.

குறிப்பு: புள்ளை (நெல்லை மாவட்டத்தில் பெண்களைப் புள்ளை என்பது சில சாதிகளில் வழக்கு) மேற் குறித்த பேச்சு வழக்கில் உள்ளவை. இப்படிப் பிறர் முன் பேசக்கூடாது என்பதைக் குறிப்பாகக் கூறுகிறாள் காதலி.

சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி வட்டாரம்.
---------- 

சரசரணு வந்திருங்க
சவுக்கையிலே இருந்திருங்க
காரியமே உண்டானா
கலகலணு பேசிருங்க

வட்டார வழக்கு: சரசரணு, கலகலணு-விரைவு குறிக்கும் இரட்டைச் சொற்கள் வந்திருங்க,இருந்திருங்க, பேசிருங்க-வந்து விடுங்கள், இருந்து விடுங்கள், பேசி விடுங்கள்.

சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி வட்டாரம்.
----------