நரி சொன்ன யோசனை

ஒரு பெரிய மரத்தில் ஆண் காக்கை ஒன்றும் பெண் காக்கை ஒன்றும் கூடு கட்டிச் சந்தோஷமாக இருந்தன. ஒரு நாள்
அம்மரத்திலிருந்தப் பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு இல்லாமல் காக்கை இடும் முட்டைகளை
எல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது. ;காக்கைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
காக்கை ஒரு நரியிடம் சென்று ஆலோசனை கேட்டது. நரி சரியான யோசனை ஒன்றை சொன்னது. ;அந்தப்புரத்தில்
அரசகுமாரி குளிக்கிற இடத்திற்குச் சென்று, அவள் குளிக்கும் போது நகைகளை கழட்டி ஒரு பக்கம் வைப்பாள். அந்த
ஆபரணங்களில் பெரியதான ஒன்றை எடுத்துக்கொள். பலர் பார்க்கும்படி மெல்லப் பறந்து வந்து அவர்களின் எதிரில்
அந்த நகையை பாம்பு இருக்கும் பொந்தில் போட்டு விடு என்றது. ;போட்டால்?. போடு முதலில். அப்புறம் பார் என்றது.
காக்கை தாமதிக்கவில்லை. பறந்து அந்தப்புரத்திற்கு சென்று பார்த்தது அரசகுமாரியின் நகைகளில் ஒரு முத்து மாலை
அதன் கண்ணை உறுத்தியது. அதைக் கொத்தி எடுத்தது. அங்கிருந்த அரச குமாரியின் தோழிகள் காகம்
முத்துமாலையைக் கொத்திக் கொண்டுப் போகுது என்று கூச்சலிட்டனர். உடனே சேவகர்கள் ஓடி
வந்தார்கள். காக்கை மெதுவாக, அவர்களின் கண்ணில் படும்படி பறந்து வந்து, அவர்கள் அருகில் வந்து பார்க்கும் படி
அந்த முத்துமாலையை பாம்பு இருக்கும் பொந்தில் போட்டது. உடனே சேவகர்கள் தம் கையில் இருந்த
ஈட்டிகளால் அந்தப் பொந்தைக் குத்திக் கிளறினார்கள். சீறிக் கொண்டு வெளியே வந்த பாம்பைக் கொன்றார்கள்.
அப்புறம் பார் என்று நரியார் சொன்னதின் அர்த்தம் காக்கைக்குப் புரிந்தது. சேவகர்களும் முத்து மாலையை
எடுத்து சென்றனர்.
சரியான யோசனையால் நிறைவான பலனை அடைந்த காக்கைத் தம்பதிகள் பெருமூச்சி விட்டன.