நான் ஆசை கொண்டேனையா!

bookmark

காதலர்கள் அடுத்து இருக்கும் இரு வீடுகளில் வசிப்பவர்கள். தனியாகச் சந்தித்து உறவாடும் வாய்ப்புகள் பல கிட்டின. அவர்கள் சந்திப்பின் போது உரையாடுகிறார்கள். காதல் கிறுகிறுப்பில் பேசும் பேச்சுகளில் ஆழ்ந்த பொருளைக் காணமுடியுமா?

ஆண்: கரும்பைத் துரும்பாக்கி
கல்தூணை வில்லாக்கி
விரும்பாமப் போற பொண்ணே
வேலி எட்டிப் பாக்கலாமோ
உலக்கை போடும் கைதனிலே
ஓசையிடும் வளையல் சத்தம்
சண்டான வனையல் சத்தம்
சாடை சொல்லிக் கூப்பிடுது

பெண்: கொண்டது குடுமித்தலை
கொஞ்சினது பம்பைத்தலை
அள்ளி முடியுமுன்னே
ஆளைக் காண முடியலியே

ஆண்: ஒட்டுச் சுவருன்னு
ஒரு நாள் ஒதுங்கப் போயி
கட்டிச் சதுரமெல்லாம்
கசறாக உருகுதடி
செம்பாதி நேரத்திலே
சேர்ந்து நீ வந்த புள்ளே-இப்போ
வம்பான வார்த்தை பேசி
வார்த்தைக்கிடம் பண்ணாதே
கண்டு உறவானோம்
கண்டொரு நாள் பேசினோம்
இன்னொரு நாள் பேசுதற்கு
இரங்கலியே உன் மனசு

பெண்: கருப்போ கருப்பழகு
கந்தசாமி தன்னழகு
அருப்பம் அழகுக்கல்லோ
ஆசை வெச்சேன் உன் பேரில் 

ஆண்: கன்னம் புருவத்துக்கும்
கண்ணுருக்கும் தேமலுக்கும்
சின்ன முகத்துக்கும்
சிறியாள் வணக்கினாளாம்

பெண்: வயக்காட்டைப் பாத்துவிட்டு
வரப்போரம் வார சாமி
வரப்பு வழுக்கிச்சின்னு
வகை மோசம் வந்ததையா

ஆண்: எப்படி வழுக்கினாலும்
என்ன செய்யப் போகுதடி
உன் மனசு இருக்கும் போது
ஊக்கத்தைக் கை விடாதே

பெண்: வேப்பம்பூ பூக்காதோ
விடிந்தால் உதிராதோ
நேற்று வந்த தோழனுக்கு
நேரம் தெரியாதோ

ஆண்: மாலையிலே மாட்டைக் கண்டேன்
மலைக்குக் கீழே புல்லைக்கண்டேன்
சாமி மவ கொண்டையிலே
செவ்வரளிப் பூவைக் கண்டேன்

பெண்: மறந்தாலும் மறந்திடுவேன்
மருந்து தின்னா ஆறிடுவேன்
நல்ல நாள் ஆசைவச்சேன்
நான் மறக்கப் போறதில்லை
எண்ணைத் தலையழகா
எழுத்தாணி மீசைக்காரா
கோவில் பிறையழகா
கொல்லுதையா உன் ஆசை
பொட்டுக்கடுக்கத்துக்கும்
ஒதுக்கி விட்ட சிமிட்டாவுக்கும்
ஒட்டிய கிராப்புகளுக்கும்
நான் ஆசை கொண்டேனையா

வட்டாரவழக்கு: கசறு-கயிறு; அரும்பம்-மீசை; வணக்கினாள்-வணக்கம் செய்தாள்.
குறிப்பு: 1. தன் மனத்தை கரும்புக்கும் கல்தூணுக்கும் ஒப்பிட்டு கரும்பை துரும்பாக இளைக்கவும் கல்தூணை வில்லாக வளைக்கவும், காதலிக்குச் சக்தியுண்டு என்கிறான். சண்டாள வளையல்-வளையல் ஒலி தன்னை வேதனைக்குள்ளாக்குவதால் அதனை சண்டாள வளையல் என்று திட்டுகிறான். குடுமித்தலை அவிழ்ந்து விட்டது.

2. காதல் களிப்பில் நேரம் போனது காதலனுக்குத் தெரியவில்லை. பூத்த வேப்பம் பூ உதிர்ந்து விட்டது. அது பூத்திருந்த காலமெல்லாம் அவர்கள் காதல் இன்பத்தில் திளைத்திருந்தனர்.

சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு 
இடம் துரத்துக்குடி வட்டாரம், நெல்லை மாவட்டம்.
---------