நான் போறேன்

bookmark

முறைப் பெண், முறைமாப்பிள்ளை என்ற உறவு ஒருவருக்கு மணமான பின்பும் நீடிக்கலாம். அப்பொழுது நெருக்கமான காதல் பேச்சுக்கள் பேசிக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் உடலுறவு கொள்வதே தவறெனக் கருதப்படும்.இப்பேச்சுக்கள் மனைவி முன்போ, கணவன் முன்போ நடை பெறலாம். இவ்வழக்கம் இப்பொழுது மறைந்து வருகிறது.ஏனெனில் மணம், உறவு முறைகளை மீறி சொத்துரிமையின் அடிப்படையிலே நடைபெறுகிறது.

பெண்ணும் குடுத்துடுவா...`நான் உனக்குக் கணவனாகும் பேறு இல்லை. உன் மகனுக்கு எங்கள் பெண்ணைக் கொடுப்போம். என் மகனுக்கு உன் பெண்ணை எடுப்போம்` என்ற உறவு வகையில் பாடல் அமைந்துள்ளது.

முறைப்பெண் :

எண்ணெய்த்தேச்சி தலைமுழுகி
என் தெருவே போற மச்சான்
ஆசைக்கு ஒரு நாளைக்கு
அனுப்புவாளோ உன் தேவி

முறை மாப்பிள்ளை :
பெண்களும் குடுத்துடுவா
பெண் குடுத்து வாங்கிடுவா
என்னைக் கொடுத்துவிட்டு
இருப்பாளோ என் தேவி

அவன் மனைவி :
குலைவாழை நெல் உருவி
குழையாமல் சோறு பொங்கி
இலை வாங்கப் போனவரை
இன்னும் வரக் காணலியே
சாமியக் காணலன்னு
சபைகளெல்லாம் தேடிப்பார்த்தேன்
சக்களத்தி மடிமேலே
சாஞ்சிருக்கும் வேளையிலே

முறை மாப்பிள்ளை :
தேங்காய் முழி அழகி
தெய்வக்கனி வந்து நிக்கா
மாங்கா முழியழகி
மடியவிடு நான் போறேன்

மனைவி :
என்னையக் கண்டொடனே
கால்பதறி, கைபதறி
வீட்டுக்கு வந்தொடனே
விளக்கேத்தி நான் பார்த்தேன்

சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : மீளவிட்டான்.தூத்துக்குடி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.