நம் ஊர்

ஊர்ப் பெருமை யாரை விட்டது? அவன் பிறந்து வளர்ந்து, காதலின்பம் நுகர்ந்து, அதன் மண்ணில் வியர்வை சிந்த உழைத்துப் பயன் பெற்ற ஊரை விட, எந்த புகழ் பெற்ற ஊரையும் அவன் மதிக்க முடியாது. திருநெல்வேலி, மதுரையிலுள்ளவர்களெல்லாம் அவனது ஊரழகைக் கண்டு அங்கு தங்கிப் போகிறார்களாம! அவ்வூர் பண்ணையார் கருத்தசாமி ஊருக்கே அழகாக விளங்குகிறாராம்.
மதுரை திருநெல்வேலி
மத்தி வத்து கோயில் பட்டி
தப்பி வந்த சனங்களெல்லாம்
தாமதிக்கும் நம்ம ஊரு
உயர்ந்த மரம் தெரியும்
உன்னதமா ஊர் தெரியும்
படர்ந்த மரம் தெரியும்
பாசமுள்ள சாமி ஊரு
மாப்பெருத்த மதுரைக் கடை
மணல் பெருத்த தூத்துக்குடி
பூப் பெருத்த மேல் மாந்தை
போக மனம் கூடுதில்லை
நந்த வனமழகு
நாமிருக்கும் ஊரழகு
கஞ்சாச் செடியழகு
கருத்தச் சாமி நமக்கழகு
சேகரித்தவர் : S.S.போத்தையா
இடம் : நெல்லை மாவட்டம்.
-----------